ஞாயிறு, 1 ஜூலை, 2012

வீட்டுவசதிவாரிய வீடு, மனைகளின் விலை அதிகரிப்பு : வழிகாட்டி மதிப்பு உயர்வே காரணம்

வழிகாட்டி மதிப்பு உயர்வு அடிப்படையில், வீட்டுவசதி வாரியத்தின் விற்பனையாகாத மற்றும் புதிய வீடுகள், மனைகளின் விலைகளை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வீட்டுவசதி வாரியத்தில் வீடு, மனை வாங்குவோருக்கான செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நிலங்களுக்கான அரசின் திருத்தியமைக்கப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்புகள், கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
முன் எப்போதும் இல்லாத வகையில், பெரும்பாலான இடங்களில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை வழிகாட்டி மதிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், வீடு, மனைகளின் சந்தை மதிப்பும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மதிப்பு அதிகம் : பல்வேறு இடங்களில், இப்போதைய சந்தை மதிப்பைவிட அதிகபட்சமாக இருக்கும் வகையில், வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்பட்டுள்ளன. வழிகாட்டி மதிப்பு உயர்வை தொடர்ந்து, தனியார் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களது புதிய திட்டங்களில் வீடு, மனைகளில் விலையை நிர்ணயிக்கும்போது, வழிகாட்டி மதிப்பு உயர்வை கருத்தில் கொண்டு, அதிகபட்ச அளவில் நிர்ணயிக்கத் துவங்கியுள்ளன.
இதேபோல், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், புதிதாக விற்பனை செய்ய உள்ள வீடு, மனைகளின் விலையை உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.

தீர்மானங்கள் : அண்மையில் நடந்த வீட்டுவசதி வாரிய கூட்டத்தில், இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
வாரியத்தின் அனைத்து கோட்டங்கள், பிரிவுகளில் விற்பனையாகாத குடியிருப்பு மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு, வணிக மனைகளுக்கு, 2012-13ம் நிதி ஆண்டிற்கான விலை நிர்ணயம் தொடர்பாக, அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.
விற்பனையாகாத வீடுகள் மற்றும் மனைகளின் தற்போதைய சந்தை மதிப்பு, வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், புதிய விற்பனை விலையை நிர்ணயம் செய்யலாம்.
வாரிய அதிகாரிகளின் அறிக்கை பெறப்படாத திட்டங்களுக்கு இப்போதைய சந்தை விலை, வழிகாட்டி மதிப்பு, வாரியம் ஏற்கனவே நிர்ணயித்த நடைமுறை விலை ஆகியவற்றை ஆய்வு செய்து, இதில் எது அதிகமோ, அதை தற்போதைய விற்பனைக்கான விலையாக நிர்ணயிப்பது என்ற விலை நிர்ணயக்குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தால்... : சந்தை விலை, வழிகாட்டி மதிப்பைவிட வாரியத்தின் நடைமுறை விலை அதிகமாக உள்ள இடங்களில், நடைமுறை விலையையே வாரியத்தின் விற்பனைக்கான ஆரம்ப விலையாக நிர்ணயித்துக் கொள்ளலாம்.
நடைமுறை விலை, சந்தை விலையைவிட வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், இப்போதைய வழிகாட்டி மதிப்பை வாரியத்தின் விற்பனைக்கான ஆரம்ப விலையாக நிர்ணயிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 சதவீதம் வரை அதிகரிக்கும் : இத்தீர்மானத்தின்படி, வீட்டுவசதி வாரியத்தால் ஏற்கனவே உருவாக்கப்பட்டு, விற்பனையாகாமல் உள்ள வீடு, மனைகளின் விலைகள் முந்தைய விலையைவிட, 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்போது புதிதாக உருவாக்கப்பட்டு, குலுக்கல் அறிவிக்க வேண்டிய நிலையில் உள்ள திட்டங்களின் வீடு, மனைகளின் விலையையும், புதிய வழிகாட்டி மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு அடிப்படையில் மறு ஆய்வு செய்து, புதிதாக நிர்ணயிக்க வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வீட்டுவசதி வாரியத்தின் இந்நடவடிக்கையால், குலுக்கல் முறையில் வீடு வாங்க விரும்புவோர், கடந்த ஆண்டு நிலவரத்தை காட்டிலும் கூடுதலாக, 20 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 17 ஜூன், 2012

ஊழல் வழக்குகளை பதிவு செய்ய நிபந்தனைகள்

ஊழல் வழக்குகளில் பூர்வாங்க விசாரணையில், முழு விவரங்கள் தெரியவந்தாலும், விரிவான விசாரணைக்கு பிறகே, வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் எளிதில் தப்பிவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை உருவாக்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகளை கொண்டிருந்தாலும், இப்பிரிவானது பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஊழல் புகார்கள் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்துவதற்கான அளவுகோல் குறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் இருந்து, கடந்த மாதம் 22ம் தேதி அனைத்துத் துறை செயலர்கள், துறை தலைமை அதிகாரிகள், தலைமை செயலக அனைத்துத் துறை தலைமை அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடிதத்தின் விவரம்
ஊழல் புகார்கள் தொடர்பாக, பூர்வாங்க மற்றும் விரிவான விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் உத்தரவிடுவது தொடர்பாக, இதுவரை எந்த அளவுகோலும் இல்லை. இதை கருத்தில் கொண்டு, இத்தகைய விசாரணைகளை எப்படி மேற்கொள்வது என்பதற்கான அளவுகோல்கள் பின்வருமாறு நிர்ணயிக்கப்படுகின்றன.இதில் பூர்வாங்க விசாரணையை எப்படி மேற்கொள்வது என்பது தொடர்பாக, ஐந்து அடிப்படை விதிமுறைகளும், விரிவான விசாரணை தொடர்பாக, ஆறு விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.இதன்படி, ஒரு நேர்மையான அதிகாரி மீது யாராவது ஊழல் புகார் தெரிவித்தால், அது தொடர்பாக அந்த அதிகாரியின் நற்பெயருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அவரது நடத்தை குறித்து, கடிதம் உள்ளிட்ட எந்த ஆவணத்திலும் அவரது பெயரை குறிப்பிடாமல் ரகசியமாக விசாரிக்க வேண்டும். அந்த அதிகாரியின் அந்தஸ்து மற்றும் புகாரில், அவரது பங்கு ஆகியவற்றை விசாரணையின் போது கருத்தில் கொள்ள வேண்டும்.அடுத்தகட்டமாக, பூர்வாங்க விசாரணைக்கு முந்தைய நிலையில், புகார் கூறப்பட்ட அதிகாரியின் செயல்பாடுகள் குறித்து தலைமை அதிகாரியின் விருப்பத்தின் அடிப்படையில் மிக ரகசிய விசாரணை நடத்தலாம்.
விரிவான விசாரணை
ஒரு குறிப்பிட்ட அதிகாரி மீது வந்த புகாரின் அடிப்படையில் பூர்வாங்க விசாரணையின் போது, அந்த வழக்கை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைத்தாலும், விரிவான விசாரணை நடத்திய பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.சொத்து குவிப்பு தொடர்பான புகார்கள் தொடர்பான பூர்வாங்க விசாரணையில், அந்த நபர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்தது உறுதியானாலும், விரிவான விசாரணை நடத்தி தான் உரிய ஆவணங்களை திரட்ட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்பு என்ன?
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பூர்வாங்க விசாரணையில் முக்கிய தடயங்கள் சிக்கும் நிலையில், அவற்றை வைத்து வழக்கு பதிவு செய்து, அந்த நபரின் வீட்டை சோதனையிட்டால் வழக்குக்குத் தேவையான பெருமளவு ஆவணங்களை கைபற்றலாம்.ஆனால், இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, பூர்வாங்க விசாரணையில் முக்கிய தடயங்கள் குறித்து தெரியவந்தால், வழக்கு பதிவு செய்து அவற்றை கைபற்றாமல், விரிவான விசாரணை நடத்தப்பட்டால் ஏற்படும் காலதாமதம் தடயங்களை மறைக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு உதவும். இதனால், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், தடயங்களையும் கைபற்றுவதற்கான வாய்ப்புகள் பறிபோகும். இதனால், ஊழல் புகார்கள் நிரூபிக்க முடியாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க நிறைய வாய்ப்புண்டு.ஏற்கெனவே, லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணை நடைமுறைகள் தொடர்பான வழிக்காட்டி கையேடு உள்ளது. இதன்படியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் புதிய அளவுகோலுக்கான தேவை என்ன என்பது புரியவில்லை.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

வியாழன், 7 ஜூன், 2012

சென்னை, மதுரை, கோவையில் நகர்ப்புற கட்டமைப்பு வசதிகள் மேம்படுமா?

நகர்ப்புறப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, விவசாய நிலங்களை குடியிருப்பாக மாற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்த தமிழக அரசு, மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளது. இதனால், வீட்டு வசதி. நகர்ப்புற அமைப்புகளில் முன்னேற்றம் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் நகர்ப்புறப் பகுதிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,), செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதில், தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
நிபந்தனைகள்:மத்திய அரசின் நிதி உதவியுடனான இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும், அதிக நிதி உதவி பெறவும், நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகம், நில நிர்வாகம், பத்திரப்பதிவு போன்ற துறைகளின் பணிகள் தொடர்பாக, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளன.இந்த நிபந்தனைகளை, அந்தந்த மாநில அரசுகள் நிறைவேற்றுவதன் அடிப்படையிலேயே, புதிய திட்டங்களுக்கான அனுமதியும், நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிபந்தனைகளை நிறைவேற்ற தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், முனைப்பாக செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் நில பரிவர்த்தனையில் பத்திரப்பதிவுக்கான முத்திரைத்தீர்வை, இந்த நிதி ஆண்டு முதல், 1 சதவீதம் குறைக்கப் பட்டு உள்ளது.இதன் அடுத்தகட்டமாக, நகர்ப்புற
 பகுதிகளில், விவசாய நிலங்களை பிற பயன்பாடுகளுக்கு மாற்றுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப் பட்டது. நாடு முழுவதும், 52 நகரங்களில் இந்த நிபந்தனையை நிறைவேற்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநில அரசு ஒப்புதல்:இது தொடர்பாக, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., அண்மையில் வெளியிட்ட திட்டங்களின் நடவடிக்கை அறிக்கையில், ""சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட, 52 நகரங்களில் விவசாய நிலங்களை குடியிருப்பு உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு மாற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த, அந்தந்த மாநில அரசுகள் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளன. இதற்கான நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என குறிப்பிடப் பட்டு உள்ளது.அதே சமயம் தற்போது,மத்திய அரசு சந்தித்து வரும் மொத்த வளர்ச்சிப் பின்னடைவில், முழுவீச்சில் இம்மாதிரித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமா என்பது இனித் தெரியும்.
பாதிப்பு என்ன?நகர்ப்புற வளர்ச்சி காரணமாக, விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் நடவடிக்கைகளை, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தீவிரப்படுத்தி உள்ளன. இதனால், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு குடியிருப்பு வசதி கிடைக்கும் என, எடுத்துக் கொண்டாலும், இது நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தியை பாதிக்கும்.எனவே, விவசாய நிலங்களை குடியிருப்புகளாக மாற்றுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
விலை குறையுமா?இதுகுறித்து, பல்வேறு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது:விவசாய நிலங்களை குடியிருப்பு பயன்பாட்டுக்கு மாற்றும் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரி வருகிறோம். இதன் மூலம், புறநகர்ப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மனைகள் விற்பனைக்கு வரும். இதனால், வீட்டுமனைகளின் விலை உயர்வு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆனாலும் இன்றைய கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைவால், எந்த அளவுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சிறக்கும்என தெரியவில்லை. அதேபோல, அன்னிய நேரடி மூலதன முதலீடு குறைந்த நிலையில், இத்துறைக்கு தேவைப்படும் மூலதனம் எங்கிருந்து வரும் என்பதும், இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சென்னையில் விவசாய நிலம் எவ்வளவு?
சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின், இரண்டாவது மாஸ்டர் பிளான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், 1973ம் ஆண்டு நிலவரப்படி, 73,689 ஹெக்டேர் நிலங்கள் விவசாய நிலங்களாக இருந்தன. 1977ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு வரை, விவசாய நிலங்களை, பிற பயன்பாட்டுகளுக்கு மாற்றுவது தொடர்பாக, 725 திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்கியது. இதனால், இப்போதைய நிலையில், 7,295 ஹெக்டேர் நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளன. நிலபயன்பாடு வழிமுறைகள் எளிமைப்படுத்தப் பட்டால், இந்த நிலங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கைக்கு மாறிவிடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

திங்கள், 4 ஜூன், 2012

ஒரு மனைக்கு ரூ.6.40 லட்சம் வசூலிக்க திட்டம்: கீழ்கட்டளை நிலப்பிரச்னைக்கு புதிய தீர்வு

கீழ்கட்டளை பகுதியில் கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்களை, ஒரு மனைக்கு, 6.40 லட்ச ரூபாய் வீதம் வசூலித்து வரன்முறைப்படுத்த, வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்கட்டளையில் வீட்டு வசதி வாரிய திட்டத்துக்காக, 1990ம் ஆண்டு, 56.57 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து, நில உரிமையாளர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால தடை பெற்றனர்.

இழப்பீடு நிர்ணயம்இருப்பினும், இந்நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து, வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக 53 லட்ச ரூபாயை பூந்தமல்லி கோர்ட்டில் அதிகாரிகள் செலுத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில், 1999ம் ஆண்டு, ஐகோர்ட்டின் வெவ்வேறு
நீதிபதிகள் தனித்தனியாக வழங்கிய தீர்ப்புகளில், வீட்டு வசதி வாரிய அறிவிப்பு
செல்லாது என அறிவித்தனர்.


இதன் பிறகும், கீழ்கட்டளை மக்களுக்கும், வீட்டு வசதி வாரியத்துக்கும் இடையிலான சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.

வாரியம் நடவடிக்கைஇது தொடர்பாக வீட்டு வசதி வாரியம், 2006ல் தாக்கல் செய்த ஒரு மேல்முறையீட்டு வழக்கில் தங்களுக்கு கிடைத்த சாதகமான தீர்ப்பை அடுத்து, மற்ற வழக்குகளுக்கும் இதை உறுதி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்காக, 1993ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு, 2011ம் ஆண்டு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

'தினமலர்' செய்தி எதிரொலி
வாரியத்தின் இந்நடவடிக்கையால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இது தொடர்பான விரிவான செய்தியை, ஆகஸ்ட் 3ம் தேதி, "தினமலர்' வெளியிட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளை வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், தன்சிங் எம்.எல்.ஏ., ஆகியோர், வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுடன் சென்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வு செய்தனர்.


புதிய முடிவுஇந்த ஆய்வில் தெரிய வந்த விவரங்கள் அடிப்படையில் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் புதிய முடிவை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வீட்டு வசதி வாரிய கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம்:
கீழ்கட்டளையில் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்ட, 56.57 ஏக்கர் நிலம் தொடர்பான விவகாரத்தில், இனம் 3ல் வரும் நிலங்களுக்கு செலவு செய்யப்பட்ட தீர்வு தொகைக்கு கூட்டு வட்டியின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட, 3.20 லட்சத்தை இரண்டு மடங்காக அதாவது மனை ஒன்றுக்கு, 6.40 லட்ச ரூபாயை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலித்து ஆக்கிரமிப்புகளை வரைமுறை செய்ய, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி ஒப்புதல் பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பான கோப்புகள், வீட்டு வசதி மற்றும் நகர் ஊரமைப்புத் துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தி.நகர் கடைகளுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைக்குமா?

விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால், சீல் வைக்கப்பட்ட தி. நகர் கடைகளை திறந்திருப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பதா என்பது குறித்து, ஐகோர்ட் இன்று முடிவு செய்கிறது.
சென்னை தி. நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, 25 வணிக வளாகங்களுக்கு சி.எம்.டி.ஏ., மாநகராட்சி அதிகாரிகள் கடந்த அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து வியாபாரிகள் தொடுத்த வழக்கில், சீல் வைக்கப்பட்ட கடைகளை ஆறு வாரத்துக்கு திறக்க அனுமதித்து, கடந்த ஜனவரி 9ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதில் இறுதி முடிவை, சென்னை ஐகோர்ட் எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த, சென்னை ஐகோர்ட், சீல் வைக்கப்பட்ட கடைகள் திறந்திருப்பதற்கான கால அவகாசத்தை முதலில் எட்டு வாரங்களுக்கு நீட்டித்தது.
அரசு பதில் மனு
நீதிபதி மோகன் குழு பரிந்துரைகள் அமலாக்குவது குறித்து முடிவெடுக்க, மேலும் கால அவகாசம் வேண்டும் என கோரியதன் அடிப்படையில் இவ்வழக்கு, ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அது வரை, சீல் வைக்கப்பட்ட தி. நகர் கடைகள் திறந்திருப்பதற்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறைபடுத்தும் வகையில், நகரமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்து, 113 சி என்ற புதிய பிரிவை சேர்க்க இருப்பதாகவும்,
சட்டசபையின் அடுத்த கூட்டத் தொடரின் போதுதான் இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
அதற்காக இன்னும் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என குறிப் பிடப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்படுமா?
இதையடுத்து, இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசின் பதில் மனு அடிப்படையில், நீதிபதி மோகன் குழு பரிந்துரைகளை அமலாக்கும் வகையில், கூடுதல் கால அவகாசம் அளிப்பதா என்பது குறித்து கோர்ட் முடிவு செய்யும். அதுவரை, தி.நகர் கடைகள் திறத்திருக்க அனுமதிப்பதா என்பதும் அப்போதுதான் தெரியவரும்.
சி.எம்.டி.ஏ., நிலை என்ன?
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத, சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த வழக்கில் அரசு, தனது தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களின் மொத்த எண்ணிக்கை குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சி.எம்.டி.ஏ., பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், இதற்கான பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றும், 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், இப்போது வரை விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய பதில் மனுவை தாக்கல் செய்ய சி.எம்.டி.ஏ., தயாராகி வருகிறது.
இதனால், விதிமுறைகளை மீறி
கட்டப்பட்ட தி.நகர் கடைகள் நாளைமுதல் திறந்திருக்குமா என்பது, ஐகோர்ட்டின் இன்றைய முடிவை பொறுத்தே அமையும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கோயம்பேடு உணவு தானிய அங்காடி திட்ட செலவுக்கு ரூ.128 கோடி

கோயம்பேடில் உணவு தானிய அங்காடி அமைக்க அரசு அனுமதித்தும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆறு ஆண்டு தாமதித்ததால், திட்ட மதிப்பு இரு மடங்கிற்கு மேல் அதிகரித்து உள்ளது. இதனால், திட்டத்தில் உருவாக்கப்பட உள்ள கடைகளின் விலையும் உயர வா#ப்பு உள்ளது.
ஜார்ஜ் டவுன் பகுதியில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், பூ, காய், கனி, உணவு தானியம், ஜவுளி மற்றும் இரும்பு பொருட்கள் மொத்த விற்பனை அங்காடிகளை, அப்போது நகருக்கு வெளியில் இருந்த கோயம்பேடு பகுதிக்கு மாற்ற, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன், அர” முடிவு எடுத்தது. முதல் கட்டமாக, கோயம்பேடில், பூ, காய், கனி அங்காடிகள், 1996ல் இடமாற்றப் பட்டன.
கொள்கை, செயலில் "வேகம்'
இதை அடுத்து, மற்ற அங்காடிகளை மாற்றுவதில் கொள்கை அளவிலேயே மெத்தனம் ஏற்பட்டது. கோயம்பேடில், உணவு தானியம், ஜவுளி மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை அமைக்கும் திட்டம், கடந்த 2005ம் ஆண்டில் தான் இறுதி செய்யப்பட்டது.
15.60 ஏக்கரில், 61.85 கோடி ரூபா# மதிப்பில், 500 கடைகள் கொண்ட உணவு தானிய அங்காடிவளாகத்தை, சி.எம்.டி.ஏ., மூலம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப் பட்டது. அடுத்து, கடைகளை ஒதுக்க குலுக்கல் நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலையில், பணிகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.
கடந்த ஆண்டு, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், இந்த திட்டங்கள் மீண்டும் வேகமெடுத்தன. கோயம்பேடில் உணவு தானிய அங்காடி வளாகம் அமைக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப் படும் என, அண்மையில் தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது. இதையடுத்து, இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்யும் பணிகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் துவக்கினர்.

செலவு விர்ர்ர்...
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
திட்டத்துக்காக ஏற்கெனவே கையகப் படுத்தப் பட்ட நிலத்தின் ஒரு பகுதி, மெட்ரோ ரயில் திட்டத்துக்காக எடுத்துக்கொள்ளப் பட்டு விட்டதால், வேறு நிலம் கையகப் படுத்தப் பட்டு, பணிகளை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
ஏற்கெனவே இறுதி செய்யப்பட்ட திட்ட மதிப்பான, 61.85 கோடி ரூபாயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது. இதனால், 128.41 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பு மாற்றம்
இடமாற்றம், திட்ட மதிப்பு மாற்றம் காரணமாக அரசிடம் இருந்து புதிதாக நிர்வாக ஒப்புதல் வாங்க வேண்டும். செலவு அதிகரிப்பு காரணமாக, திட்டத்தை இரண்டு கட்டங்களாக நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
இவ்வாறு அதிகாரி கூறினார்.

ஞாயிறு, 20 மே, 2012

சிங்கப்பூர், ஹாங்காங் மாதிரியில் சென்னையில் போக்குவரத்து திட்டங்கள்: சி.யு.எம்.டி.ஏ., முடிவு

சிங்கப்பூர், ஹாங்காங் நரகங்களில் உள்ளது போன்ற போக்குவரத்து வசதிகளை, சென்னையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக போக்குவரத்து அதிகாரிகளை, இந்நகரங்களுக்கு அனுப்ப, சி.யு.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.  
வரைவு விதிமுறை:
சென்னையில், போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைப்பதுடன், ஒரே பயணச் சீட்டில், அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்க, ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் (சி.யு.எம்.டி.ஏ.,) ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கான வரைவு விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில், இனி வருங்காலங்களில் நிறைவேற்றப்பட உள்ள போக்குவரத்து தொடர்பான திட்டங்களை, நெறிப்படுத்தும் அதிகாரம் சி.யு.எம்.டி.ஏ.,வுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில், போக்குவரத்து தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும்போது, அதில் எத்தகைய வசதிகள் இடம்பெற வேண்டும்; எத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை வேண்டும் போன்றவற்றை உள்ளடக்கியதாக, இப்புதிய வரைவு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 
லண்டன் மாதிரி:
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழும சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்லாது, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில், இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இவன்றின் அடிப்படையில், சென்னைக்கான போக்குவரத்து ஒருங்கிணைப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 
வெளிநாடு பயணம்:
இது தொடர்பாக, சி.யு.எம்.டி.ஏ., உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், சென்னையில், போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகள் குழுவை, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்குக்கு அனுப்பி, அங்கு நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்தும், அவை நிறைவேற்றப்பட்ட விதங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். அந்தந்த துறை தலைமை அதிகாரிகள் மூலம், இதற்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசின் அனுமதி பெறப்பட்ட பின், இக்குழுவின் வெளிநாட்டு பயணம் இறுதி செய்யப்படும். அடுத்த சில மாதங்களுக்குள், இதற்கான நிர்வாக நடவடிக்கைகள் முடிக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

சனி, 19 மே, 2012

ஆவணங்களை இருட்டடிப்பு செய்ய சி.எம்.டி.ஏ., முயற்சி!

தகவல் அறியும் உரிமை சட்டப்படி, அடிப்படை தகவல்கள் அடங்கிய கையேட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளை, பொது மக்கள் பயன்படுத்த முடியாதபடி, சி.எம்.டி.ஏ., தடை செய்துள்ளது. இதனால், வெளிப்படையான நிர்வாகம் என்பது, இத்துறையில் கேள்விக்குறியாகி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டப்படி, ஒவ்வொரு அரசுத் துறையிலும், அத்துறையின் அடிப்படை பணிகள், அதற்கான நிர்வாக நடைமுறைகள், பொது மக்கள் அணுக வேண்டிய அதிகாரிகள் குறித்த விவரங்கள், பொது தகவல் அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 4(1)ஏ பிரிவின்படி, இத்தகைய விவர கையேட்டை வெளியிடுவது, கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த கையேட்டின் அனைத்து பிரிவுகளும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆவணமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது.
 சி.எம்.டி.ஏ.,வில்... :
 இத்தகைய கையேடுகளை, ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும் என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகதத்தில் உள்ள பெரும்பாலான அரசுத் துறைகள், இத்தகைய கையேடுகளை முறையாக வெளியிடுவதில்லை என, பரவலாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதில், சி.எம்.டி.ஏ., நிர்வாகம், தகவல் அறியும் உரிமை சட்ட கையேட்டை, அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒன்று முதல், 18 பிரிவுகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய ஆவணம், பொது மக்களின்பயன்பாட்டுக்கான ஆவணமாகும்.
ஆனால், இதில், 10, 11 ஆகிய பிரிவுகளை மட்டும், பொது மக்கள் பார்க்க முடியாத வகையில், சி.எம்.டி.ஏ., நிர்வாகம் தடை செய்து வைத்துள்ளது.
ஆர்வலர்கள் அதிர்ச்சி :
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, மாநில தகவல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சி.எம்.டி.ஏ.,வின் இச்செயல்பாடு, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளிப்படை தன்மையை முடக்கும் வகையில், இச்செயல் அமைந்துள்ளது. இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மீது, தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எதில் ஆர்வம்? :
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தற்போது, கலெக்டர் அலுவலக சம்பந்தப்பட்ட புகார்களை அறிய, மக்கள் அதிகளவில்ஆர்வம் காட்டுகின்றனர். மற்ற இலாகாக்கள், அதன் நடைமுறைகள், அதை நிர்வகிக்கும் வழிமுறைகள் குறித்து மக்களுக்கு அதிக அனுபவம் இல்லாததால், அதில் ஆர்வம் காட்டுவதில்லை.ஆனால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைப்பில் உள்ள அதிகார மையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதைப்பற்றிய விவரங்கள், அவர்கள் பணிப்பொறுப்புகள், அவர்கள் செயல்படும் நிர்வாகத் தலைமை குறித்த விவரங்களை மறைக்கும் விதத்தில் செயல்படுவது, எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதே, இப்போதைய கேள்வி.

புதன், 8 பிப்ரவரி, 2012

விதிமீறல் கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பதில் சி.எம்.டி.ஏ., மெத்தனம்!

விதிமீறல் கட்டடங்களுக்கு, தினசரி அடிப்படையில் அபராதம் விதிக்க, இரண்டாவது மாஸ்டர் பிளானில் வழிவகை செய்யப்பட்டுள்ளபோதிலும், கடந்த மூன்றாண்டுகளாக, இதன்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில், இதுவரை 2007ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன் வரையிலான, கட்டடங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டடங்களை, நீதிபதி மோகன் குழு பரிந்துரைகள் அடிப்படையில் வரன்முறை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.இதன் பின் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.ஏ.,வுக்கு எந்த தடையும் இல்லை. அப்படியிருந்தும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் 2007ம் ஆண்டுக்கு பின் கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தவில்லை. 2007 ஜூலைக்கு பின்...:2007ம் ஆண்டு ஜூலைக்கு பின் சென்னை மற்றும் புறநகரில் சி.எம்.டி.ஏ.,வும் உள்ளாட்சி அமைப்புகளும் நடத்திய ஆய்வில், சுமார் 10,881 கட்டடங்கள் ,விதி மீறி கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதில் 7,127 கட்டடப் பணியை நிறுத்த அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் அளிக்கப்பட்டதில் 4,507 கட்டடங்களுக்கு இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் எதுவும் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு, விதிமீறல் கட்டடம் என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இக்கட்டடங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக அபராதம் கூடவிதிக்கப்படவில்லை.அபராதம்
விதிக்க வழி உண்டு?கட்டட விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கருத்தில் கொண்டு இரண்டாவது மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியான வளர்ச்சி, விதிமுறைகளில் சாதாரண குடியிருப்பு முதல், அடுக்குமாடி வணிக வளாகம் வரை, அனைத்து கட்டடங்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் 38வது விதியில், கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:விதிகள்ஒன்று முதல் 37வரையுள்ள ஒழுங்குமுறைகள் எதனையும், எவர் மீறினாலும் ,அவர் முதலில் 1,000 ரூபாய் அபராதமாக செலுத்தும்படி தண்டிக்கப்படுவார். இந்த அபராதம் விதிக்கத்தக்க விதிமீறல் தொடரும் நிலையில், முதல் அபராதம் விதிக்கப்பட்ட நாளில் இருந்து, ஒவ்வொரு நாளுக்கும் 50 ரூபாய் வீதம், அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.இவ்வாறு விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதிகாரிகள் மெத்தனம்:கடந்த 2008ம் ஆண்டு இரண்டாவது மாஸ்டர் பிளானுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்து, இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது. இருப்பினும், இப்போது வரை, எந்த கட்டடத்துக்கும் இந்த விதிகளின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படவில்லை. விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை தடுக்காதது, கோர்ட் தீர்ப்பை அமலாக்காதது போன்று, மாஸ்டர் பிளானில் வழங்கப்பட்டுள்ள அபராதம் விதிப்பதை செயல்படுத்துவதிலும், சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.இது குறித்து சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தபோது,
 "நிர்வாக ரீதியாக மேலதிகாரிகளிடமிருந்து இதற்கான எந்த அறிவுறுத்தல்களும் வராததால் அபராதம்விதிக்கவில்லை'என்றனர்.இன்னும் 14 நாள்கள்...:சென்னை தி. நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக சீல் வைக்கப்பட்ட கடைகளை ஆறு வாரங்களுக்கு திறக்க கடந்தமாதம் ஒன்பதாம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இந்த வழக்கை முன்னுரிமை அடிப்படையில் அடுத்த ஆறு வாரங்களுக்குள் ஐகோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அப்போது உத்தரவிட்டது.இதன்படி தி. நகர் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல், கடந்த மாதம் 10ம் தேதி சி.எம்.டி.ஏ., மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டன.இதில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த கால அவகாசத்தில் இன்னும் 14 நாள்களே ö இருப்பதால் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தி. நகர் கடைகள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை (பிப். 7) விசாரணைக்கு வருகிறது.










வியாழன், 26 ஜனவரி, 2012

விதிமீறல் கட்டடங்கள்: தமிழக அரசின் மவுனம் கலையுமா?

விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில், ஐகோர்ட் உத்தரவு காரணமாக, தன் மவுனத்தை கலைக்க வேண்டிய கட்டாய சூழல், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில், அரசு வெளிப்படுத்தும் நிலைப்பாடு தான், சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கைக்கு அடிப்படையாக அமையும். சென்னை தி.நகரில், விதிமீறல் புகார் காரணமாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 25 வணிக வளாகங்களுக்கு வைக்கப்பட்ட சீல், கடந்த 10ம் தேதி, தற்காலிகமாக அகற்றப்பட்டது. இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு, சென்னை ஐகோர்ட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு, கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை, தமிழக அரசும், சி.எம்.டி.ஏ.,வும், வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசின் நிலை என்ன? விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான வழக்கில், கடந்த ஓராண்டு காலமாக, தன் நிலைப்பாடு குறித்து தமிழக அரசு சார்பில், எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யபடவில்லை என்பது, விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில், 2006ல், ஐகோர்ட் தீர்ப்பளித்தபோது, ஆட்சிப் பொறுப்பில் தி.மு.க., இருந்தது. இதனால், விதிமீறல் கட்டடங்களுக்கு ஆதரவான நிலையை, தமிழக அரசு எடுத்தது. இதற்காக, முதலில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பின், 2007ல், அவசர சட்டம் கொண்டு வந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு, இந்த சட்டத்தை நீட்டிப்பும் செய்தது. இவ்வாறு, கடந்த ஐந்தாண்டு காலமாக, விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கையை, முந்தைய தி.மு.க., அரசு தடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம், அ.தி.மு.க., அரசு பதவியேற்றது. இதன்பின், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுகள், கண்காணிப்புக்குழு பிறப்பித்த உத்தரவுகளை தடுக்கும் வகையில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இதில் தங்களது நிலைப்பாடு குறித்து, கோர்ட்டில் எவ்வித பதில் மனுவையும், தமிழக அரசு தாக்கல் செய்யாமல் உள்ளது. இந்நிலையில், ஐகோர்ட் அண்மையில் பிறப்பித்த உத்தரவின் மூலம், இந்த வழக்கில், தன் மவுனத்தை கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
என்ன நடக்கும்? இப்போதைய சூழலில், கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய பதில் மனுவுக்கான குறிப்புகளை இறுதி செய்வதற்கான பணிகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், ஐகோர்ட் மற்றும் கண்காணிப்புக்குழு உத்தரவுகளை நிறைவேற்ற, அரசின் சார்பு நிறுவனங்களான, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி ஆகியவை எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகவே, அரசின் பதில் மனு இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும், விதிமீறல் கட்டடங்களை கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அதில் தெரிய வந்த விவரங்கள், பதில் மனுவில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
சி.எம்.டி.ஏ., என்ன செய்யும்? கோர்ட் உத்தரவுப்படி, சி.எம்.டி.ஏ., சார்பில், வரும் 30ம் தேதி, தாக்கல் செய்வதற்கான பதில் மனுவை இறுதி செய்யும் பணிகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தி.நகரில், கண்காணிப்புக்குழு உத்தரவின்படி நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையில், குறிப்பிடப்பட்ட, 64 வணிக வளாகங்களில் உள்ள விதிமீறல்கள் குறித்த விவர அறிக்கை, அதன் அடிப்படையில் கட்டடங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள், அதன்பின் சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த விவரங்கள், இந்த பதில் மனுவில் சேர்க்கப்படுகின்றன. விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக, ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவுக்கும், இதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறினர்.
"அதிகாரிகள் தான் பொறுப்பு': தி.நகரில், விதிமீறல் கட்டடங்கள் குறித்த ஆய்வறிக்கையில், கட்டடங்களின் எண், நிலத்தின் பரப்பளவு, கட்டடத்தின் பரப்பளவு போன்ற தகவல்களில் பிழைகள் இருப்பதாக, வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் மேலும் கூறுகையில், ""இதன் காரணமாக, சில கட்டடங்கள், மாற்றி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட சில கட்டடங்களுக்கு, ஏற்கனவே ஆறு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், அந்த கட்டடத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளே, இத்தவறுகளுக்கு காரணம்'' என்றார்.

புதன், 25 ஜனவரி, 2012

நடத்தை விதிமீறல்: ஸ்ரீபதி மீதான புகார் குறித்து ஆய்வு துவக்கம்: நெற்குன்றம் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றதால் சிக்கல்

நடத்தை விதிகளுக்கு மாறாக வீடு ஒதுக்கீடு பெற்றது தொடர்பாக, தமிழக தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதி மீது அளிக்கப்பட்ட புகார்கள் குறித்த முதல்கட்ட ஆய்வை, தமிழக கவர்னர் அலுவலக அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.

வீடு ஒதுக்கீடு:அரசு ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்ட நெற்குன்றம் வீட்டுவசதி திட்டத்தில், ஐ.ஏ.எஸ்., போன்ற பதவியில் உள்ளவர்களுக்கு வீடு ஒதுக்க, 2011 ஏப்ரல் மாதம் குலுக்கல் நடந்தது.இதுகுறித்து, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அளித்துள்ள பதிலில், "ஸ்ரீபதிக்கு, "எச்' பிளாக்கில் 16 (ஏ) அடுக்கில், முதலாவது வீடு ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்காக, டோக்கன் எண் மூன்று ஒதுக்கப் பட்டுள்ளது,' என, குறிப்பிடப் பட்டுள்ளது.

கவர்னரிடம் புகார்:இதுதொடர்பாக, செல்வராஜ், சங்கர் ஆகியோர், தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு, கடந்த வாரம், தனித்தனியாக புகார் மனுக்களை அனுப்பினர்:
தலைமைச் செயலர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீபதி, தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தன் தகுதி குறித்த தவறான தகவல்களை அளித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான பிரிவில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளார்.
இது, தகவல் பெறும் உரிமை சட்டத்தின், 17வது பிரிவில் குறிப்பிடப் பட்டுள்ள, மாநில தலைமை தகவல் ஆணையருக்கான நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, தலைமை தகவல் ஆணையர் பதவியில் இருந்து ஸ்ரீபதியை நீக்கம் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகார்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பதவியில் நீடிக்க எதிர்ப்பு:இதுகுறித்து, பொள்ளாச்சியை சேர்ந்த, தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர், பாஸ்கரன் மற்றும் மதுரையை சேர்ந்த ஆர்வலர், சம்பத் ஆகியோர் கூறியதாவது:அரசு அலுவலகங்களில் தகவல் கிடைக்காத பொதுமக்கள், அரசு நிர்வாகத்துக்கு எதிராக அளிக்கும் மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் நிலையில் உள்ள அதிகாரியான ஸ்ரீபதி, அரசிடம் இருந்து வீடு ஒதுக்கீடு பெறுவது, முற்றிலும் நியாயமற்றது. தகவல் பெறும் உரிமை சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள நடத்தை விதிகளுக்கு எதிரானது. அவர் மீது, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

"இது பழய செய்தி':இதுகுறித்து, தமிழக தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதியிடம் கருத்து கேட்டபோது, "நெற்குன்றம் வீட்டுவசதி வாரிய திட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றது பழைய செய்தி. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 17வது பிரிவுக்கு எப்படி எதிரானதாகும்? இப்படிப்பட்ட புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு என்ன செய்வது?' என்றார்.ஆய்வு துவக்கம்:ஸ்ரீபதி மீதான புகார்கள் குறித்து, கவர்னர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:இந்த புகார்களில் குறிப்பிடப் பட்டுள்ள விவரங்களின் உண்மைத் தன்மை குறித்து அறிவதற்கான முதல்கட்ட ஆய்வு துவங்கப் பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற புகார்கள் வரும்போது, அதன் உண்மை தன்மை, முதலில் ஆய்வு செய்யப்படும். அதன்பின், இதுதொடர்பாக, சட்ட வல்லுனர்களின் கருத்து கேட்கப்படும். அதன் அடிப்படையிலேயே, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடத்தை விதி என்ன?தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இயல் நான்கு, பிரிவு 17ல், மாநில தலைமை தகவல் ஆணையருக்கான நடத்தை விதிகள் விரிவாக நீக்கம் செய்ய, பல்வேறு காரணங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

இதன் உட்பிரிவு நான்கில் குறிப்பிட்டுள்ள விதிமுறை விவரம்:* மாநில தகவல் ஆணையர், இந்திய அரசில் அல்லது அதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், உடன்படிக்கையில், எந்த வழியிலேனும் தொடர்புள்ளவராக அல்லது கூட்டுருவாக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் உறுப்பினராகவும், உறுப்பினர் அல்லாமலும், அதிலிருந்து எழும் பயன், ஆதாயம் எதிலும் பங்கு பெற்றவராக இருப்பின், இச்சட்டத்தின் உட்பிரிவு ஒன்றின்படி, தவறான நடத்தைக் குற்றம் புரிந்தவராக அவர் கருதப்படுவார்.
* தவறான நடத்தை உறுதி செய்யப்படும் நிலையில், தலைமை தகவல் ஆணையரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக, கவர்னர், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை கேட்டு, நடவடிக்கை எடுக்கலாம்.
* சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை பெறுவதற்கான இடைப்பட்ட காலத்தில், தலைமை தகவல் ஆணையரை, தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்; ஆணையத்திற்கு அவர் வருவதை, தடை செய்யலாம்.
* இதே பிரிவில், உட்பிரிவு மூன்று (உ)ன் படி, மாநிலத் தலைமை தகவல் ஆணையர், தன் பணிகளில் குந்தகம் விளைவிக்கும் வகையில், நிதி அல்லது பிற நலனை அடைந்திருப்பின், அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

திங்கள், 23 ஜனவரி, 2012

தி. நகரில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு உரிமையாளர்களே முன்வந்து நடவடிக்கை

சி.எம்.டி.ஏ.,வின் அதிரடியை அடுத்து, சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்தை அதன் உரிமையாளர்களே இடிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கையை சென்னை ஐகோர்ட் நேரடியாக கண்காணித்து வருகிறது. இதன் காரணமாக, தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் உள்ள 64 அடுக்குமாடி கட்டடங்களில் அதிகளவில் விதிமீறல் இருப்பதாக கண்டறியப்பட்டன. இதில் ஆறு கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும், 19 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும் கடந்த அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர். ஐகோர்ட்டின் கிடுக்கிப்பிடியால் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஆறு வாரங்களுக்கு தற்காலிகமாக கடைகளை திறக்க இடைக்கால நிவாரணம் பெற்றனர். இதனால், 71 நாள்கள் மூடப்பட்டிருந்த பிரபல வணிக வளாகங்கள் கடந்த 10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.
எதிரொலி: இந்நிலையில், உஸ்மான் சாலையில், பனகல் பூங்கா எதிரில், சரவணா செல்வ ரத்தினம் நிறுவனத்தில் இரு பெரிய வளாகங்கள் உள்ளன. இவற்றை அடுத்துள்ள நிலத்தில், இதே நிறுவனம் சார்பில் மேலும் ஒரு வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக திட்ட அனுமதி கோரும் வரைபடம் தயாரிக்கப்பட்டு, சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்பப்பட்டது. இந்த திட்ட வரைபடத்தில், வளர்ச்சி விதிகளின்படி, போதிய அளவுக்கு வாகன நிறுத்துமிடம், பக்கவாட்டு காலியிடம் ஆகியவற்றுக்கான வசதிகள் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதே சமயத்தில் அந்த குறிப்பிட்ட நிறுவனம், வணிக வளாகம் கட்டும் பணியை கடந்தாண்டு துவக்கியது. திட்ட அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதால், இதை யாரும் தடுக்கவில்லை. தொடர்ந்து மூன்று தளங்களை தாண்டி கட்டுமானப் பணிகள் நடந்துக்கொண்டிருந்தன. இந்நிலையில் திட்ட வரைபடம் விதிகளுடன் பொருந்திப் போகாததால், அதை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நிராகரித்தனர். இதன்பின், தன் நிலத்தில் அந்த நிறுவனம் கட்டுமானப் பணியை தொடர்ந்து நடத்தியதால், பணியை நிறுத்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன.
இடிப்பு துவக்கம்: இந்நிலையில், ஏற்கனவே விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களில், 25 வணிக வளாகங்கள் சி.எம்.டி.ஏ., அதிரடி நடவடிக்கையால் தொடர்ந்து 71 நாள்கள் செயல்பட முடியாத அளவுக்கு முடக்கப்பட்டன. இதை கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணி நிறுத்தப்பட்ட நிறுவனத்தினர் விதிகளுக்குட்பட்டு புதிய திட்ட  வரைபடத்தை தயாரித்து சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்ப முடிவு செய்தனர். இதற்காக, அங்கு ஏற்கனவே மூன்று தளங்கள் வரை கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கட்டட இடிப்பு பணியை வணிக வளாக உரிமையாளர்களே துவக்கியுள்ளனர். இது குறித்து இடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியபோது,""பெரிய ஜே.சி.பி., இயந்திரத்தின்துணையுடன் 20க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இந்த இடிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் பகலில் இடிக்கும் பணிகளும், அதனால் ஏற்படும் கட்டட கழிவுகளை வெளியேற்றும் பணிகள் இரவு நேரத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. முழுவதும் இடித்து முடிக்க 20 முதல் 30 நாள்கள் வரை ஆகலாம்,'' என்றனர்.
மற்ற நிறுவனங்களும்...: இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறும்போது, ""பிரபல வணிக நிறுவனம் ஒன்று மூன்று தளங்கள் வரை கட்டிய கட்டடத்தை தானே இடிப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, மற்ற நிறுவனங்களும் தங்கள் கட்டடங்களை தாங்களே இடித்து விதிகளுக்குட்பட்ட வகையில் புதிதாக கட்டிக் கொள்ள முன்வர வேண்டும்,'' என்றனர்.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

திருமழிசை துணை நகரம்: நிலம் தந்தால் வீட்டுமனை, அரசு வேலை

சென்னையை அடுத்த திருமழிசையில் துணை நகரம் திட்டத்துக்கு நில உரிமையாளர்களிடம் எதிர்ப்பை குறைக்கும் வகையில்; நிலம் தருபவர்களுக்கு வீட்டுமனை, அரசு வேலை அளிக்க, வீட்டு வசதி வாரியம் நான்கு அம்ச திட்டத்தை உருவாக்கி, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளது.

திருமழிசை அருகே வீட்டு வசதி வாரியம் மூலம் 311.05 ஏக்கரில், 2,160 கோடி ரூபாயில் துணை நகரம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, அங்குள்ள செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், வெள்ளவேடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். தற்போது, உத்தேசிக்கப்பட்டுள்ள 311 ஏக்கர் நிலத்தில், 30 சதவீத நிலங்கள் மட்டுமே வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மீதி நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நில உரிமையாளர்கள், இந்த தொகையை வாங்காமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், திட்டத்தை நிறைவேற்ற, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனத்துடன் இணைந்து வீட்டு வசதி வாரியம் கோரியுள்ளது.

டெண்டரிலும் தாமதம்: கடந்த நவம்பர் 6ம் தேதி வெளியிடப்பட்ட இந்த டெண்டர், டிசம்பர் 15ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்டபடி 15ம் தேதி டெண்டர் திறக்கப்படவில்லை. இதையடுத்து, டெண்டர் திறப்பு ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நிலப் பிரச்னை காரணமாக குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்கள் இதற்கான டெண்டரில் பங்கேற்க நிறுவனங்கள் தயக்கம் தெரிவித்திருப்பதே தேதி மாற்றத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

புதிய திட்டம்: எனவே, நிலப் பிரச்னையைத் தீர்க்க புதிய திட்டத்தை, வீட்டு வசதித் துறை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். இதன்படி, புதிதாக உருவாக்கப்படும் துணை நகரத்தில் நிலம் தருபவர்களுக்கு அவரவரிடம் பெறப்படும் நிலத்தின் அளவுக்கு ஏற்ப 2,400 சதுர அடி, 1,200 சதுர அடி, 800 சதுர அடி ஆகிய அளவுகளில் வீட்டுமனைகள் வழங்கப்படும். மேலும் நிலம் வழங்குவோர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவரவர் கல்வித்தகுதி அடிப்படையில் வீட்டு வசதி வாரியத்தில் பணி நியமனம் வழங்கப்படும். ""அரசின் ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து இத்திட்டம் குறித்து செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், வெள்ளவேடு கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,'' என பெயர் குறிப்பிட விரும்பாத வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

யாருக்கு எவ்வளவு மனை? திருமழிசை துணை நகரம் திட்டத்துக்காக வீட்டு வசதித்துறை உருவாக்கியுள்ள நான்கு அம்ச திட்டத்தின் விவரம்
*மூன்று முதல் ஐந்து ஏக்கர் வரை நிலம் தருபவர்களுக்கு 2,400 சதுர அடி மனை.
* ஒன்று முதல் 2.99 ஏக்கர் வரை நிலம் தருபவர்களுக்கு 1,200 சதுர அடி மனை.
* 10,890 சதுர அடி (25 சென்ட்) முதல் 43,124 சதுர அடி (99சென்ட்) வரை நிலம் தருபவர்களுக்கு 800 சதுர அடி மனை.
* இந்த நிலங்களுக்கு அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படாது.

புதன், 19 அக்டோபர், 2011

வணிக மனையில் பங்களா கட்டும் தி.மு.க., நிர்வாகி : சி.எம்.டி.ஏ., மாநகராட்சி மவுனம் கலையுமா?

சென்னை பெசன்ட் நகர், கோஸ்டல் தெருவில், வீட்டுவசதி வாரிய வணிக மனையில், எவ்வித அனுமதியுமின்றி தி.மு.க., நிர்வாகி ஒருவர், ஆடம்பர பங்களா கட்டி வருகிறார். இவ்விஷயத்தில், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருந்து வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், குடியிருப்புகளுக்காக, வீட்டு மனைகளையும், வணிக பயன்பாட்டுக்காக, வணிக மனைகளையும் உருவாக்கி, ஒதுக்கீடு மூலம் விற்பனை செய்து வருகிறது. இதில், குடியிருப்பு மனைகளை வணிக ரீதியாகவும், வணிக மனைகளை, வீடு கட்டுவதற்கும் பயன்படுத்துவது, வாரியத்தின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது. சிலர், வேண்டுமென்றே இவ்விதிகளை மீறி செயல்படுவதையும், முறைகேடுகளில் ஈடுபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்திலும், அதற்கு முன், 1996 - 2001லும், வீட்டு வசதி வாரியத்தில், பல்வேறு முறைகேடுகளில் தி.மு.க.,வினர் ஈடுபட்டது தொடர்பான விவரங்கள், ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இதில், சென்னை பெசன்ட் நகர், கலாஷேத்திரா காலனி, கோஸ்டல் தெருவில், வணிக பயன்பாட்டுக்கான மனையை, தி.மு.க., அமைப்புச் செயலர், பெ.வீ.கல்யாணசுந்தரம், வீடு கட்டுவதற்காக பயன்படுத்துவதாக புகார் வந்தது.

ஆவணங்கள் விவரம்: இதுகுறித்து, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விசாரித்ததில், வீட்டுவசதி வாரிய, பெசன்ட் நகர் கோட்ட பொது தகவல் அதிகாரி அளித்த ஆவணங்களில் உள்ள விவரங்கள்:
சென்னை பெசன்ட் நகர் விரிவாக்கப் பகுதியில், வணிக மனை எண்: 53, பெ.வீ. கல்யாணசுந்தரம் என்பவருக்கு, சமூக சேவகர் என்ற அடிப்படையில், தவணை முறை திட்டத்தின் கீழ், அரசு விருப்புரிமையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அரசாணையை (எண்: 288), வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, 2000ம் ஆண்டு, ஜூலை 13ல் வெளியிட்டது. இதன்படி, எண் 53ல் உள்ள ஒரு கிரவுண்ட், 2,241 சதுரடி பரப்பளவுள்ள வணிக மனை, 27 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் என்ற விலையில், கல்யாணசுந்தரத்துக்கு அளிக்கப்பட்டது. (இவ்விலை எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்பது புதிர்) இதுதொடர்பான ஒதுக்கீட்டு ஆணை, அதே ஆண்டு, அக்டோபர் 30ம் தேதி, வீட்டுவசதி வாரியத்தால் வெளியிடப்பட்டது. இதில், 6 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை முதலிலும், மீதித் தொகையை தவணை முறையிலும் செலுத்தும்படி, கல்யாணசுந்தரம் அறிவுறுத்தப்பட்டார்.
இந்த மனை ஒதுக்கீடு பெறுவதற்கான விண்ணப்பத்தில், தன் ஆண்டு வருமானம், 96 ஆயிரத்து 560 ரூபாய் என கணக்கு காட்டியுள்ள கல்யாணசுந்தரம், மனைக்கான தவணை தொகையாக, மாதம் 38 ஆயிரத்து 810 ரூபாய் வீதம், பத்தாண்டுகளில் செலுத்த ஒப்புக் கொண்டார். ஆனால், 2008, ஆகஸ்ட் மாதத்திலேயே, மொத்தத் தொகையையும் அவர் செலுத்திவிட்டார்.

கட்டுமானப் பணி துவக்கம்: இந்நிலையில், அந்த நிலத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன், குடியிருப்பு வகையில், ஆடம்பர பங்களா கட்டும் பணியை கல்யாணசுந்தரம் துவக்கியிருக்கிறார். வணிக பயன்பாட்டுக்கான நிலத்தில், விதிகளுக்கு மாறாக வீடு கட்டப்பட்டு வருவது, அப்பகுதி மக்கள் மத்தியிலும், வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுவசதி வாரியத்தின் நிலை என்ன? : பெயர் குறிப்பிட விரும்பாத, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர், இதுகுறித்து கூறியதாவது: வணிக பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட மனைகளை, வணிக ரீதியான கட்டடங்கள் கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக தேவை அங்கு இல்லை எனக் கூறி, அதை குடியிருப்புக்காக பயன்படுத்துவதானால், அதற்காக, சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்து, நிலம் உபயோக மாற்றம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு வகை மாற்றம் செய்ய அவர் விண்ணப்பித்தால், அதற்கு, வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் தடையின்மை சான்று கேட்டு பெறப்படும். அதன் பிறகே, அங்கு குடியிருப்பு கட்டுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு, திட்ட அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த குறிப்பிட்ட மனையை, உபயோக மாற்றம் செய்வது தொடர்பாக, தடையின்மை சான்றிதழ் எதுவும் இதுவரை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

சி.எம்.டி.ஏ., நிலை: "வீட்டுவசதி வாரியத்தின், பெசன்ட் நகர் விரிவாக்கத் திட்டத்தில், 53ம் எண் கொண்ட வணிக மனையை, உபயோக மாற்றம் செய்வது தொடர்பாகவோ, அதில், வீடு கட்டும் எந்த திட்டத்துக்கும், இதுவரை உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை. அனுமதி எதுவும் பெறாமல், அங்கு கட்டுமானப் பணி நடப்பது குறித்து, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெயர் குறிப்பிட விரும்பாத, சி.எம்.டி.ஏ.,வின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மவுனம் கலையுமா? : சாதாரண பொது மக்கள், தங்கள் வீடுகளில் கூடுதலாக ஒரு சிறிய அறையோ அல்லது வேறு சிறிய மாற்றமோ செய்தால், எப்படியோ அதுகுறித்து தகவல் அறிந்து, அந்த பகுதியின் கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர், உடனடியாக அந்த வீட்டின் முன் ஆஜராகிவிடுவர். அந்த வீட்டின் உரிமையாளரின், "கவனிப்பு' அடிப்படையில், இவர்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.
ஆனால், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி உயரதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ள பகுதியில், எந்த விதிகளையும் பின்பற்றாமல், ஒரு கட்டடம் கட்டப்படுகிறது. இதைத் தடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள், மவுனமாக இருப்பது ஏனோ?

சமூக சேவகர்? : எதன் அடிப்படையில், சமூக சேவகர் என்ற பிரிவில், கல்யாணசுந்தரத்துக்கு மனை ஒதுக்கப்பட்டது என்பது குறித்து, வீட்டுவசதி வாரியம் அளித்துள்ள ஆவணங்களின் விவரம்: சென்னை கே.கே.நகர் 9வது டொர் சிவிக் எக்ஸ்னோரா, "சமூக சேவகர்' என, அவருக்கு சான்று அளித்துள்ளது. அதில், "எக்ஸ்னோராவின் உறுப்பினராக, 1991ம் ஆண்டு முதல் இருந்துவரும் கல்யாணசுந்தரம், பல்வேறு சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். மரம் நடுதல், போலியோ விழிப்புணர்வு, சிறார் கல்வி, உயர் கல்வி வழிகாட்டியாகவும், இப்பகுதி மக்களுக்கு சட்ட உதவியும் அளித்து வருகிறார்' என, சான்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "கடந்த பத்தாண்டுகளாக, கல்யாணசுந்தரத்தை தெரியும். தனிப்பட்ட முறையில் அவர், நல்ல நடத்தை கொண்டவர்' என, தி.மு.க.,வைச் சேர்ந்த, அப்போதைய வட சென்னை எம்.பி.குப்புசாமி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு, அந்த ஆவணங்களில் உள்ளன.

ஞாயிறு, 31 ஜூலை, 2011

வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்

சென்னை:உளவுப்பிரிவு முன்னாள் அதிகாரி ஜாபர் சேட் போல, மேலும் சில போலீஸ் அதிகாரிகளும், அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில், வீட்டு வசதி வாரிய மனைகள் பெற்று, அதை தனியார் பில்டர்களுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்து, மோசடியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், முதல்வர் கருணாநிதியின் மெய்க்காவல் பணிக்கு, சிறப்பு பாதுகாப்புப் பிரிவு சி.ஐ.டி.,யிலிருந்து, இன்ஸ்பெக்டர்கள் பி.பாண்டியன், சி.வினோதன், சி.கணேசன் ஆகியோர் அனுப்பப்பட்டனர். இதில், பாண்டியன் டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார்.எந்நேரமும் முதல்வருடன் இருப்பவர்கள் என்பதால், டி.ஜி.பி., வரையிலான எல்லா உயர் அதிகாரிகள் மத்தியிலும், இவர்கள் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர்.
இவர்களுக்கு மனைகள் ஒதுக்கியது தொடர்பாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பொது தகவல் அதிகாரி அளித்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி, பாண்டியனின் மனைவி மீனாவுக்கு, அரசின் விருப்புரிமையில் சமூக சேவகர் பிரிவின் கீழ், சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் உள்ள, 4,438 சதுர அடி பரப்பளவு கொண்ட மனை (எண்: 1025) ஒதுக்கப்பட்டது.

(வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்: 172) இதற்கான தொகையான, 75.28 லட்ச ரூபாயை அவர் செலுத்தியுள்ளார்.இதேபோல, அதே தேதியில் இன்ஸ்பெக்டர் சி.வினோதனுக்கு, அரசின் விருப்புரிமையில், சமூக சேவகர் பிரிவின் கீழ், சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் உள்ள 4,393 சதுர அடி பரப்பளவு கொண்ட மனை (எண்: 1024) ஒதுக்கப்பட்டது. (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்: 171) இதற்கான தொகையாக, 74.52 லட்ச ரூபாயை அவர் செலுத்தியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் சி.கணேசனுக்கு, அரசின் விருப்புரிமையில், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் பிரிவின் கீழ், சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் உள்ள, 4,320 சதுர அடி பரப்பளவு கொண்ட மனை (எண்: 1023) ஒதுக்கப்பட்டது. (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்: 170) இதற்கான தொகையாக, 74.13 லட்ச ரூபாயை அவர் செலுத்தியுள்ளார்.

தனியாருக்கு விற்பனை: பாண்டியனின் மனைவி மீனா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த கல்யாண்குமாரின் மனைவி கே.பத்மாவை, தனது பவர் ஏஜன்டாக 2009ம் ஆண்டு ஜனவரி 19ம்தேதி நியமித்தார். இதே, கே.பத்மாவை தனது பவர் ஏஜன்டாக கணேசன் நியமித்தார். எஸ்.கவுரி என்பவரை தனது பவர் ஏஜன்டாக வினோதன் நியமித்தார்.இந்த மூன்று மனைகளையும், அந்தந்த பவர் ஏஜன்டுகளிடமிருந்து, சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த ஏ.பாலா என்பவர், 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி வாங்கியுள்ளார். இது தொடர்பான ஆவணங்கள், சென்னை கொன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு மனையும், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, தலா 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள் ளன. மொத்தம் 13,151 சதுர அடி பரப்பளவு கொண்ட மூன்று மனைகளையும் வாங்கிய தனியார் நிறுவனத்தினர், அங்கு வர்த்தக நோக்கத்தில், அடுக்கு மாடி குடியிருப்புகளைக் கட்டி வருகின்றனர்.

தவறு எங்கே?


இது தொடர்பாக, வீட்டு வசதி வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:தங்களுக்கு குடியிருக்க வீடு இல்லை என்பதால், மனை ஒதுக்குமாறு கோருபவர்களுக்கு, அரசின் விருப்புரிமை அடிப்படையில் மனைகள் ஒதுக்கப்படுகின்றன.இந்த மனைகளுக்கான முழுத் தொகையைச் செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெற்றாலும், வீட்டு வசதி வாரியத்தில் ஆட்சேபம் இல்லா சான்று பெற்ற பிறகே மனைகளையும், வீடுகளையும் தனியாருக்கு விற்க முடியும்.வர்த்தக நோக்கமின்றி, மக்களுக்கு வீட்டு வசதி அளிக்க வேண்டும் என்பதற்காக, வழங்கப்படும் மனைகளை தனியார் பில்டர்களுக்கு விற்பதும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து வீடுகள் கட்டி விற்பதும், இத்திட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது தான் என்றாலும், இதைத் தடுக்க கடுமையான விதிகள் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

நடவடிக்கை எப்போது?வீட்டு வசதி வாரியத்தின் மனைகளை, தனியார் பில்டருடன் சேர்ந்து, அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி விற்ற, முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரி ஜாபர் சேட், முன்னாள் முதல்வரின் செயலர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்து வரும் நடவடிக்கை, இவர்கள் மீதும் பாயுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அரசுக்கு தெரியுமாம்!

இது தொடர்பாக, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, 2010ம் ஆண்டு ஜூலை 27ம் தேதியிட்ட கடிதம் மூலம், எஸ்.பி.சி.ஐ.டி., எஸ்.பி., அளித்த பதில் விவரம்:"எஸ்.பி.சி.ஐ.டி., கோர் செல் பிரிவில், டி.எஸ்.பி.,யாக உள்ள பாண்டியன், தன் மனைவி மீனா பெயரில், வீட்டு வசதி வாரியத்தில் இருந்து, அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் மனை பெற்றார். அதை, கூட்டு நிறுவனமாக தனியார் ஒருவருடன் சேர்ந்து, மேம்பாடு செய்ய ஒப்பந்தம் செய்தார். அந்த மனைக்கான பணத்தை, மீனாவின் சார்பில் கூட்டு நிறுவனம், வீட்டு வசதி வாரியத்துக்கு செலுத்தியது தொடர்பான விவரங்கள், துறை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டன.

இதேபோல வினோதன், கணேசன் ஆகியோரும், தங்கள் பெயரில் மனை ஒதுக்கீடு பெற்றது; அதை கூட்டு நிறுவன அடிப்படையில், இன்னொருவர் மூலம் மேம்படுத்த, ஒப்பந்தம் செய்து கொண்டது உள்ளிட்ட விவரங்களை, தங்கள் துறை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இவை அவரவர் சர்வீஸ் பதிவேட்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது' என அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-வி.கிருஷ்ணமூர்த்தி -

சனி, 12 மார்ச், 2011

எஸ்எம்எஸ் மூலம் வேட்பாளர் பின்னணியை அறியலாம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் பொது மக்கள் பெற தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன், தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள், சொத்து விவரம் ஆகியவற்றைத் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில், தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ஜனநாயக மாற்றங்களுக்கான சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டனர்.

இதன்படி, 2006 -ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 77 பேர் மீது மொத்தம் 176 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. 

இதில் கட்சி வாரியாக உறுப்பினர்கள் விவரம்: திமுக: 39, பாமக: 15, காங்கிரஸ்: 9, அதிமுக: 8, மதிமுக: 2, இந்திய கம்யூனிஸ்ட்: 2.2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 57 பேர் கோடீஸ்வரர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான மார்ச் 30-ம் தேதியில் இருந்தே வாக்காளர்கள், தங்கள் பகுதி வேட்பாளர்களின் பின்னணி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர்கள் தங்களது செல்போனில் இருந்து ஙஹ்ய்ங்ற்ஹ தங்கள் பகுதி அஞ்சல் பின் கோடு எண் (உதாரணமாக தியாகராய நகர் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாக இருந்தால் 600017) எனக் குறிப்பிட்டு 56070 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். 

இவ்வாறு அனுப்பினால், அந்தத் தொகுதி வேட்பாளர்களின் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் விவரம், அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்கள் அவரவர் செல்போன்களுக்கே அனுப்பப்படும்.

என ""ஜனநாயக மாற்றங்களுக்கான சங்க'' நிர்வாகிகள் தெரிவித்தனர்.ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர்.

புதன், 2 பிப்ரவரி, 2011

நிதி நகரம் திட்டத்தால் சதுப்புநில பறவைகளுக்கு ஆபத்து


  சென்னை மேடவாக்கம்- பெரும்பாக்கம் சாலையில் நிதி நகரம் அமைக்கும் அரசின் திட்டத்தால் அங்குள்ள சதுப்பு நிலத்தை சார்ந்துள்ள அரியவகை பறவைகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த நிலத்தை தொழில்துறையிடம் இருந்து மீட்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 
சென்னை மேடவாக்கம்- பெரும்பாக்கம் சாலையில் சர்வதேச தரத்திலான நிதி நகரம் அமைக்கப்படும் என 2009-2010 நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது.உலக வங்கி உட்பட பல சர்வதேச நிதி அமைப்புகள், சென்னையில் இருந்து நிதிச் சேவையை மேற்கொண்டு வருகின்றன. மேலும், வர்த்தக வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள், பரஸ்பர நிதி, காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை சென்னையில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
 
சென்னையில் பல்வேறு இடங்களில் வாடகை, நீண்டகால குத்தகை அடிப்படையில் நிலம் பெற்று இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, இந்த நிறுவனங்களின் அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் சர்வதேச தரத்திலான நிதி நகரம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும், நிதி நிர்வாகம் சார்ந்த பயிற்சி, ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் அலுவலகங்களும் இந்த நகரத்தில் இடம்பெறும்.
 
சில மாதங்கள் முன்னர் இதற்கான அரசாணை தொழில்துறை மூலம் வெளியிடப்பட்டது. 187 ஏக்கர் நிலத்தில் முதல் கட்டமாக 25 ஏக்கர் நிலத்தில் நிதி நிர்வாகம் சார்ந்த ஊடக அலுவலக வளாகமும், கேளிக்கை பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர், முழுமையான திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த திட்டத்துக்காக மேடவாக்கம்- பெரும்பாக்கம் சாலையில் சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம் கிராமங்களில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் இந்த நிலங்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களாக இருந்தாலும், தன்மை அடிப்படையில் இந்த நிலம் சதுப்பு நிலமாக அமைந்துள்ளது. 
 
வனத்துறை நடவடிக்கை: 
 
 பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை வசம் இருந்த 300 ஹெக்டேர் நிலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலம் இப்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலத்தை முழுமையான பறவைகள் சரணாலயமாக மாற்றும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 இதையடுத்து நிதி நகரம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த நிலம் முழுமையான சதுப்பு நிலத்துக்கான தன்மையுடன் இருப்பதாகவும், ஏராளமான அரியவகை பறவைகள் வந்து செல்வதும் வனத்துறையினர் ஆய்வில் தெரியவந்தது என பள்ளிக்கரணை பகுதிக்கான வனச்சரகர் ராமதாஸ் தெரிவித்தார். இதனால் இப்பகுதியை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.
 
உயரதிகாரிகள் ஆய்வு:
 
 இதையடுத்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அருகில் உள்ள நிலங்களை வனம், சுற்றுச்சூழல் துறை செயலர் வெ. இறையன்பு தலைமையிலான உயரதிகாரிகள் அண்மையில் நேரில் ஆய்வு செய்தனர்.நேச்சர் டிரஸ்ட், வனத்துறையின் களப்பணியாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெற்றது.அப்போது, நிதி நகரம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தை தொழில் துறையிடம் இருந்து மீளப்பெற்று வனத்துறை வசம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி நிலத்தை மீட்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உயரதிகாரிகள் உறுதி கூறினர்.இதன்மூலம் அரியவகை பறவைகளின் வாழ்வாதாரமாக உள்ள இந்த நிலம் பாதுகாக்கப்படும் என இயற்கை ஆர்வலர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 
அரிய வகை பறவைகள்:
 
சதுப்பு நிலத்துக்கான அனைத்து அம்சங்களுடன் அமைந்துள்ள இந்த நிலத்தில் ஏராளமான அரியவகை பறவையினங்கள் வந்து செல்வதும், குறிப்பிட்ட சில பறவையினங்கள் இங்கேயே இனப்பெருக்கம் செய்வதும் இப்போது தெரியவந்துள்ளது.குறிப்பாக நீள வால் இலைக்கோழி வகையைச் சேர்ந்த 60 ஜோடி பறவைகள் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.ஐரோப்பாவில் இருந்து வரும் செங்கால் நாரை வகையைச் சேர்ந்த பறவைகள் இங்கு வருவது நேரடி ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.செந்நீல கொக்கு, சாம்பல் கொக்கு, மஞ்சள் குருகு, இராக்கொக்கு, ஜொலிக்கும் அரிவாள் மூக்கன், புள்ளி அலகு கூழைக்கடா, நீலத்தாழைக்கோழி, நாமக்கோழி, நத்தை குத்தி நாரை உள்பட 24 வகையான நீர்ப்பறவைகள் இங்கு வந்து செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது என நேச்சர் டிரஸ்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.
 
பிப்ரவரி 2-ம் தேதி உலக சதுப்பு நில பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்திலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
 
ஏராளமான பறவைகள் வந்து செல்லும் இந்த இடத்தை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் சேர்த்து ஒரே நிலையில் பராமரிப்பதால் பறவைகளுக்கு வாழ்விடம் கிடைப்பதுடன் இங்கு மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கலாம் என்றும் அந்த அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.

5 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாத 67 உள்ளாட்சிகள்

  தமிழகத்தில் 8 பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் உள்பட 67 உள்ளாட்சி பதவிகளுக்கு யாரும் போட்டியிடாததால் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை.ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த பகுதிகளில் மற்ற பிரிவினரின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இருந்ததால், அவர்களின் ஆதிக்கம் காரணமாக ஆதிதிராவிடர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டது. அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் தர்மசங்கடம் ஏற்படும் அளவுக்கு இந்த பிரச்னை உருவெடுத்தது. 2006-ம் ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றபோது, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு ஆதிதிராவிடர்கள் தங்களுக்கான பதவியிடங்களுக்கு போட்டியிட்டனர். தேர்தலில் வெற்றியும் பெற்றனர்.இவ்வாறு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நவம்பர் மாதம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சமத்துவப் பெருவிழா என்ற பெயரில் அரசு சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது.இந்த விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டிகள் இனி தமிழகத்தில் உருவாகாது என உறுதிப்பட தெரிவித்தார்.மேலும், இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு, சமத்துவப் பெரியார் என்ற பட்டமும் அளிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்தார்.இதன் பின்னர் இப்போது மீண்டும் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 67 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
 
8 பஞ்சாயத்து தலைவர் பதவிகள்: 
 
இந்த நிலையில், அப்போது, 4 பஞ்சாயத்துகளில் மட்டும் இருந்த நிலை தற்போது 8 பஞ்சாயத்துகளில் நிலவுவது தெரியவந்துள்ளது. அரியலூர் மாவட்டம் டி.பாலூர் ஒன்றியத்தில் நடுவாளூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் கொளப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே புலிப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியத்தில் புதூர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் பேரயாம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ராமாபுரம், வேலூர் மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் செய்யாத்துவண்ணம், விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் கடுகுபட்டு ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் 2006-ம் ஆண்டு முதல் நடைபெறவில்லை.இதில் 4 இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும், 4 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை.
 
52 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகள்: 
 
இதேபோல 52 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் உள்ளன.மாவட்ட வாரியாக தேர்தல் நடைபெறாத பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் விவரம்:அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருச்சி, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பஞ்சாயத்துகளில் உள்ள 52 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை.இதிலும் பெரும்பாலான இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவையாகவே உள்ளன. உள்ளூர் பிரச்னை காரணமாக பொது பிரிவினருக்கான சில வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
 
மேல்விஷாரம்: 
 
வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் மூன்றாம் நிலை நகராட்சியில் 3 வார்டுகளில் யாரும் போட்டியிடாததால், 2006-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறவில்லை. தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் வரதராஜன்பட்டி, கோவை சிறுமுகை, வீரபாண்டி, கன்னியாகுமரி பள்ளபள்ளம் ஆகிய பேரூராட்சிகளில் தலா 1 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடைபெறவில்லை.
 
காரணம் என்ன? 
 
மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையிலேயே உள்ளாட்சி அமைப்புகள் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், பொது பிரிவினர் என ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களுக்கும், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு காரணமாக இத்தகைய சிக்கல் எழுவதாக கூறப்படுகிறது.உதாரணமாக, ஆதிதிராவிடர்கள் எண்ணிக்கையைவிட மற்ற பிரிவினரின் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதி தவறான கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்படுவது போன்ற நிர்வாக முரண்பாடுகளே இந்தப் பிரச்னைக்கு காரணமாக கூறப்படுகிறது.இவ்வாறு தொடர்ந்து தேர்தல்கள் நடைபெறாமல் உள்ளதால், இந்த பகுதிகளில் மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளாட்சி நிர்வாகத்தில் உறுதிச் செய்யப்படாமல் உள்ளது. இதன்காரணமாக இப்பகுதிகளில் வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.எனவே, உண்மை நிலையை ஆராய்ந்து இந்த பகுதிகளில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கை.

புதன், 12 ஜனவரி, 2011

தமிழக காவல் துறையில் மகளிர் கமாண்டோ படை கலைப்பு

நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்ட மகளிர் கமாண்டோ படை கலைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  தமிழக காவல் துறையில் மகளிர் காவலர்களுக்கென தனிப்பிரிவு 1979-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்போதைய நிலையில், தமிழ்நாட்டில் 10,130 பெண் காவலர்கள் அனைத்து காவல்துறைப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 196 மகளிர் காவல் நிலையங்கள் பெண் காவலர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக காவல்துறையிலேயே அதிக அளவில் பெண் காவலர்கள் பணிபுரிகின்றனர்.  காவல்துறை பணியில் மகளிருக்கு உள்ள ஆர்வத்தை அடுத்து ஆண்டு தோறும் காவல்துறையில் பல்வேறு நிலை ஆள்சேர்ப்பில் கணிசமான இடம் மகளிருக்கு ஒதுக்கப்படுகிறது. 

அதிரடிப்படை (கமாண்டோபடை): 

உயர் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சில முக்கிய பணிகளில் பயன்படுத்துவதற்காக 1997-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் கமாண்டோ படையும், கமாண்டோ படை பயிற்சி பள்ளியும் தொடங்கப்பட்டன.  கமாண்டோ படையினருக்கு நவீன ஆயுதங்களைக் கையாளுவதற்கும், வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்தும் உரிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மறைந்து நின்று துப்பாக்கி சுடுதல், வனப்பகுதியில் தங்கியிருத்தல், ஆயுதங்களைக் கையாளுதல், நாசவேலைகளுக்கு எதிரான செயல்பாடுகள் ஆகிய முக்கிய பணிகளைக் கையாளும் திறமைகளை வளர்த்துக்கொள்ள இப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதர துறைகளான சிறைத்துறையினர், மத்திய ஆயுதத் துறையினர், இதர மாநிலங்களின் காவல்துறையினர் ஆகியோருக்கும் இப் பள்ளி சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.  மகளிர் கமாண்டோபடை: தொடக்கம் முதலே கமாண்டோ படையில் பல்வேறு பிரிவுகளில் இருந்து ஆண் காவலர்களே சேர்க்கப்பட்டனர். 2001-ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதையடுத்து, காவல் துறையில் மகளிர் காவலர்கள் சேர்க்கைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.  இதன் விளைவாக அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிர் காவல் பிரிவு கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து கமாண்டோ படையிலும் பெண்களை சேர்க்க திட்டமிடப்பட்டது.  இதையடுத்து 2003 ஜனவரி முதல் மகளிர் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மருதம் வளாகத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.  இந்த பயிற்சிகளின் நிறைவாக கன்னியாகுமரியில் இருந்து, இவர்களில் ஒரு பிரிவினர் நடை பயணமாக வந்து மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.  இதன் நிறைவாக 2003 ஜூன் 2-ம் தேதி மருதம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டிலேயே முதலாவது மகளிர் கமாண்டோ படை 151 பேருடன் தொடங்கப்பட்டது.  அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நிகழ்ச்சியில் பங்கேற்று முதலாவது மகளிர் கமாண்டோ படை தொடங்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

 பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது:

தமிழகத்தில் மகளிர் கமாண்டோ பிரிவு தொடங்கப்பட்டதை அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் தங்களது மாநில காவல்படையில் மகளிர் கமாண்டோ படையை தொடங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டன. இதற்கு தமிழக கமாண்டோ படை மற்ற மாநிலங்களை தமிழகத்தின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது.

 மகளிர் கமாண்டோ படை கலைப்பு:

2003-ம் ஆண்டு 151 பேருடன் தொடங்கப்பட்ட மகளிர் கமாண்டோ படையின் மகளிரின் எண்ணிக்கை 2006-ம் ஆண்டு வரை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.  இந்த நிலையில், 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கமாண்டோ பயிற்சி பள்ளியில், புதிதாக தேர்வு செய்யப்படும் காவலர்களின் மகளிரின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு வந்தது. 

 கடைசியாக 120 பேருடன் இருந்த மகளிர் கமாண்டோ படைக்கு கடந்த சில மாதங்களாக புதிய நபர்கள் தேர்வு செய்யப்படுவது அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.  இது குறித்து கமாண்டோ படை ஐஜி-யை தொடர்புக் கொண்டு கேட்டபோது இது குறித்த அனைத்து நடவடிக்கைகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து கருத்து கூற முடியாது என்றார்.

 இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐஜி-யின் பரிந்துரையை ஏற்று மகளிர் கமாண்டோ படையை கலைப்பதற்கான உத்தரவை டிஜிபி லத்திகாசரண் பிறப்பித்துள்ளதாக காவல்துறை தலைமையக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமை பெற்ற லத்திகாசரண், நாட்டின் முதலாவது மகளிர் கமாண்டோ படையை கலைத்திருப்பது பெண் காவலர்களுக்கு வருத்தமான செய்தியாக உள்ளது.

திங்கள், 20 டிசம்பர், 2010

5 எஸ்பிக்கள், 5 டிஐஜி-க்களுக்கு விரைவில் பதவி உயர்வு

 தமிழக காவல் துறையில் 5 எஸ்.பிக்கள், 5 டி.ஐ.ஜிக்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
 ஐ.ஜி நிலையில் பணியாற்றி வந்த சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர். ஜாங்கிட், சிறைத்துறை ஐஜி ஜே.கே. திரிபாதி, கும்பகோணத்தில் உள்ள மாநில போக்குவரத்து கழக கண்காணிப்பு பணிக்கான ஐ.ஜியான கே. முத்துக்கருப்பன், கரூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கண்காணிப்புக்கான ஐ.ஜியான ஐ. ராஜா, காவல்துறை தலைமையக ஐஜி சி.கே. காந்திராஜன் ஆகியோருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக காவல் துறையில் 5 ஐஜி பதவியிடங்கள் காலியானது.
 
ஐஜி பதவி பெற காத்திருக்கும் டிஐஜிக்கள்: 
 
இவ்வாறு பதவியிடங்கள் காலியாகும்போது, பணி மூப்பு அடிப்படையில் டிஐஜிக்களாக உள்ளவர்களுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம் பதவி உயர்வு வழங்கப்பட்டபோது, 1992-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டது.
 
இதன்படி தற்போது, 1993-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளில் தற்போது டிஐஜிக்களாக உள்ளவர்களுக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதில், சி.பி.ஐ.யில் சென்னை மண்டல டிஐஜியாக உள்ள சு. அருணாச்சலம், மாநகர போலீஸில் மத்திய சென்னை துணை கமிஷனராக உள்ள பி. தாமரைகண்ணன் உள்ளிட்ட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தகுதி பெறுகின்றனர். இவர்களில் அனைவருக்கும் ஐஜி பதவி உயர்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
 
டிஐஜி பதவி பெற காத்திருக்கும் எஸ்பிக்கள்: இவர்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு பெறும் நிலையில், அடுத்து எஸ்பி நிலையில் உள்ளவர்களுக்கு டிஐஜி பதவி வழங்கப்பட வேண்டும். பொதுவாக ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் பணியில் சேரும் அதிகாரிகள் 13 ஆண்டுகள் பணியை பூர்த்தி செய்த பின்னர் டிஐஜிக்களாக பதவி உயர்வு பெற வேண்டும். இதன்படி, ஏற்கெனவே, 13 ஆண்டுகால பணியை பூர்த்தி செய்ததன் அடிப்படையில், 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளான ஏ.ஜி. பொன்மாணிக்கவேல், கே.பி. சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் டிஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டது.
 
இதையடுத்து, 1997-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்து 13 ஆண்டு பணியை பூர்த்தி செய்யும் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜி பதவி உயர்வு பெற தகுதி பெற்றுள்ளனர். இதில் மாநகர போலீஸில் மயிலாப்பூர் துணை கமிஷனராக உள்ள கே. பெரியய்யா, ரயில்வே போலீஸ் எஸ்பியாக உள்ள ஏஜி மெüரியா, மாநகர போலீஸில் நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனராக உள்ள கே.என். சத்தியமூர்த்தி, மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக உள்ள சி. ஸ்ரீதர், சென்னையில் சிபிஐயின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி.யாக உள்ள எஸ். முருகன், புறநகர் போலீஸில் பரங்கிமலை துணை கமிஷனராக உள்ள வி. வரதராஜு, அடையார் துணை கமிஷனராக உள்ள எம்.சி. சாரங்கன் உள்ளிட்ட 14 அதிகாரிகள் தகுதி பெற்றுள்ளனர். 
 
அரசு நடவடிக்கை தொடக்கம்:
 
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு தொடர்பாக தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறு தகுதி பெறும் அனைவருக்கும்  பதவி உயர்வு வழங்க வாய்ப்புகள் உள்ளன. 
 
இருந்தாலும், தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் சிலரை தவிர்த்து மற்றவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கலாம். இருப்பினும், இவர்களில் 5 எஸ்பிக்களும், 5 டிஐஜிக்களும் பதவி உயர்வு பெறுவது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பான நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும், அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெற்று அடுத்த சில மாதங்களில் இந்த பதவி உயர்வு வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.