புதன், 8 பிப்ரவரி, 2012

விதிமீறல் கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பதில் சி.எம்.டி.ஏ., மெத்தனம்!

விதிமீறல் கட்டடங்களுக்கு, தினசரி அடிப்படையில் அபராதம் விதிக்க, இரண்டாவது மாஸ்டர் பிளானில் வழிவகை செய்யப்பட்டுள்ளபோதிலும், கடந்த மூன்றாண்டுகளாக, இதன்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில், இதுவரை 2007ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன் வரையிலான, கட்டடங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டடங்களை, நீதிபதி மோகன் குழு பரிந்துரைகள் அடிப்படையில் வரன்முறை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.இதன் பின் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.ஏ.,வுக்கு எந்த தடையும் இல்லை. அப்படியிருந்தும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் 2007ம் ஆண்டுக்கு பின் கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தவில்லை. 2007 ஜூலைக்கு பின்...:2007ம் ஆண்டு ஜூலைக்கு பின் சென்னை மற்றும் புறநகரில் சி.எம்.டி.ஏ.,வும் உள்ளாட்சி அமைப்புகளும் நடத்திய ஆய்வில், சுமார் 10,881 கட்டடங்கள் ,விதி மீறி கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதில் 7,127 கட்டடப் பணியை நிறுத்த அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் அளிக்கப்பட்டதில் 4,507 கட்டடங்களுக்கு இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் எதுவும் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு, விதிமீறல் கட்டடம் என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இக்கட்டடங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக அபராதம் கூடவிதிக்கப்படவில்லை.அபராதம்
விதிக்க வழி உண்டு?கட்டட விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கருத்தில் கொண்டு இரண்டாவது மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியான வளர்ச்சி, விதிமுறைகளில் சாதாரண குடியிருப்பு முதல், அடுக்குமாடி வணிக வளாகம் வரை, அனைத்து கட்டடங்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் 38வது விதியில், கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:விதிகள்ஒன்று முதல் 37வரையுள்ள ஒழுங்குமுறைகள் எதனையும், எவர் மீறினாலும் ,அவர் முதலில் 1,000 ரூபாய் அபராதமாக செலுத்தும்படி தண்டிக்கப்படுவார். இந்த அபராதம் விதிக்கத்தக்க விதிமீறல் தொடரும் நிலையில், முதல் அபராதம் விதிக்கப்பட்ட நாளில் இருந்து, ஒவ்வொரு நாளுக்கும் 50 ரூபாய் வீதம், அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.இவ்வாறு விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதிகாரிகள் மெத்தனம்:கடந்த 2008ம் ஆண்டு இரண்டாவது மாஸ்டர் பிளானுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்து, இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது. இருப்பினும், இப்போது வரை, எந்த கட்டடத்துக்கும் இந்த விதிகளின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படவில்லை. விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை தடுக்காதது, கோர்ட் தீர்ப்பை அமலாக்காதது போன்று, மாஸ்டர் பிளானில் வழங்கப்பட்டுள்ள அபராதம் விதிப்பதை செயல்படுத்துவதிலும், சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.இது குறித்து சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தபோது,
 "நிர்வாக ரீதியாக மேலதிகாரிகளிடமிருந்து இதற்கான எந்த அறிவுறுத்தல்களும் வராததால் அபராதம்விதிக்கவில்லை'என்றனர்.இன்னும் 14 நாள்கள்...:சென்னை தி. நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக சீல் வைக்கப்பட்ட கடைகளை ஆறு வாரங்களுக்கு திறக்க கடந்தமாதம் ஒன்பதாம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இந்த வழக்கை முன்னுரிமை அடிப்படையில் அடுத்த ஆறு வாரங்களுக்குள் ஐகோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அப்போது உத்தரவிட்டது.இதன்படி தி. நகர் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல், கடந்த மாதம் 10ம் தேதி சி.எம்.டி.ஏ., மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டன.இதில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த கால அவகாசத்தில் இன்னும் 14 நாள்களே ö இருப்பதால் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தி. நகர் கடைகள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை (பிப். 7) விசாரணைக்கு வருகிறது.