வியாழன், 29 நவம்பர், 2012

ஒரு லோடு மணல், 10,000 ரூபாய்க்கு கிடைக்கும் !

தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், ஒரு கன அடி, 70 ரூபாய் வரை உயர்ந்த, மணல் விலை, நேற்று திடீரென, 38 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம், ஒரு லோடு மணல், 10,000 ரூபாய்க்கு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஐந்தாண்டுகளுக்கு மேல் செயல்பட்ட, குவாரிகள் இயங்க தடை என, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவால், 27 குவாரிகளின் செயல்பாடுகள் முடங்கின. இதனால், 96 குவாரிகள் மூலம் பெறப்பட்ட மணலை, 30க்கும் குறைவான குவாரிகளில் இருந்து பெற வேண்டிய நிலை கட்டுமான துறைக்கு ஏற்பட்டது.


தட்டுப்பாடு
யார்டுகளில் மணல் கிடைப்பதில் தாமதமாவதால், ஒரு லோடுக்கு செல்லும் லாரிகள், நான்கு முதல் ஆறு நாள்கள் வரை வெளியிடங்களில் தங்கும் நிலை ஏற்பட்டது.இதனால் ஏற்படும், லாரி வாடகை, பணியாளர் ஊதியம், உணவு படி போன்றவை மணல் விலையிலேயே சேர்க்கப்படுவதால், அதன் விலை தொட முடியாத உயரத்துக்கு சென்றது.


கடந்த சில மாதங்கள் வரை, ஒரு கன அடி, 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல், தற்போதைய நிலவரப்படி, 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு யூனிட், 7,000 ரூபாய்க்கும், 2.5 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல், 18 முதல், 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இதில் நான்கு யூனிட் கொண்ட, ஒரு லோடு மணல் விலை, 40,000 முதல், 50,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் அனைத்தும், ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டது.



திடீர் விலை குறைப்பு
இந்நிலையில், சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று நண்பகல் முதல் மணல்விலை அதிரடியாக குறைந்தது.இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலர் பன்னீர்செல்வம் கூறியதாவது:நேற்று காலை முதல், குவாரிகளில் மணல் எடுப்பதில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், ஒரு கன அடி மணல் விலை, 70 ரூபாயிலிருந்து, 38 ரூபாயாக குறைந்தது. குறிப்பிட்ட சில இடங்களில் இது, 40 ரூபாயாக உள்ளது.



இதனால், 2.5 யூனிட் கொண்ட ஒரு லோடு மணலின் விலை, 10,000 ரூபாய்க்கும் கீழ் இறங்கியுள்ளது. முன்பு, இந்த விலை, 20,000 ரூபாய்க்கு மேல் இருந்தது. 4 முதல் 5 யூனிட்கள் வரை கொண்ட லோடு விலை, 20 முதல் 25 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார்.



பின்னணி என்ன?
மணல் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது குறித்தும், இதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், "தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.கட்டுமானத் துறையினர், மாநிலம் தழுவிய போராட்டம் என்று விபரீத சூழலை நோக்கி செல்வதை தடுக்க,

மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.,க்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.


இதன்படி, குவாரிகளில் காலை, 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரையே, மணல் எடுக்க இதுவரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இதேபோல, பெரிய லாரிகளில், அதிகளவில் மணல் எடுக்கப்படுவதை தடுக்க, லாரியின் மொத்த எடை, 24 டன்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.தற்போது, இக்கட்டுப்பாடுகள் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுகள் மூலம் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், 24 மணி நேரமும் மணல் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் லாரிகளில் ஏற்றப்படும் எடை கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது.

மியான்மர் ஐராவதி ஆற்று மணல் தமிழகத்தில் இறக்குமதி : கட்டுமான நிறுவனங்கள் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் கடும் மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மியான்மரில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து, கட்டுமான நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
தமிழகத்தில், மணல் குவாரிகள் அரசுடைமை ஆக்கப்பட்டிருந்தாலும், மணல் எடுப்பதிலும், குவாரிகளை பயன்படுத்துவது தொடர்பான கோர்ட் உத்தரவுகளால், ஏராளமான குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் முன்பு எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு கன அடி மணல் விலை, 70 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த கட்டுமான பணிகளும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

கம்போடியாவில்... : இந்த அசாதாரண சூழலை சமாளிக்கும் விதமாக, சில கட்டுமான நிறுவனங்கள், கம்போடியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்ய முயற்சிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்கு, ஆற்றுமணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இது சாத்தியமாவது சிக்கலாகியுள்ளது.
அப்படியே, கம்போடியாவில் ஒரு கன அடி மணல், 12 ரூபாய்க்கு கிடைத்தாலும், இறக்குமதி செய்யும் போது போக்குவரத்து செலவுகளையும் சேர்த்தால், சென்னைக்கு வரும் போது, அதன் விலை, 60 ரூபாயை எட்டும் என்பதாலும், இதில் யாரும் கவனம் செலுத்தவில்லை.

மியான்மரில்... : இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மணல் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றான, மியான்மரில் இருந்து, தமிழகத்துக்கு தேவையான மணலை இறக்குமதி செய்வது குறித்து, கட்டுமான நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. ஆற்று மணல் ஏற்றுமதிக்கு, அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதால், இது சாத்தியமாவதில் சிக்கல் இருக்காது. மேலும், மணல் இறக்குமதிக்கு இதுவரை, கம்போடியாவை நம்பியிருந்த, சிங்கப்பூர் போன்ற நாடுகளும், தற்போது மியான்மர் பக்கம் திரும்பியுள்ளன.
கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, அதிகரித்து வரும் மணல் தேவையை கருத்தில் கொண்டு, மியான்மரில் இருந்து ஆற்று மணல் இறக்குமதி செய்ய, சென்னையை சேர்ந்த, ஒரு தனியார் நிறுவனம் முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சிகள் பாதியிலேயே நின்றுவிட்டன. மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலே, இதற்கு காரணமாக கூறப்பட்டது.

ஆலோசனை : இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத பிரபல கட்டுமான நிறுவன நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தற்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு, தீர்வு காணும் வகையில், மியான்மரில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்நாட்டில் ஐராவதி நதி படுகையில் இருந்து, அதிக அளவில் மணல் கிடைப்பதால், ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அங்குள்ள பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்கள், தமிழகத்துக்கு மணல் அனுப்ப தயாராக உள்ளன. ஒரு கப்பலில், 15 ஆயிரம் டன் முதல், 20 ஆயிரம் டன் வரை கொண்டு வரமுடியும். அதுவும், மியான்மரில் இருந்து, நான்கு நாட்களில் ஒரு கப்பல், சென்னைக்கு வர முடியும் என்பதால், இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன. இதனால், கப்பல் போக்குவரத்து செலவும் அதிகமாக இருக்காது.

உரிமம் வேண்டும் : ஆனால், நம் நாட்டை பொறுத்தவரை, இறக்குமதி செய்யும் பொருள்கள் பட்டியலில் மணல் இல்லை. எனவே, தட்டுப்பாட்டை காரணம் காட்டி, மணல் இறக்குமதி செய்ய வேண்டுமானால், இதற்கு மத்திய நிதித் துறையிடமிருந்து, எஸ்.ஐ.எல்., எனப்படும் சிறப்பு இறக்குமதி உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இப்பணிகள் முடிந்துவிட்டால் மணல் இறக்குமதி சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு லோடு மணல், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது!

எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில், 1 கன அடி மணல் விலை, 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு லோடு மணல், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், அரசு மற்றும் தனியாரின் கட்டுமான திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆற்றுப் படுகைகள், சென்னை, திருச்சி, மதுரை, பொள்ளாச்சி ஆகிய நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பொதுப்பணித் துறை மூலம் மணல் எடுக்க, அனுமதி அளிக்கப்படுகிறது.
இங்குள்ள அதிகாரிகளிடம், 2 யூனிட் கொண்ட ஒரு லோடு மணலுக்கு, 626 ரூபாய் செலுத்தி ரசீது பெற்று, மணல் எடுத்துச் செல்லலாம் என்பது, அரசு விதி.ஆனால், ஒவ்வொரு லாரி உரிமையாளரும், இப்படி ரசீது வாங்கி மணல் அள்ள முடியாது; மேலும், எடுத்துக் கொட்டுவதற்கு தேவையான இயந்திர மற்றும் பணியாளர் வசதி, எல்லாரிடமும் இருக்காது என்பதால், குவாரிகளில் இருந்து மணலை எடுத்து, யார்டுக்கு கொண்டு வரும் பணியை மட்டும் செய்வதாக, தனியார் சிலர், இந்தத் தொழிலில் உள்ளே நுழைந்தனர்.நாளடைவில், குவாரிகள் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதிலிருந்து மணல் எடுத்து, யார்டுக்கு கொண்டு வந்து, அங்கிருந்து மணல் லாரிகளுக்கு விற்பதில், தனியாரின் ஆதிக்கம் தலை விரித்தாட துவங்கியுள்ளது. இதனால், குவாரிகளில், அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதும், கூடுதல் விலைக்கு விற்பதும் அதிகரித்தது.
கட்டுப்பாடுகள்
இந்நிலையில், பாலாறு, காவிரி, தாமிரபரணி ஆகிய, முக்கிய ஆற்றுப் படுகைகளில், அளவுக்கதிகமாக மணல் அள்ளப்படுவதாகக் கூறி, தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த ஐகோர்ட், "பொக்லைன்' இயந்திரத்தை பயன்படுத்தி மணல் அள்ள, தடை விதித்தது.இயந்திரங்கள் பயன்படுத்த தடை ஏற்பட்டதால், ஒரு யூனிட்டுக்கு, 313 ரூபாய்க்கு ரசீது பெற்று, பணியாளர்கள் மூலம், மணல் அள்ளப்பட்டு, டிராக்டர் மூலம், கரைக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கிருந்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம், மண் லாரிகளில் ஏற்றப்பட்டு, யார்டுகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு, மூன்று முறை இடம் மாற்றப்பட்டு, அதன் பிறகே, லாரிகளுக்கு மணல் கிடைக்கிறது. அள்ளும் பணியாளர் கூலி உள்பட, இட மாற்றத்துக்கு ஆகும் செலவை, இப்பணியை மேற்கொள்ளும் தனியார், மணல் விலையிலேயே சேர்த்து விடுகின்றனர். இதனால், ஒரு யூனிட் விலையில், 2,000 ரூபாய் வரை கூடுதல் தொகையை, லாரி உரிமையாளர்கள் தர வேண்டியிருக்கிறது.
புதிய தடை
இதையடுத்து, மேலும் ஒரு பொது நல வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஐந்தாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்த, 27 குவாரிகளுக்கு தடை விதித்து, ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்கள் படி, புதிய குவாரிகளை திறக்க, நடவடிக்கை எடுக்கவும் கோர்ட் உத்தரவிட்டது. திருச்சி மண்டலத்தில், கரூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் செயல்பட்ட, மணல் குவாரிகள் அனைத்தும், மூடப்பட்டன. பிற மண்டலங்களிலும், பெரும்பாலான குவாரிகள் மூடப்பட்டன.
தட்டுப்பாடு

இதனால், 96 குவாரிகள் மூலம் பெறப்பட்ட மணலை, 30க்கும் குறைவான குவாரிகளில் இருந்து, பெற வேண்டிய நிலை, கட்டுமான துறைக்கு ஏற்பட்டுள்ளது. இயந்திர தடையால் ஏற்பட்ட கூடுதல் செலவுடன், 27 குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும், கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
யார்டுகளில் மணல் கிடைப்பதில் தாமதமாவதால், ஒரு லோடுக்கு செல்லும் லாரிகள், நான்கு முதல் ஆறு நாள்கள் வரை, வெளியிடங்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் லாரி வாடகை, பணியாளர் ஊதியம், உணவுப் படி போன்றவை, மணல் விலையிலேயே சேர்க்கப்படுவதால், அதன் விலை, தொட முடியாத உயரத்துக்குசென்றுள்ளது.
கடந்த சில மாதங்கள் வரை, 1 கன அடி, 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல், தற்போதைய நிலவரப்படி, 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு யூனிட், 7,000 ரூபாய்க்கும்; 2.5 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல், 18 முதல், 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இதில், 4 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் விலை, 40,000 முதல், 50,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
போராட்டம்

இந்த விலை உயர்வால், தமிழகம் முழுவதும், அரசு திட்டங்கள் மற்றும் தனியாரின் வீடு கட்டும் திட்டங்களுக்கான கட்டுமான பணிகள், முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது."இப்பிரச்னையில் தலையிட்டு, உடனடியாக தீர்வு காணவும், நியாயமான விலையில் மணல் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசை, பல்வேறு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கம், சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவும், இந்த அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
அரசு நடவடிக்கை என்ன?
இது குறித்து பொதுப்பணித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மணல் தட்டுப்பாடு பிரச்னை துவங்கியவுடன், செப்டம்பர் மாதமே, முதல்வர் தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய குவாரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, அதிகாரிகளுக்கு, முதல்வர் உத்தரவிட்டார்.இதன்படி, மூடப்பட்ட குவாரிகளில், மணல் வளம் அதிகம் உள்ள, 20 இடங்களிலும், மேலும், 40 இடங்களில், புதிய குவாரிகளை திறக்கவும், முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு குழுவிடம் விண்ணப்பிக்கப் பட்டது. இக்குழு முதலில், 10 குவாரிகளை திறக்க, அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மேலும், 11 குவாரிகளை திறக்கவும், இப்போது அனுமதி கிடைத்துள்ளது.இதில் பெரும்பாலான குவாரிகள், திருச்சி மண்டலத்தில் அமைந்துள்ளதால், அடுத்த சில வாரங்களில் மணல் தட்டுப்பாடு நீங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய குவாரிகளை திறக்கவேண்டும்

மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலர், பன்னீர் செல்வம் கூறியதாவது:மணல் தேவையை கருத்தில் கொண்டு, கூடுதல் எண்ணிக்கையில், புதிய குவாரிகளை திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இது மட்டுமே முழுமையான தீர்வாகி விடாது.குவாரிகளில் இருந்து மண் அள்ளுவது, அதை யார்டு பகுதிக்கு கொண்டு வருவது, அங்கிருந்து லாரிகளுக்கு மணல் விற்பது வரை, அனைத்து பணிகளையும், அரசே ஏற்று நடத்த வேண்டும்.மணல் லாரி உரிமையாளர்களிடம் இருந்து, அவர்களின் தேவை அடிப்படையில் முன்கூட்டியே கட்டணங்களை வசூலித்து, அதற்கான டோக்கன்களை வழங்கலாம். இதன் மூலம், ஒரு குவாரியில் இருந்து, எத்தனை பேருக்கு, எவ்வளவு யூனிட் மணல் விற்பனை செய்யப் பட்டிருக்கிறது என்பது, வெளிப்படையாக இருக்கும்.
இதற்காக, "டாஸ்மாக்' போன்று, தனியாக, ஒரு பொதுத் துறை நிறுவனத்தை அமைக்கலாம். இதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைப்பதுடன், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், "ஆன்லைன்' முறையில், வெளிப்படையான நிர்வாகத்தில், மணல் விற்பனை நடைபெறுகிறது.தமிழகத்தில் இதை செயல்படுத்த வேண்டும் என, பல்வேறு மணல் லாரி உரிமையாளர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு பரிந்துரைகளை அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.














சனி, 3 நவம்பர், 2012

விதிமீறல் கட்டடங்கள்: வரன்முறைப்படுத்த வழிகாட்டி விதிமுறைகள் வெளியீடு


சி.எம்.டி.ஏ.,வில் நகரமைப்பு பட்டதாரிகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்குமா?

சி.எம்.டி.ஏ.,வில் புதிய திட்ட அதிகாரிகள் தேர்வில், நகரமைப்பு பட்டதாரிகளுக்கான விகிதத்தை 1:3 ஆக அதிகரிப்பது தொடர்பாக பணி விதிகளில் மாற்றம் செய்வதற்கான கோப்பு, அரசின் ஒப்புதலுக்காக, 10 ஆண்டுகளாக காத்திருக்கிறது. இத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், கூடுதல் எண்ணிக்கையில் நகரமைப்பு பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தமிழகத்தில், சி.எம்.டி.ஏ., நகரமைப்பு துறை இயக்குனரகம் (டி.டி.சி.பி.,), வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் ஆகிய அலுவலகங்களில் நகரமைப்பு வல்லுனர்களின் பணி அவசியமாகிறது.கட்டுமான பொறியியல் உள்ளிட்ட நகரமைப்பு சார்ந்த துறையில் பட்டமும், நகர்ப்புற திட்டமிடலில் பட்ட மேற்படிப்பும் முடித்தவர்களே நகரமைப்பு வல்லுனர் பதவியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர்.

தகுதியானோர் இல்லை:இதுகுறித்து, இந்திய நகரமைப்பு திட்ட நிறுவனம் (ஐ.டி.பி.ஐ.,) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த விவரம்:தமிழகத்தில் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனரக துறையில் பணியாற்றுகின்ற உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளில், 25 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் தகுதி வாய்ந்த நகரமைப்பு திட்ட வல்லுனர்களாக உள்ளனர். சி.எம்.டி.ஏ.,வில் உள்ள, 72 நகரமைப்பு வல்லுனர்களில், 32 பேர் போதிய தகுதியற்றோராக உள்ளனர். தமிழக மாநகராட்சிகளில், 10 சதவீத நகரமைப்பு திட்ட வல்லுனர்களே தகுதி வாய்ந்தவர்கள் என, இந்திய நகரமைப்பு திட்ட நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.கடந்த, 1980ம் ஆண்டு வகுக்கப்பட்ட பணி விதிகளின் படி தேர்வு நடைமுறைகள் மாற்றப்படாததால், சி.எம்.டி.ஏ.,வில், நகரமைப்பு பட்டதாரிகளை காட்டிலும், முதுநிலை பட்டயம் படித்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.இந்த பழைய நடைமுறையின் படி, 1:1 என்ற விகிதத்தில்பட்டயம் முடித்தவர்களும், பட்டதாரிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர். அப்போதைய சூழலில் பட்டதாரிகள் அதிகம் இல்லை என்பதால், பட்டயம் முடித்தவர்களுக்கு சமவிகிதத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்தது.

பாதிப்பு என்ன?:இதுகுறித்து, தொழில் முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் சதானந்த் கூறியதாவது:
பட்டயம் முடித்து வந்தவர்களில் பெரும்பாலோர், திட்ட அனுமதி வழங்கல் தொடர்பான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்துவதால்,
நகர்ப்புற மேம்பாட்டுக்கான புதிய திட்டங்கள் உருவாக்குவது பாதிக்கப்படுகிறது.எனவே, நகரமைப்பு துறை, பட்டதாரிகளை அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்வதன் மூலம், புதிய திட்டங்களை உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்தலாம்.நாடு முழுவதும் பட்டதாரிகளே அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்படு கின்றனர். ஆனால், சி.எம்.டி.ஏ.,வில் மட்டும் பழைய பணி விதிகளின் அடிப்படையில் பணியாளர் தேர்வு நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சி.எம்.டி.ஏ.,வில் புதியதிட்ட அதிகாரிகள் தேர்வில், 1:1 என்ற விகிதத்தில் பட்டயம் முடித்தோரும், பட்டதாரிகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விகிதத்தை 1:3 என மாற்றுவது தொடர்பாக, 2002ல், ஆய்வு செய்ய உறுப்பினர் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. உதவி திட்ட அதிகாரி தேர்வு மற்றும் பதவி உயர்வில் பட்டயம் பெற்றோர், பட்டதாரிகள் இடையிலான விகிதத்தை, 1:3 ஆக மாற்ற முடிவு செய்யப்பட்டது.இதற்காக பணி விதிகளில் திருத்தங்கள் செய்யப்படுவது தொடர்பான வரைவு அறிக்கை, அரசுக்கு அனுப்பப்பட்டது. அரசிடமிருந்து, இதற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒப்புதல் கிடைத்ததும் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.





தமிழக வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மோசடி

வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை, மோசடியாக விற்பனை செய்த விவகாரத்தில் மேலும் சில அதிகாரிகள் சிக்கியுள்ளனர். இது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது. வீட்டுவசதி வாரியத்தின் ஒவ்வொரு திட்டப்பகுதியிலும், குறிப்பிட்ட அளவு நிலம் இருப்பு வைக்கப்படும். இத்தகைய நிலங்களை அந்தந்த கோட்டங்களில் உள்ள அதிகாரிகள், முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக அரசுக்கும், வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகத்துக்கும் புகார்கள் வந்தன.

இப்புகார்கள் குறித்து வீட்டுவசதி வாரிய உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், கோவையில் கணபதி திட்டப்பகுதியில் ஏழு, எட்டு ஆகிய பிரிவுகளில், எதிர்கால திட்டங்களுக்கு என, ஒதுக்கப்பட்ட, 100 சென்ட் நிலம், மனைகளாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு நபர்களுக்கு மோசடியாக விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இத் திட்டப் பகுதிக்கு பொறுப்பாளாக இருந்த செயற்பொறியாளர் ராமமூர்த்தியும், அவருக்கு கீழ் பணி புரிந்த மூன்று பேரும் அண்மையில், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

"தினமலர்' எதிரொலி:இது தொடர்பான செய்தி, கடந்த மாதம், 12ம் தேதி, "தினமலர்' நாளிதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து, நிலமோசடி தொடர்பான புகார்களில் சிக்கிய, மற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு, வீட்டுவசதி வாரிய உயரதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.இதையடுத்து, கோவை, மதுரை, வேலூர், நெல்லை போன்ற கோட்டங்களில் நடந்த நிலமோசடி தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விசாரணையில் மேலும் சில விவரங்கள் தெரியவந்துள்ளன.

ஆதாரங்கள் அழிப்பு:கோவையில் அண்ணாநகர் பிரிவில், இடையர் பாளையம் பகுதியில், 70 சென்ட் நிலம், எவ்வித அறிவிப்பும் இன்றி, கோட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் உறவினர்கள், அவர்களுக்கு வேண்டப் பட்டவர்களுக்கும் விற்கப்பட்டுள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதே போல, மேட்டுப்பாளையம் சிக்கதாசன் பாளையம் பகுதியில், 60 சென்ட் நிலம், உள்ளூர் அளவிலேயே விற்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்கள் அழிக்கப் பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான சந்தேகம் வலுவடைந்து உள்ளது.

விரைவில் நடவடிக்கை:இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, வீட்டு வசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும், பல்வேறு கோட்டங்களில் நடந்ததாக கூறப்படும், நில மோசடி தொடர்பான புகார்கள் மீதான விசாரணை, முடுக்கி விடப் பட்டுள்ளது. ஏற்கெனவே சிலர் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும் சில அதிகாரிகள், நிலமோசடியில் ஈடுபட்டுள்ளது கவனத்துக்கு வந்துள்ளது. விரைவில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.