வெள்ளி, 19 மார்ச், 2010

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத 17 கவுன்சிலர்கள்

  சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டில் 17 வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை.
 
கடந்த 4 நிதி ஆண்டுகளில் வார்டு  மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியில் சராசரியாக 67 சதவீதம் மட்டுமே செலவிடப்படுவதும் தற்போது தெரிய வந்துள்ளது.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மாநகராட்சி அதிகாரிகள் இத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சியில் மன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டம் வகுக்கப்பட்டு ஆண்டுதோறும் இதற்காக குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
 
மாநகராட்சியின் பல்வேறு துறைகள் மூலம் சுகாதாரம், பள்ளிக் கல்வி, சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டாலும், குறிப்பிட்ட பகுதிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு அந்தந்தப் பகுதி வார்டு உறுப்பினர்கள் நேரடியாக நிதி ஒதுக்கி திட்டங்களைச் செயல்படுத்த இந்த மேம்பாட்டு நிதி அளிக்கப்படுகிறது.
 
இதற்கான வழிகாட்டி நெறி முறைகள் வகுக்கப்பட்டு மன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கடந்த 2005}06, 2006}07, 2007}08, 2008}09 ஆகிய நிதி ஆண்டுகளில் வார்டு மேம்பாட்டுக்காக உறுப்பினர்களுக்கு ஒதுப்பட்ட நிதி, அதில் செலவழிக்கப்பட்ட தொகை, செலவழிக்கப்படாத தொகை குறித்த விவரங்களை போரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாதவ், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கோரியிருந்தார். 
 
மாநகராட்சி பதில்: 
 
இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிதி ஆலோசகர் மற்றும் பொதுத் தகவல் அதிகாரி அளித்துள்ள பதில் விவரம்:
 
மன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டத்துக்காக, 2005}06 நிதி ஆண்டில் ரூ. 1,085 லட்சம் ஒதுக்கப்பட்டதில் ரூ. 967.8 லட்சம் (89.2 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2006}07 நிதி ஆண்டில், ரூ. 10.85 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ. 5.31 கோடி (48.97 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2007}08 நிதி ஆண்டில், ரூ. 10.85 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ. 7.60 கோடி (70.07 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2008}09 நிதி ஆண்டில், ரூ. 23.25 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 14.76 கோடி (63.5 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2009}2010 நிதி ஆண்டில் ரூ. 38.75 கோடி ஒதுக்கப்பட்டதில் டிசம்பர் மாதம் வரை ரூ. 9.74 கோடி (25.14 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது.5 நிதி ஆண்டுகளில் மொத்தம் ரூ. 94.55 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 47.09 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆண்டு சராசரியாக 67 சதவீத நிதி மட்டுமே செலவிடபட்டுள்ளது.
 
 மேயர்: 
 
இதேபோல மேயருக்கான சிறப்பு மேம்பாட்டு நிதிக்காக 2005}06 முதல் 2009}2010 வரையிலான 5 நிதி ஆண்டுகளில் ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 44.99 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
 
ஒரு பைசா கூட பயன்படுத்தாதவர்கள்: 
 
சென்னை மாநகராட்சியில் உள்ள 10 மண்டலங்களில் 1, 4, 6, 7, 8 ஆகிய மண்டலங்களில் 2005}06 முதல் 2008}09 நிதி ஆண்டு வரை வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்தவில்லை.
 
 
இதேபோல, நடப்பு நிதி ஆண்டில் 97, 98, 99, 100, 101, 102, 103, 106, 108, 111, 113, 114, 116, 117, 118, 121, 128 ஆகிய வார்டுகளில் கவுன்சிலர்களின் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு ரூபாய்கூட செலவிடப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தங்களது பதிலில் குறிப்பிட்டுள்ளனர்.
 
 
இதுவரை வார்டு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 25 லட்சமாக இருந்த மேம்பாட்டு நிதி, வரும் நிதி ஆண்டில் இருந்து ரூ. 30 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது.

தகவல் அளிக்க கட்டணம் வசூலிப்பதில் குழப்பம்


  கவல் கோரும் மனுதாரர்களுக்கு ஆவணங்களின் நகல்களை அளிக்க கட்டணம் வசூலிப்பதில் அரசு அதிகாரிகளிடம் குழப்பம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிந்க்கின்றனர்.
 
2005ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள, "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்'படி அரசின் நிர்வாக நடைமுறை குறித்த தகவல்களை மக்கள் மனுச் செய்து எழுத்துப்பூர்வமாக பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இவ்வாறு தகவல்களைப் பெற மாநில அரசுத் துறை அலுவலகமானால் மனுவுடன் ரூ. 10 மதிப்பிலான நீதிமன்ற வில்லையை ஒட்டி அனுப்ப வேண்டும். மத்திய அரசுத்துறைகளில் தகவல் கோரும்போது, ரூ.10-க்கான வங்கி வரைவோலை அல்லது அஞ்சல் ஆணையை இணைத்து அனுப்ப வேண்டும்.மனுதாரர் கோரும் தகவல்கள், அது தொடர்பான ஆவணங்களின் நகல்களை ஒரு பக்கத்துக்கு ரூ. 2 வீதம் கட்டணம் பெற்றுக் கொண்டு அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இவ்வாறு மனுச் செய்யும்போதும், நகல்களைப் பெறும்போதும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு, கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த விலக்கு வரம்பில் வரத் தகுதி இல்லாத மற்ற அனைவரும் உரிய கட்டணங்களை அவசியம் செலுத்தியாக வேண்டும்.இவ்வாறு தகவல்கள் தொடர்பான ஆவணங்களின் நகல்களைப் பெற செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்து, தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:
 
தகவல் கோரும் மனுவுடன் ரூ. 10 மதிப்பிலான நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும். தகவல் தொடர்புக்கான நகல்களைப் பெற ஒரு பக்கத்துக்கு ரூ. 2 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.இந்தக் கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 0075 அல்லது, 00800 உள்ளிட்ட சில குறிப்பிட்ட கணக்குகளில் செலுத்தி அதற்கான ஒப்புகைச் சீட்டை உரிய பொதுத் தகவல் அதிகாரியிடம் செலுத்தி நகல்களைப் பெறலாம்.
 
நகல்களுக்கான கட்டணங்களை ரொக்கமாகவோ, அஞ்சல் பணவிடை மூலமாகவோ செலுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், தமிழக அரசின் பல்வேறு அரசு அலுவலகங்களில் உள்ள பொது தகவல் அதிகாரிகளிடம் இது குறித்த முழுமையான விவரங்கள் இன்னமும் சென்றடையாத நிலை உள்ளது.
 
குறிப்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை தொடர்பான சில ஆவண நகல்களை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ரவி கோரியிருந்தாராம்.குறிப்பிட்ட ஒரு சலானைப் பயன்படுத்தி பாரத ரிசர்வ் வங்கியில் செலுத்த வேண்டும் என அங்குள்ள பொதுத் தகவல் அதிகாரி தெரிவித்தாராம்.
 
ஆனால், முன்னாள் ராணுவத்தினர் நல வாரிய அலுவலகத்தில் வங்கி வரைவோலை, அல்லது வங்கி காசோலை, அஞ்சல் பணவிடை மூலம் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என மனுதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலகத்தில் அவர்களது அலுவலகத்திலேயே கட்டணத்தை ரொக்கமாகவோ, அல்லது காசோலை மூலமாகவும் பெற்றுக் கொள்கின்றனர்.
 
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகங்களில் தகவல் தொடர்பான ஆவணங்களை அளிப்பதற்கான கட்டணங்களை காசோலை மூலமாகவே பெற்றுக் கொள்கின்றனர்.கட்டணங்களைப் பெறுவதற்கு அரசு தெளிவாக ஒரு நடைமுறையை அறிவித்துள்ள நிலையிலும், ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் வெவ்வேறு விதங்களில் கட்டணங்கள் பெறப்படுகின்றன. இது மனுதாரர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 
 
அரசின் அறிவுறுத்தல்கள் அனைத்து நிலைகளுக்கும் முழுமையாகச் சென்றடையாததே இந்தக் குழப்பத்துக்குக் காரணம் எனத் தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
 
இவ்வாறு வெவ்வேறு விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் மனுதாரர்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் உருவாகிறது. இதனைத் தடுத்து அனைத்து அலுவலகங்களிலும் ஒரே சீரான நடைமுறை அமலாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

திங்கள், 8 மார்ச், 2010

முதல்வரின் முன்னாள் செயலர் டி.ஆர். ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.12 லட்சம்

  முதல்வர் கருணாநிதியின் முன்னாள் செயலரும், மாநில தகவல் ஆணையருமான டி.ஆர். ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் அளித்துள்ளது தமிழக அரசு.
 
தஞ்சை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.ஆர். ராமசாமி. முதல்வர் கருணாநிதியின் செயலராக 3 முறை இருந்தவர்.வயது மூப்பு காரணமாக கடந்த 2008}ம் ஆண்டு ஏப்ரல் 5}ம் தேதி டி.ஆர். ராமசாமி ஓய்வு பெற்றார். பின்னர் 2008 மே 7}ம் தேதி இவர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையின் போது டி.ஆர். ராமசாமிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதற்காக சில உயர்ரக ஊசி மருந்துகளுடன் கதிரியக்க சிகிச்சையும் அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
 
இந்த சிகிச்சையில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கான "ஐஆர்இஎஸ்எஸ்ஏ}250' ரக மாத்திரைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட பரிசோதனை மற்றும் மாத்திரைகள் வாங்கிய வகையில் டி.ஆர். ராமசாமிக்கு ரூ. 5.91 லட்சம் செலவாகியுள்ளது.
 
மேலும், தொடர் சிகிச்சைக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால் தனது நிலை குறித்து விளக்கி, மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதி உதவியை அளிக்குமாறு அரசிடம் டி.ஆர். ராமசாமி கோரியிருந்தார்.
 
இது தொடர்பாக பொள்ளாச்சியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் "தாயகம்' அமைப்பைச் சேர்ந்த நா. பாஸ்கரன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரியிருந்தார்.
 
இதற்கு தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை பொது தகவல் அலுவலர் ச.ராமலிங்கம் கடந்த 2}ம் தேதி அளித்த பதில் விவரம்:
 
தகவல் ஆணையர் டி.ஆர். ராமசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் ரூ.12.54 லட்சத்தை அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை (எண்: 22) பிப்ரவரி 5}ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி டி.ஆர். ராமசாமியின் மருத்துவ செலவுகளுக்காக முதல்கட்டமாக ரூ. 5.91 லட்சத்தை அளிக்கவும், மற்ற சிகிச்சைகள் முடிவடைந்தவுடன் மீதித் தொகையை அளிக்கவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசின் உயர் பதவியில், அதுவும் முதல்வரின் செயலராக பணிபுரிந்த அதிகாரி ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி வழங்குவது அரசின் சுய விருப்பத்தை பொருத்தது.எனினும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரியும்போதும், ஓய்வு பெற்ற சமயத்திலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உரிய வசதிகளை செய்ய முறைப்படியான காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
 
இத்தகைய சலுகைகள் மூலம் கிடைக்கும் உதவிகளுக்கு மாற்றாக, தகவல் ஆணையர் டி.ஆர்.ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதி உதவியை அரசே நேரடியாக வழங்கியுள்ளது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

வியாழன், 4 மார்ச், 2010

சிமென்ட் விலை: மூட்டைக்கு ரூ.25 உயர்வு?

  மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தி வரி உயர்வை அடுத்து சில்லறை விற்பனையில் சிமென்ட்டின் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.25 வரை அதிகரிக்க உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த விலை உயர்வை இறுதி செய்வது குறித்து முடிவெடுப்பதற்காக உற்பத்தியாளர்களின் ரகசிய கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
 
தமிழகத்தில் 2006 முதல் சிமென்ட் விலையை முறையான காரணங்கள் எதுவும் இன்றி உற்பத்தியாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.÷அரசின் நடவடிக்கையை அடுத்து தவிர்க்க முடியாத நிலையில் சிமென்ட் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த சில மாதங்களுக்குள் விலை உயருவது தொடர்கதையாகிவிட்டது.
 
கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மூட்டை ரூ.260 ஆக உயர்ந்த சிமென்ட் விலை அக்டோபரில் ரூ.245 ஆக குறைந்தது. ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் சிமென்ட் அளவு படிப்படியாக அதிகரித்தது. 
 
இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடந்த டிசம்பரில் சில்லறை விற்பனையில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.200 ஆக குறைந்தது.இருப்பினும் இந்த விலை குறைப்பு குறுகிய காலமே நீடித்தது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து சிமென்ட் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த வார நிலவரப்படி ஒரு மூட்டை சிமென்ட் ரூ.240 வரை விற்கப்பட்டது.
 
 
உற்பத்தி வரி உயர்வு: 
 
கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சிமென்ட் உள்ளிட்ட பொருள்கள் மீதான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரு மூட்டை விலை ரூ.8 முதல் ரூ.10 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், ஒரு மூட்டை விலையை ரூ.25 வரை உயர்த்த தமிழகத்தில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.÷டீசல் விலை உயர்வு, மூலப்பொருள்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்த விலை உயர்வை உற்பத்தியாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
 
விலை உயர்வு சாத்தியமா? 
 
உற்பத்தியாளர்கள் அறிவிக்கும் விலை உயர்வு அமலாவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக விற்பனையாளர்களும், கட்டுமானத் துறையினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
மேலும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் மிகக் குறைந்த விலையில் சிமென்ட் கிடைப்பதால் மொத்தமாக கொள்முதல் செய்வோர் தமிழக உற்பத்தியாளர்களை தவிர்த்து வெளிமாநிலங்களில் வாங்க முன்வந்துள்ளனர்.
 
மேலும், இப்போது எல்லா நிறுவனங்களின் உற்பத்தியும் வெகுவாக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் சிமென்ட் விற்பனை அதிகரிக்கவில்லை.இதனால், உற்பத்தியாளர்கள் முன்பு போல் தங்கள் விருப்பப்படி சிமென்ட் விலையை உயர்த்துவது அவ்வளவு எளிதானதல்ல என கட்டுமானத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 1 மார்ச், 2010

தகவல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை: 16 தன்னார்வ அமைப்புகள் அரசிடம் வலியுறுத்தல்

  தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் மற்றும் 2 தகவல் ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.
 
தமிழகத்தில் மாநில தகவல் ஆணையம் 2006}ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். ராமகிருஷ்ணனை தலைமை தகவல் ஆணையராகவும்,  ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஜி. ராமகிருஷ்ணன், ஆர். ரத்தினசாமி ஆகியோரை தகவல் ஆணையர்களாகவும் நியமித்து தமிழக அரசு 12-1-2006-ல் அரசாணை வெளியிட்டது.
 
இதன் பின்னர், டி.ஆர். ராமசாமி, ஆர். பெருமாள்சாமி, டி. ஸ்ரீநிவாசன், பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் ஆகியோரை தகவல் ஆணையர்களாக நியமித்து 7-5-2008-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
 
பதவிக்காலம்: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நிர்வாக விதிகளின்படி தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் அவர்கள் பதவி ஏற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது அவர்களின் 65 வயது வரை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த விதியின்படி, வயது மூப்பு காரணமாக தகவல் ஆணையர் ஆர். ரத்தினசாமி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து இப்போது தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும், ஜி. ராமகிருஷ்ணன் அக்டோபர் மாதத்திலும் ஓய்வு பெறுகின்றனர்.
 
இதனால், 3 தகவல் ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்ப வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். 
 
தகுதி என்ன?  
 
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் பிரிவு 15 (5)-ன்படி சட்டம், அறிவியல் தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை, இதழியல், வெகுஜன ஊடகம் ஆகிய துறைகளில் இருந்து தகுதி வாய்ந்த நபர்களை தகவல் ஆணையர்களாக நியமிக்கலாம்.
 
தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் அரசால் நியமிக்கப்பட்ட 7 ஆணையர்களில் 6 பேர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஒருவர் கல்லூரி பேராசிரியர்.பணியில் உள்ள அரசு அதிகாரிகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி சரியாக செயல்பட வில்லை என்ற மேல்முறையீட்டு மனுக்களே தகவல் ஆணையத்துக்கு வருகிறது. 
 
இத்தகைய மனுக்களை விசாரிப்பவர்கள் முன்னாள் அதிகாரிகளாக இருக்கும் நிலையில் அவர்களின் விசாரணை மக்களுக்கு எத்தகைய திருப்தியை தரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.இதனால், மாநிலத் தகவல் ஆணையத்தின் பெரும்பாலான நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் திருப்தியின்மையே நிலவுகிறது. 
 
வெளிப்படையான நியமனம்:  
 
எனவே, அடுத்த சில மாதங்களில் 3 தகவல் ஆணையர்களை நியமிக்கும் போது, அதற்கான நடவடிக்கைகளை அரசு வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
 
நாளேடுகளில் விளம்பரம் செய்து, சட்டத்தில் குறிப்பிட்டுள்ள துறைகளை சேர்ந்தவர்களில் தகுதி வாய்ந்த நபர்களை அரசு சாரா அமைப்புகள் மூலம் ஆய்வு செய்து, அதில் இருந்து உரிய நபர்களை தேர்ந்தெடுத்து தகவல் ஆணையர்களாக நியமிக்கலாம் என பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
 
இது தொடர்பாக, பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த வி. மாதவ், அஜீத் மேனன், அருண் கோபாலன், அரவிந்த் கெஜ்ரிவால், எம். விஜயபாஸ்கர், பத்திரிகையாளர் நித்யானந்த் ஜெயராமன், வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம், வி. கிருஷ்ணகாந்த், பேராசிரியர் வி. வசந்திதேவி, விஜயானந்த் உள்ளிட்ட 16 பேர் கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
 
தமிழக அரசின் தலைமைச் செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஆகியோருக்கு இது தொடர்பான மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.