திங்கள், 27 ஜூலை, 2009

"பாண்டு' வாத்தியக் காவலர்கள் நியமனம்: தேர்வுக் குழுமத்தின் "மெüனம்' கலையுமா?

தமிழக காவல் துறையில் "பாண்டு' வாத்தியக் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 317 பேர் நியமன ஆணை கிடைக்காமல் கடந்த ஓராண்டாக காத்திருக்கின்றனர்.

தமிழக காவல் துறையில் தலைமையகம் மற்றும் சென்னை உள்ளிட்ட அனைத்து காவல் ஆணையர், ஐ.ஜி. அலுவலகங்கள், சிறப்பு காவல்படை பட்டாலியன்களில் வாத்தியக் காவலர்கள் பிரிவு உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாத்தியக் காவலர்களாக இந்தப் பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் மற்ற காவலர்களைப் போலவே தேர்வு நடத்தி இந்தப் பிரிவுக்கான காவலர்களைத் தேர்வு செய்கிறது. ஆனால், பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதல், லத்திகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பணி சார்ந்த சில பயிற்சிகள் தவிர்த்து மற்ற காவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் இவர்களுக்கும் அளிக்கப்படுகின்றன.


ஆண்டுதோறும் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வாத்திய காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தொடர்பான தமிழக அரசின் உள்துறை பிறப்பித்த அரசாணையின்படி (எண்: 877- காவல் 9) கடந்த 2007-ல் வாத்திய காவலர்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.


2008 ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.


இதில் பங்கேற்றவர்களின் கல்வித் தகுதி, வயதுச் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு, இசைக்கும் திறன் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இவற்றில் தேர்வானவர்கள் காவல் விசாரணை, கைவிரல் ரேகை எடுத்தல் மற்றும் மருத்துவப் பரிசோதனையும் செய்து இறுதியாக 317 பேர் வாத்திய காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 2008 ஜூன் 24-ல் தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு உரிய நியமன ஆணை வழங்கி பயிற்சிக்கு அனுப்பியிருக்க வேண்டும்.


ஆனால், தேர்வு செய்யப்பட்டு ஓராண்டாக பயிற்சிக்கு அனுப்பப்படாமல் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியுடன் 317 பேரும் காத்திருக்கின்றனர்.
"இது தொடர்பாக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தை பல முறை அணுகினாலும், அதிகாரிகள் தரப்பில் உறுதியான பதில் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை' என்கின்றனர் வாத்திய காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்.


ஆனால், எங்களுக்கு பிறகு மேலும் ஒரு தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடித்தவர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தற்போது பயிற்சியை முடிக்கும் நிலையில் உள்ளனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.


வேறு வேலைக்கும் முயற்சிக்காமல் அல்லது உயர் படிப்புக்கும் செல்லாமல் வாத்தியக் காவலர் வேலைக்காக காத்திருக்கிறோம். எங்களுக்கு நியமன ஆணைகள் வழங்குவதை தேர்வுக் குழுமம் விரைவுப்படுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வுக் குழுமத்தின் நிலை...:

இது தொடர்பாக விசாரித்த போது, வாத்திய காவலர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆணைகள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொள்ளும் அதிகாரிகள் அதற்கான காரணம் எதையும் கூறவில்லை.


இவர்களை தவிர்த்துவிட்டு வேறு பிரிவினரை பயிற்சிக்கு அனுப்பியதை உறுதி செய்யவும் அதிகாரிகள் மறுத்தனர்.

திங்கள், 20 ஜூலை, 2009

கால்நூற்றாண்டு அரசாணையால் பல்லாவரம் நகராட்சிக்கு ரூ. 1 கோடி வருவாய் இழப்பு!

வணிக வளாகங்களுக்கு வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை 1985-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணை காரணமாக பல்லாவரம் நகராட்சிக்கு ரூ. 1 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்க்கட்டளை பஸ் நிலைய வளாகத்தில் மெகாசிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் ரூ. 68 லட்சத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்டது.


தரைதளத்தில் தலா 144 சதுர அடி பரப்பளவில் 44 கடைகள் உள்ளன.
2770 சதுர அடி, 2800 சதுர அடி, 815 சதுர அடி என முன்று பிரிவுகளைக் கொண்டதாக முதல் தளம் கட்டப்பட்டது.


ஒரு சதுர அடிக்கு ரூ. 10 என்ற அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை எண் 92-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு தரை தளத்தில் உள்ள 43 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு கடையில் நகராட்சியின் வரி வசூலிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.


முதல் தளத்தில் உள்ள வணிக பகுதிகள் கடந்த 9 ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறை 29-04-1985-ல் பிறப்பித்த அரசாணை 285-ன் படி நகராட்சி அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாடகையே காரணமாக கூறப்படுகிறது.


கீழ்க்கட்டளை பகுதியில் தனியார் கட்டடங்களில் செயல்படும் வங்கிகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் அளிக்கும் வாடகையைவிட நகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்படும் வாடகை 200 மடங்கு அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.


உதாரணமாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இந்த வளாகத்தில் இடம் கோரப்பட்டது. ஆனால், அரசாணை எண் 285-ஐ சுட்டிக்காட்டி நகராட்சி அதிகாரிகள் 970 சதுர அடி இடம் தருவதாகவும் அதற்கு மாதம் ரூ. 25 ஆயிரம் வாடகை தர வேண்டும் என தெரிவித்தனர்.


இதனை காவல் துறை ஏற்காததால் 637 சதுர அடி இடத்தை ரூ. 16,500 வாடகையில் அளிக்க நகராட்சி அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் இதே அளவு இடத்தை ரூ. 6,000 மாத வாடகைக்குப் பெற்று காவல் நிலையம் தற்போது அங்கு செயல்பட்டு வருகிறது.


அஞ்சலகம்...:

இந்நிலையில், கீழ்க்கட்டளை பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை அடிப்படையில் இங்கு அஞ்சலகம் தொடங்க தபால்துறை முடிவு செய்தது. இதற்காக 750 சதுர அடி இடம் கேட்டு தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், பல்லாவரம் நகராட்சி ஆணையருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி கடிதம் எழுதினார்.


இதற்கு 26-9-2008-ல் பதில் அளித்த நகராட்சி ஆணையர், கீழ்க்கட்டளை வணிக வளாகத்தில் 2770 சதுர அடி, 2880 சதுர அடி அளவு இடங்கள் மட்டுமே உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை எண் 285-ன் படி வாடகை செலுத்த சம்மதம் தெரிவித்தால் இது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.


ஆனால், கீழ்க்கட்டளை அஞ்சலகத்துக்கு 815 சதுர அடி நிலத்தை ரூ. 25 ஆயிரம் மாத வாடகை தர வேண்டும் என நகராட்சி சார்பில் கோரப்பட்டது. மேலும், 9 மாத வாடகையை முன்பணமாகத் தர வேண்டும் என்றும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இது கீழ்க்கட்டளை பகுதியில் சந்தை நிலவரத்தைவிட அதிகமாக உள்ளதாகக் கூறி இதனை ஏற்க தபால்துறையினர் மறுத்துள்ளனர்.


இந்த வளாகத்துக்கு வாடகை நிர்ணயிப்பதில் அரசாணை 285-ஐ சுட்டிக் காட்டும் நகராட்சி அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் முதல் மாடியில் 2 ஆயிரம் சதுர அடி இடத்தை ரூ. 20 ஆயிரம் மாத வாடகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக கிளை அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.


ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு ஒரு விதத்திலும், அஞ்சலகத்துக்கு ஒரு விதத்திலும் வாடகை நிர்ணயிப்பது ஏன்? என்று கீழ்க்கட்டளை பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


நகர்மன்றத் தலைவர் உறுதி:

கடந்த மக்களவைத் தேர்தலின் போது இப்பகுதி மக்களின் கோரிக்கை அடிப்படையில் நகராட்சி வணிக வளாகத்தில் இடம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல்லாவரம் நகர் மன்றத் தலைவர் இ. கருணாநிதி உறுதி அளித்திருந்தார்.


ஆனால், வாடகை நிர்ணயிப்பதில் நகராட்சி அதிகாரிகள் நடந்துக் கொள்ளும் போக்கு நகர்மன்றத் தலைவரின் உறுதி நிறைவேறுவதை தடுப்பதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.


வருவாய் இழப்பு:

மேலும், சந்தை மதிப்புப் படி சதுர அடி ரூ. 10 வீதத்தில் வாடகைக்கு விட்டிருந்தால் மாதம் ரூ. 75 ஆயிரம் வீதம் கடந்த 9 ஆண்டுகளில் நகராட்சிக்கு ரூ. ஒரு கோடி வரை வருவாய் கிடைத்திருக்கும். இந்த வருவாய் நகராட்சிக்கு இழப்பாக மாறியுள்ளது. வணிக வளாகமும் பாழாகும் நிலையில் உள்ளது.


அதிகாரிகளின் இந்தப் போக்கு காரணமாக கீழ்க்கட்டளை பகுதி மக்களுக்கு அஞ்சலக வசதி கிடைப்பதும் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


பல்லாவரம் மட்டுமல்ல...:

1985-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை காரணமாக பல்லாவரம் போன்று பல்வேறு நகராட்சிகளுக்கு சொந்தமான வளாகங்களை வாடகைக்கு விடுவதில் சிக்கல் நிலவுகிறது.


இதனால், பல்வேறு நகராட்சிகளுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணை தொடர்பான பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

சனி, 18 ஜூலை, 2009

திருமங்கலீஸ்வரர் கோயில் நில விவகாரம் வருவாய்த் துறை, சி.எம்.டி.ஏ. நிலை என்ன?

சென்னை கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு விவகாரத்தில் வருவாய்த்துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) நிலைப்பாடு குறித்து குழப்பம் நிலவுகிறது.


திருமங்கலீஸ்வரர் கோயில் நிலம் அபகரிக்கப்படுவது தொடர்பாக "தினமணி'யில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.


இதையடுத்து அந்த நிலத்தில் "ஓசோன் குழுமத்தின்' அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதியை நிறுத்தி வைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.

மேலும், தன்னிச்சையாக செயல்பட்டு இந்த அனுமதியை வழங்கியதாக மாநகராட்சியின் 5-வது மண்டல செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


அந்த குறிப்பிட்ட நிலத்தின் ஆவணங்களில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன.


கோயம்பேடு சந்திப்பில் டபிள்யு.எஸ். இன்சுலேட்டர் சேதுராமன் என்பவரிடம் இருந்து ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலத்தை வாங்கியுள்ளனர். இதன் பின்னர் ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தினர் காலத்தில் அங்கு உள்ள மற்ற நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.


திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3.03 ஏக்கர் நிலம் மட்டுமல்லாது இதே பகுதியில் நீராதார புறம்போக்கு மற்றும் கிராம நத்தம் புறம்போக்காக சுமார் 9 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


2003-ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்தின் மனைப்பிரிவு திட்டம் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்த மாநகராட்சியின் அப்போதைய வருவாய் அதிகாரி ஜெயகாந்தன் தனது கடிதத்தில் மேற்கண்ட தகவல்களை குறிப்பிட்டிருந்தார்.


கோயில் நிலம் மட்டுமல்லாது வருவாய்த்துறைக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலமும் தவறான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு அப்போதே தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இத்தகைய கிராம நத்தம் அல்லது நீராதார புறம்போக்கு நிலத்தில் எவ்வித அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்ட அனுமதி அளிக்கப்படமாட்டாது என சி.எம்.டி.ஏ.வின் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்துக்கு சி.எம்.டி.ஏ. எப்படி ஒப்புதல் அளித்தது என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.


மேலும், ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் கட்டுப்பாட்டில் இந்த நிலம் இருந்தபோது நிலத்தின் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சட்டவிரோதமான முறையில் திருத்தப்பட்டுள்ளது குறித்த ஆட்சேபனைகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.


வரைபட அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களுடன் நோட்டரி பப்ளிக் அல்லது துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள ஒருவரின் சான்றொப்பத்துடன் ஆவணங்களை சமர்ப்பித்தாலே போதும் என சி.எம்.டி.ஏ. விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு வரும் ஆவணங்களின் உண்மைத் தன்மை தனியாக ஆய்வு செய்யப்படுவதில்லை.


இந்த நிலையில், ஓசோன் குழுமத்துக்கு ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனம் விற்ற நிலத்தின் ஆவணங்கள் பற்றிய உண்மைத் தன்மை மர்மமாகவே இருப்பது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்தினரால் ஏமாற்றப்பட்டனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புதன், 15 ஜூலை, 2009

'தினமணி' செய்தி எதிரொலி: ரூ. 120 கோடி நில விவகாரம்- கட்டட அனுமதி நிறுத்தம்

சென்னை கோயம்பேடு சந்திப்பில் "ஓசோன் குழுமத்தின்' அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதியை நிறுத்தி வைத்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த அனுமதியை அளித்த செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.


கோயம்பேடு சந்திப்பில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான, "ரூ. 120 கோடி கோயில் நிலம் அபகரிப்பு?' என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை "தினமணியில்' செய்தி வெளியானது.


இதன் எதிரொலியாக மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட விளக்க அறிக்கை:


ஓசோன் நிறுவனம் வரைபட அனுமதிக்காக விண்ணப்பித்த 42.53 ஏக்கர் நிலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக கருதப்படும் 1.77 ஏக்கர் நிலத்தின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இடைகால உத்தரவில் "தற்போது உள்ள நிலை தொடர' என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையடுத்து மேற்படி நிலத்தைத் தவிர்த்து மீதமுள்ள நிலத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆய்வு செய்து வரைபட அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டல செயற்பொறியாளரால் கட்டட அனுமதி வழங்கப்பட்டது.


வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி சாலை வசதிக்காக எடுக்கப்பட்ட நிலத்தினை மாநகராட்சி வசம் ஒப்படைப்பு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பான தீர்மானம் எதுவும் மண்டல வார்டுக்குழு கூட்டத்திலோ அல்லது மாநகராட்சி மன்றத்திலோ ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படவில்லை.


எனவே, சாலை வசதிக்கான நிலத்தினை ஒப்படைப்பு செய்வது தொடர்பாக மாநகராட்சி மன்றத்தில் அனுமதி பெறும் வரை 5-வது மண்டல செயற்பொறியாளரால் வழங்கப்பட்ட கட்டட அனுமதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


மேலும், இது தொடர்பாக எவ்வித ஆலோசனையும் பெறாமல் முடிவு மேற்கொண்டதற்காக 5-வது மண்டல செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மேயர் மா. சுப்பிரமணியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


சைதை ரவி மறுப்பு:

""கட்டட அனுமதி வழங்குவதற்கான தீர்மானம் எதுவும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் விவாதத்துக்கு வரவில்லை. விவாதத்துக்கே வராத தீர்மானம் குறித்து நான் எப்படி கருத்து சொல்ல முடியும்?'' என இது தொடர்பான தனது மறுப்பு அறிக்கையில் மாநகராட்சி மாமன்ற எதிர்கட்சித் தலைவர் சைதை பி. ரவி (காங்கிரஸ்) பதில் அளித்துள்ளார்.


கடந்த ஆட்சியில் இதே பிரச்னைக்காக ஆளுநரிடம் மனு கொடுத்தவர் மாமன்ற எதிர்கட்சித் தலைவர் சைதை ரவி என்பது குறிப்பிடத்தக்கது.


ஆட்சேபிக்காதது ஏன்?

மன்றக் கூட்டத்தில் தீர்மானம் வரவில்லை என்பதற்காக மாநகராட்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் சர்ச்சைக்குரிய நிலத்தில் ரூ. 2,500 கோடி மதிப்பிலான கட்டுமானத் திட்டம் மேற்கொள்ள கட்டட அனுமதி வழங்கப்பட்டது குறித்து தனது ஆட்சேபத்தை அண்மையில் நடைபெற்ற கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சைதை ரவி தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.


சர்ச்சைக்குரிய இந்த கட்டட அனுமதி வழங்கப்பட்டது குறித்து, 5-வது மண்டல தலைவரான, காங்கிரûஸச் சேர்ந்த சுரேஷுக்கு தெரிந்த விவரம் அதே காங்கிரûஸச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாமல் போனது எப்படி? எதிர்க்கட்சித் தலைவராக தனது பொறுப்பை சைதை ரவி தட்டிக்கழிப்பதாக இது ஆகாதா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.


"ஓசோன் குழுமத்தின்' கட்டுமானத் திட்டம் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கும் நிலத்தை விற்ற ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறித்து நாளிதழ்களில் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

கடந்த 2-ம் தேதி கூட இந்த வழக்குகள் தொடர்பான வழக்கறிஞரின் அறிவிப்பு தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.

பலிகடா?

ஏற்கெனவே மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டு ஆளுநர், முதல்வர் தலையீடு வரை சென்ற விவகாரத்தில் மேயர், ஆணையர் உள்ளிட்டோருக்குத் தெரியாமல் மண்டல செயற்பொறியாளர் ஒருவர் தன்னிச்சையாக கட்டட அனுமதி வழங்குவது சாத்தியமில்லை என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.


இந்த விவகாரத்தில் பலன் அடைந்த முக்கிய நபர் ஒருவரைக் காப்பாற்றவே செயற்பொறியாளர் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார் என கூறப்படுகிறது.


கோயில் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை முயற்சித்து வரும் நிலையில் சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளித்துவிட்டதை காட்டி, ஓசையின்றி மாநகராட்சியால் கட்டட அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்த உரிய விசாரணை நடைபெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் மாநகர மேயர் ஈடுபட்டிருப்பதும், மேயர் மற்றும் ஆணையர் தலையீடு மட்டுமின்றி அதிகார மையத்தின் நெருக்கடியும் இந்த அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

ரூ. 120 கோடி கோயில் நிலம் அபகரிப்பு?

சென்னை கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலத்தைத் தனியார் நிறுவனம் ஒன்று அபகரிக்க முயற்சிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த நிலத்தை மீட்கக் குரல் கொடுத்த திமுக, காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவோடு இப்போது நில அபகரிப்பு நடைபெற்றுள்ளது என்பதுதான் இந்த குற்றச்சாட்டில் வேடிக்கை.

கோயம்பேடு திருமங்கலம் பகுதியில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான (சர்வே எண்கள்: 227/2, 227/3, 230/2) 3.03 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகில் உள்ள நிலங்களை "ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினர்.

2003-ம் ஆண்டு தங்களுக்குச் சொந்தமான நிலங்களுடன், திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தையும் ஆக்கிரமித்து புதிய மனைப்பிரிவு உருவாக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள "ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தினர் முயற்சித்தனராம்.

இதற்கு அனுமதி கோரும் தீர்மானம் 29-1-2003-ல் நடைபெற்ற மாநகராட்சிமன்றக் கூட்டத்தில் வைக்கப்பட்டது.

காங்கிரஸ், திமுக எதிர்ப்பு:

கோயில் நிலத்தைத் தனியார் நிறுவனத்தினர் கைப்பற்ற அனுமதிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் அமைந்திருப்பதாகக் கூறி அப்போது கவுன்சிலராக இருந்த ராயபுரம் மனோ தலைமையில் சைதை ரவி உள்ளிட்ட காங்கிரஸôரும், சி.வி. மலையன் தலைமையில் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட தி.மு.க.வினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்திய காங்கிரஸôர் தங்கள் கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் தலைமையில் ஆளுநரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுவும் அளித்தனர்.

வருவாய் அதிகாரி ஆட்சேபம்:

கோயில் நிலத்தைக் கைப்பற்ற முயற்சி நடப்பது குறித்து சந்தேகப்பட்ட அப்போதைய மாநகராட்சி வருவாய் அதிகாரி ஜெயகாந்தன், கட்டட அனுமதி வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறையினரும் கட்டட அனுமதி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

""திருமங்கலீஸ்வரர் கோயிலை இடித்து, கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைத் தவறான ஆவணங்கள் மற்றும் தக்க அனுமதியற்ற வகையில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் மூலம் "ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனம் அபகரிக்க முயற்சிக்கிறது; எனவே, இதற்கு எவ்விதக் கட்டட அனுமதியும் அளிக்க வேண்டாம்'' என அன்றைய மாநகராட்சி ஆணையர் எம். கலைவாணன் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு அப்போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த கெüரிசங்கர் கடிதம் எழுதினார்.

இதன் பின்னர் திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தை மீட்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டது. இந்த நிலையில், மாநகராட்சி எதிர்க்கட்சியினரின் போராட்டங்களையடுத்து அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலையிட்டதால் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்தின் மனுவை மாநகராட்சி நிராகரித்தது.

சில ஆண்டுகள் கழித்து "ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தினர் தங்கள் நிலத்துடன் திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தையும் சேர்த்து புதிய அடுக்குமாடி குடியிருப்பை உருவாக்க "ஓசோன் குழுமத்துக்கு' விற்பனை செய்தனர்.

இந்த விற்பனையில் "ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கும், இந்த நிலங்களின் பட்டா தொடர்பான உண்மைத் தன்மை குறித்த வழக்கும் இன்னும் தீர்க்கப்படாமல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இது ஒருபுறம் இருந்தபோதும், நிலத்தை வாங்கிய "ஓசோன் குழுமம்', அங்கு மிகப்பெரிய அளவில் குடியிருப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.

இந்த நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் திட்ட அனுமதி வழங்க முதலில் மறுத்தனர். தங்கள் நிலத்தின் பட்டா தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஒன்றைக் காட்டி ஓசோன் குழுமம் திட்ட அனுமதி கோரி சி.எம்.டி.ஏ.விடம் விண்ணப்பித்தது.

ஓசோன் குழுமம் குடியிருப்பு மேற்கொள்ள உள்ள 42 ஏக்கரில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3.03 ஏக்கர் நிலம் அடங்கியுள்ளதாகக் கூறி, இதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சி.எம்.டி.ஏ.வுக்கு மீண்டும் கடிதம் அனுப்பினர்.

இருப்பினும், கோயில் நிலம் என கூறப்படும் நிலத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில், கோயில் நிலம் நீங்கலாக மற்ற நிலங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு திட்ட அனுமதி கோரி ஓசோன் குழுமம் சி.எம்.டி.ஏ.விடம் விண்ணப்பித்தது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அளித்த கருத்தை ஓசோன் குழுமத்தினர் தங்களுக்குச் சாதகமாக காட்டியதையடுத்து, நிபந்தனைகள் அடிப்படையில் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஓசோன் நிறுவனத்துக்கு கட்டுமானப் பணிக்கான அனுமதி வழங்குவதற்கான தீர்மானத்துக்கு அண்மையில் நடைபெற்ற மாநகராட்சியின் மன்றக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஏன் இந்த முரண்பாடு? உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு நிர்பந்திக்காத நிலையில், மறுப்பதற்கான அதிகாரம் தங்களிடம் இருந்தும் சென்னை மாநகராட்சியும், சி.எம்.டி.ஏ.வும் ஓசோன் குழுமத்தின் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை இந்தத் திட்டத்தை ஏன் மாநகராட்சியும், சி.எம்.டி.ஏ.வும் நிறுத்தி வைக்கவில்லை என்பது தான் பலருடைய கேள்வி.

அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்னையில் 2003-ல் கோயில் நிலம் தனியாரால் அபகரிக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்து எதிர்த்த மா. சுப்பிரமணியன் இப்போது மேயராக இருக்கும் நிலையில், திடீர் மனமாற்றம் ஏன் வந்தது என கேள்வி எழுப்புகின்றனர் அறநிலையத்துறையினர்.

காங்கிரஸ், திமுக ஆதரவு...: 2003-ல் திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுத்த காங்கிரஸ், திமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதுதான் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தைச் சுற்றியுள்ள நிலங்களில் கட்டுமான திட்டத்துக்கு இப்போது அளிக்கப்பட்டுள்ள அனுமதி கோயில் நிலத்தை மீட்கும் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை வேரறுக்கும் செயல் என்பதை திமுக சார்பில் மேயராக உள்ள மா. சுப்பிரமணியனும், காங்கிரஸ் சார்பில் எதிர்கட்சித் தலைவராக உள்ள சைதை ரவியும் உணராதது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ள இந்த மன (?) மாற்றத்தால் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலம் தனியார் சிலரால் அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான கட்சிகளின் மாற்றத்தின் பின்னணி குறித்தும் பொது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

திங்கள், 13 ஜூலை, 2009

சிறப்புப் போலீஸôரின் பயிற்சியில் "மாற்றம்' வருமா?

மிழக காவல் துறையில் உள்ள சிறப்பு காவல்படையினருக்கான (டி.எஸ்.பி.) பயிற்சித் திட்டத்தை மாற்றி அமைப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுடன் நடைபெற்ற மோதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின்போது இவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் இத்தகைய கருத்து வலுபெற்று வருகிறது.


அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடும் இந்தியர்களை ஒடுக்கும் வகையில் தங்கள் உத்தரவை கண்மூடித்தனமாக ஏற்று செயல்படும் விதமாக காவல்படையினருக்கான பயிற்சிகள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டன.


எதிரில் இருப்பவர் யார் என்பதைப் பற்றி துளியும் சிந்திக்காமல் தலைமையின் உத்தரவுப்படி தடியடி நடத்தியோ அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தியோ நிலைமையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் இந்தப் பயிற்சிகள் அமைந்திருந்தன.


நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் காவல் துறையில் அவ்வப்போது ஏற்படும் தேவை அடிப்படையில், பல்வேறு சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. மேலும், சட்டம்- ஒழுங்கு, குற்றப் பிரிவு உள்ளிட்ட பிரிவில் பணி புரியும் காவலர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் நவீன சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டன.


ஆனால், சிறப்பு காவல்படையினருக்கான பயிற்சித் திட்டத்தில் காலத்தின் தேவைக்கு ஏற்ப பெரிய அளவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என மூத்த அதிகாரிகள் சிலரே கருத்து தெரிவித்துள்ளனர்.


தற்போது தமிழக காவல் துறையில் சுமார் 15 ஆயிரம் பேர் ஆயுதப் படையின் சிறப்பு காவல் படை (டி.எஸ்.பி.) போலீஸôராக உள்ளனர். இவர்களுக்கு ஆவடி, வேலூர், மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள முகாம்களில் 9 மாதங்கள் கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.


தலைமையின் உத்தரவை அப்படியே நிறைவேற்றும் வகையில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போதுதான் கட்டுப்பாடு இருக்கும் என இதற்கு காரணம் கூறப்படுகிறது.


பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் கோயில் திருவிழாக்கள், கட்சிகளின் பேரணி, மாநாடு, முக்கிய தலைவர்கள் வருகை உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பாதுகாப்புப் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


பாதுகாப்புப் பணி நீங்கலாக இவர்களில் பெரும்பாலானோர் ஆயுதப் படை மற்றும் அவசரகால அதிரடிப் படை என பிரிக்கப்பட்டு வன்முறை நிகழும் பகுதிகளில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


தேர்தல் உள்ளிட்ட சில சமயங்களில் ஆட்சியாளர்களின் பாராட்டைப் பெற்றாலும், வழக்கறிஞர்- போலீஸ் மோதல் உள்ளிட்ட பல சமயங்களில் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகும் வகையிலும் அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாகவே இவர்களது செயல்பாடு அமைந்துள்ளது.


இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியே இதற்கு அடிப்படை காரணம் என பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஓர் இடத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அங்கு வன்முறை வெடிக்க காரணமாக இருக்கின்றனர். இது போன்ற சமயங்களில் சிறப்புப் போலீஸôர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தும்போது, வன்முறையில் ஈடுபடாத மற்றவர்கள் போலீஸôர் மீது எதிர்த் தாக்குதல் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.


இதன் காரணமாக பிரச்னைக்கு காரணமான நபர்கள் தப்பித்துவிடுவதுடன், அப்பாவி பொது மக்களுக்கும், போலீஸôருக்கும் இடையில் மோதல் உருவாகும் சூழல் ஏற்படுகிறது.

இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதையாகாமல் தடுக்க சிறப்பு காவல்படை போலீஸôருக்கு அளிக்கப்படும் கடுமையான பயிற்சிகளை நவீன கால சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

சனி, 11 ஜூலை, 2009

சென்னை விமான நிலைய விரிவாக்க விவகாரம்: இணை ஓடுதளம் அமைக்கும் திட்டம் ரத்தாகிறதா?

சென்னை, ஜூலை 9: சென்னை விமான நிலையத்தில் இணை ஓடுதளம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


சென்னை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் திட்டம் தொடர்பாக 2007 மே 22-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இதற்கு 1069.99 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.


விமான நிலையத்தை சுற்றியுள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து இதற்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன.


விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்கப்படுவதால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக கோவூர் பகுதியில் நிலங்களை கையகப்படுத்தவும் அரசு முடிவு செய்தது.


அரசாணை வெளியீடு:

இது தொடர்பாக கையகப்படுத்த தேர்வு செய்யப்பட்ட நிலங்களின் சர்வே எண்கள் உள்ளிட்ட விவரங்களுடன் அரசாணையை (எண்: 108) போக்குவரத்துத் துறை 2007 செப்டம்பர் 22-ம் தேதி வெளியிட்டது.


இதையடுத்து முதல் கட்டமாக மணப்பாக்கத்தில் அடையாற்றை ஒட்டியுள்ள 126 ஏக்கர் நிலம் கடந்த ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் விமான நிலையத்தில் கிழக்கு - மேற்காக உள்ள 2-வது ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் சில மாதங்கள் முன்னர் தொடங்கப்பட்டன.
பெரும்பாலான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.


மக்கள் எதிர்ப்பு:

இந்நிலையில், புதிய ஓடுதளம் அமைக்க தங்கள் நிலங்களை கையகப்படுத்த மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், கோவூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.


இது தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கும் (ஐ.ஏ.ஏ.ஐ.) இப் பகுதி மக்கள் பல்வேறு மனுக்களை அனுப்பி முறையிட்டனர்.


ஆர்வம் இல்லை: மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு வழங்கும் நிலத்தில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியகூறுகள் குறித்த எவ்வித ஆய்வுப் பணிகளும் தொடங்கப்படவில்லை என ஐ.ஏ.ஏ.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும், இங்கு விரிவாக்கப் பணிகளுக்கு அதிக நிதியை முதலீடு செய்வதைவிட ஸ்ரீபெரும்பூதூரில் தனியார் முதலீட்டில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை அளிப்பது தற்போதைய சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் கருதுவதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தமிழக அரசின் நிலை:

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் 2009-2010 நிதி ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், 126 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகள் குறித்தும், ஸ்ரீபெரும்பூதூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இணை ஓடுதளம் பற்றி குறிப்பிடப்படவில்லை.

இணை ஓடுதளம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஐ.ஏ.ஏ.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து தங்கள் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை (எண்: 108) ரத்து செய்ய வேண்டும் என மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளி, 3 ஜூலை, 2009

சிறப்பு ஊதியம் நிர்ணயிப்பதில் குழப்பம்: லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôர் அதிருப்தி

சென்னை, ஜூலை 2: 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட பிறகும் தங்களுக்கு பழைய ஊதியத்தின் அடிப்படையிலேயே சிறப்பு ஊதியம் கணக்கிடப்படுவதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôர் புகார் தெரிவித்தனர்.


தமிழகத்தில் காவல் பயிற்சி மையத்தில் பணிபுரியும் போலீஸôருக்கு அவர்களது அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதமும், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் போலீஸôருக்கு 20 சதவீதமும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.


இதேபோன்று தங்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôர் நீண்டகாலமாக கோரி வந்தனர். இந்த நிலையில், 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநராக இருந்த திலகவதி பரிந்துரையின் அடிப்படையில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இதற்கு ஒப்புதல் அளித்தார்.


இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôருக்கு அடிப்படை ஊதியத்தில் 15 சதவீதத்தை சிறப்பு ஊதியமாக வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநரகத்தில் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நீங்கலாக, மற்ற அனைவருக்கும் இந்த சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.


அடிப்படை ஊதியம் உயரும் போது...: அடிப்படை ஊதியத்தில் மாற்றம் வரும்போது 15 சதவீத சிறப்பு ஊதியத்திலும் மாற்றம் இருக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது.


இது குறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநரகம் சார்பில் கருவூலம் மற்றும் கணக்குத் துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அடிப்படை ஊதியத்தில் மாற்றம் ஏற்படும்போது சிறப்பு ஊதியத்திலும் மாற்றம் இருக்கும் என கருவூலம் மற்றும் கணக்குத் துறை விளக்கம் அளித்தது.


மீண்டும் குழப்பம்:

இந்த நிலையில் 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி ஜூன் 1-ம் தேதி முதல் அமலாக்க அரசு உத்தரவிட்டது.


இதற்கான அரசாணையில், "உயர்த்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் இப்போதுள்ள அளவிலேயே சிறப்பு ஊதியம் கணக்கிடப்படுவது தொடரும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வாறு ஊதிய உயர்வு வரும்போது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôருக்கு பழைய ஊதியத்தின் அடிப்படையிலேயே சிறப்பு ஊதியம் கணக்கிடப்படும் என நிர்வாகப் பிரிவு தெரிவித்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.


இது குறித்து போலீஸôர் அப் பிரிவு இயக்குநர் ஏ.டி.ஜி.பி. ராமானுஜத்திடம் முறையிட்டனர்.


"அரசின் கொள்கை முடிவு தொடர்பான இந்த விவகாரத்தில் தலையிட முடியாது' என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


அதிருப்தி:

சிறப்பு ஊதியம் கணக்கிடுவதில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக லஞ்ச ஒழிப்புப் பிரிவில் நிர்வாகப் பிரிவினரின் செயல்பாடுகள் குறித்து, இதரப் பிரிவு போலீஸôரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதனால், அடிப்படை ஊதியம் உயர்ந்த பிறகும் பழைய ஊதியத்தின் அடிப்படையிலேயே சிறப்பு ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் தெரிவித்தனர்.