ஞாயிறு, 20 மே, 2012

சிங்கப்பூர், ஹாங்காங் மாதிரியில் சென்னையில் போக்குவரத்து திட்டங்கள்: சி.யு.எம்.டி.ஏ., முடிவு

சிங்கப்பூர், ஹாங்காங் நரகங்களில் உள்ளது போன்ற போக்குவரத்து வசதிகளை, சென்னையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக போக்குவரத்து அதிகாரிகளை, இந்நகரங்களுக்கு அனுப்ப, சி.யு.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.  
வரைவு விதிமுறை:
சென்னையில், போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைப்பதுடன், ஒரே பயணச் சீட்டில், அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்க, ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் (சி.யு.எம்.டி.ஏ.,) ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கான வரைவு விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில், இனி வருங்காலங்களில் நிறைவேற்றப்பட உள்ள போக்குவரத்து தொடர்பான திட்டங்களை, நெறிப்படுத்தும் அதிகாரம் சி.யு.எம்.டி.ஏ.,வுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில், போக்குவரத்து தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும்போது, அதில் எத்தகைய வசதிகள் இடம்பெற வேண்டும்; எத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை வேண்டும் போன்றவற்றை உள்ளடக்கியதாக, இப்புதிய வரைவு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 
லண்டன் மாதிரி:
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழும சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்லாது, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில், இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இவன்றின் அடிப்படையில், சென்னைக்கான போக்குவரத்து ஒருங்கிணைப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 
வெளிநாடு பயணம்:
இது தொடர்பாக, சி.யு.எம்.டி.ஏ., உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், சென்னையில், போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகள் குழுவை, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்குக்கு அனுப்பி, அங்கு நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்தும், அவை நிறைவேற்றப்பட்ட விதங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். அந்தந்த துறை தலைமை அதிகாரிகள் மூலம், இதற்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசின் அனுமதி பெறப்பட்ட பின், இக்குழுவின் வெளிநாட்டு பயணம் இறுதி செய்யப்படும். அடுத்த சில மாதங்களுக்குள், இதற்கான நிர்வாக நடவடிக்கைகள் முடிக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

சனி, 19 மே, 2012

ஆவணங்களை இருட்டடிப்பு செய்ய சி.எம்.டி.ஏ., முயற்சி!

தகவல் அறியும் உரிமை சட்டப்படி, அடிப்படை தகவல்கள் அடங்கிய கையேட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளை, பொது மக்கள் பயன்படுத்த முடியாதபடி, சி.எம்.டி.ஏ., தடை செய்துள்ளது. இதனால், வெளிப்படையான நிர்வாகம் என்பது, இத்துறையில் கேள்விக்குறியாகி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டப்படி, ஒவ்வொரு அரசுத் துறையிலும், அத்துறையின் அடிப்படை பணிகள், அதற்கான நிர்வாக நடைமுறைகள், பொது மக்கள் அணுக வேண்டிய அதிகாரிகள் குறித்த விவரங்கள், பொது தகவல் அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 4(1)ஏ பிரிவின்படி, இத்தகைய விவர கையேட்டை வெளியிடுவது, கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த கையேட்டின் அனைத்து பிரிவுகளும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆவணமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது.
 சி.எம்.டி.ஏ.,வில்... :
 இத்தகைய கையேடுகளை, ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும் என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகதத்தில் உள்ள பெரும்பாலான அரசுத் துறைகள், இத்தகைய கையேடுகளை முறையாக வெளியிடுவதில்லை என, பரவலாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதில், சி.எம்.டி.ஏ., நிர்வாகம், தகவல் அறியும் உரிமை சட்ட கையேட்டை, அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒன்று முதல், 18 பிரிவுகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய ஆவணம், பொது மக்களின்பயன்பாட்டுக்கான ஆவணமாகும்.
ஆனால், இதில், 10, 11 ஆகிய பிரிவுகளை மட்டும், பொது மக்கள் பார்க்க முடியாத வகையில், சி.எம்.டி.ஏ., நிர்வாகம் தடை செய்து வைத்துள்ளது.
ஆர்வலர்கள் அதிர்ச்சி :
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, மாநில தகவல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சி.எம்.டி.ஏ.,வின் இச்செயல்பாடு, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளிப்படை தன்மையை முடக்கும் வகையில், இச்செயல் அமைந்துள்ளது. இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மீது, தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எதில் ஆர்வம்? :
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தற்போது, கலெக்டர் அலுவலக சம்பந்தப்பட்ட புகார்களை அறிய, மக்கள் அதிகளவில்ஆர்வம் காட்டுகின்றனர். மற்ற இலாகாக்கள், அதன் நடைமுறைகள், அதை நிர்வகிக்கும் வழிமுறைகள் குறித்து மக்களுக்கு அதிக அனுபவம் இல்லாததால், அதில் ஆர்வம் காட்டுவதில்லை.ஆனால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைப்பில் உள்ள அதிகார மையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதைப்பற்றிய விவரங்கள், அவர்கள் பணிப்பொறுப்புகள், அவர்கள் செயல்படும் நிர்வாகத் தலைமை குறித்த விவரங்களை மறைக்கும் விதத்தில் செயல்படுவது, எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதே, இப்போதைய கேள்வி.