ஞாயிறு, 17 ஜூன், 2012

ஊழல் வழக்குகளை பதிவு செய்ய நிபந்தனைகள்

ஊழல் வழக்குகளில் பூர்வாங்க விசாரணையில், முழு விவரங்கள் தெரியவந்தாலும், விரிவான விசாரணைக்கு பிறகே, வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் எளிதில் தப்பிவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை உருவாக்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகளை கொண்டிருந்தாலும், இப்பிரிவானது பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஊழல் புகார்கள் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்துவதற்கான அளவுகோல் குறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் இருந்து, கடந்த மாதம் 22ம் தேதி அனைத்துத் துறை செயலர்கள், துறை தலைமை அதிகாரிகள், தலைமை செயலக அனைத்துத் துறை தலைமை அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடிதத்தின் விவரம்
ஊழல் புகார்கள் தொடர்பாக, பூர்வாங்க மற்றும் விரிவான விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் உத்தரவிடுவது தொடர்பாக, இதுவரை எந்த அளவுகோலும் இல்லை. இதை கருத்தில் கொண்டு, இத்தகைய விசாரணைகளை எப்படி மேற்கொள்வது என்பதற்கான அளவுகோல்கள் பின்வருமாறு நிர்ணயிக்கப்படுகின்றன.இதில் பூர்வாங்க விசாரணையை எப்படி மேற்கொள்வது என்பது தொடர்பாக, ஐந்து அடிப்படை விதிமுறைகளும், விரிவான விசாரணை தொடர்பாக, ஆறு விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.இதன்படி, ஒரு நேர்மையான அதிகாரி மீது யாராவது ஊழல் புகார் தெரிவித்தால், அது தொடர்பாக அந்த அதிகாரியின் நற்பெயருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அவரது நடத்தை குறித்து, கடிதம் உள்ளிட்ட எந்த ஆவணத்திலும் அவரது பெயரை குறிப்பிடாமல் ரகசியமாக விசாரிக்க வேண்டும். அந்த அதிகாரியின் அந்தஸ்து மற்றும் புகாரில், அவரது பங்கு ஆகியவற்றை விசாரணையின் போது கருத்தில் கொள்ள வேண்டும்.அடுத்தகட்டமாக, பூர்வாங்க விசாரணைக்கு முந்தைய நிலையில், புகார் கூறப்பட்ட அதிகாரியின் செயல்பாடுகள் குறித்து தலைமை அதிகாரியின் விருப்பத்தின் அடிப்படையில் மிக ரகசிய விசாரணை நடத்தலாம்.
விரிவான விசாரணை
ஒரு குறிப்பிட்ட அதிகாரி மீது வந்த புகாரின் அடிப்படையில் பூர்வாங்க விசாரணையின் போது, அந்த வழக்கை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைத்தாலும், விரிவான விசாரணை நடத்திய பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.சொத்து குவிப்பு தொடர்பான புகார்கள் தொடர்பான பூர்வாங்க விசாரணையில், அந்த நபர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்தது உறுதியானாலும், விரிவான விசாரணை நடத்தி தான் உரிய ஆவணங்களை திரட்ட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்பு என்ன?
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பூர்வாங்க விசாரணையில் முக்கிய தடயங்கள் சிக்கும் நிலையில், அவற்றை வைத்து வழக்கு பதிவு செய்து, அந்த நபரின் வீட்டை சோதனையிட்டால் வழக்குக்குத் தேவையான பெருமளவு ஆவணங்களை கைபற்றலாம்.ஆனால், இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, பூர்வாங்க விசாரணையில் முக்கிய தடயங்கள் குறித்து தெரியவந்தால், வழக்கு பதிவு செய்து அவற்றை கைபற்றாமல், விரிவான விசாரணை நடத்தப்பட்டால் ஏற்படும் காலதாமதம் தடயங்களை மறைக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு உதவும். இதனால், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், தடயங்களையும் கைபற்றுவதற்கான வாய்ப்புகள் பறிபோகும். இதனால், ஊழல் புகார்கள் நிரூபிக்க முடியாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க நிறைய வாய்ப்புண்டு.ஏற்கெனவே, லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணை நடைமுறைகள் தொடர்பான வழிக்காட்டி கையேடு உள்ளது. இதன்படியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் புதிய அளவுகோலுக்கான தேவை என்ன என்பது புரியவில்லை.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

வியாழன், 7 ஜூன், 2012

சென்னை, மதுரை, கோவையில் நகர்ப்புற கட்டமைப்பு வசதிகள் மேம்படுமா?

நகர்ப்புறப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, விவசாய நிலங்களை குடியிருப்பாக மாற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்த தமிழக அரசு, மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளது. இதனால், வீட்டு வசதி. நகர்ப்புற அமைப்புகளில் முன்னேற்றம் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் நகர்ப்புறப் பகுதிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,), செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதில், தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
நிபந்தனைகள்:மத்திய அரசின் நிதி உதவியுடனான இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும், அதிக நிதி உதவி பெறவும், நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகம், நில நிர்வாகம், பத்திரப்பதிவு போன்ற துறைகளின் பணிகள் தொடர்பாக, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளன.இந்த நிபந்தனைகளை, அந்தந்த மாநில அரசுகள் நிறைவேற்றுவதன் அடிப்படையிலேயே, புதிய திட்டங்களுக்கான அனுமதியும், நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிபந்தனைகளை நிறைவேற்ற தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், முனைப்பாக செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் நில பரிவர்த்தனையில் பத்திரப்பதிவுக்கான முத்திரைத்தீர்வை, இந்த நிதி ஆண்டு முதல், 1 சதவீதம் குறைக்கப் பட்டு உள்ளது.இதன் அடுத்தகட்டமாக, நகர்ப்புற
 பகுதிகளில், விவசாய நிலங்களை பிற பயன்பாடுகளுக்கு மாற்றுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப் பட்டது. நாடு முழுவதும், 52 நகரங்களில் இந்த நிபந்தனையை நிறைவேற்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநில அரசு ஒப்புதல்:இது தொடர்பாக, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., அண்மையில் வெளியிட்ட திட்டங்களின் நடவடிக்கை அறிக்கையில், ""சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட, 52 நகரங்களில் விவசாய நிலங்களை குடியிருப்பு உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு மாற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த, அந்தந்த மாநில அரசுகள் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளன. இதற்கான நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என குறிப்பிடப் பட்டு உள்ளது.அதே சமயம் தற்போது,மத்திய அரசு சந்தித்து வரும் மொத்த வளர்ச்சிப் பின்னடைவில், முழுவீச்சில் இம்மாதிரித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமா என்பது இனித் தெரியும்.
பாதிப்பு என்ன?நகர்ப்புற வளர்ச்சி காரணமாக, விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் நடவடிக்கைகளை, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தீவிரப்படுத்தி உள்ளன. இதனால், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு குடியிருப்பு வசதி கிடைக்கும் என, எடுத்துக் கொண்டாலும், இது நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தியை பாதிக்கும்.எனவே, விவசாய நிலங்களை குடியிருப்புகளாக மாற்றுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
விலை குறையுமா?இதுகுறித்து, பல்வேறு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது:விவசாய நிலங்களை குடியிருப்பு பயன்பாட்டுக்கு மாற்றும் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரி வருகிறோம். இதன் மூலம், புறநகர்ப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மனைகள் விற்பனைக்கு வரும். இதனால், வீட்டுமனைகளின் விலை உயர்வு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆனாலும் இன்றைய கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைவால், எந்த அளவுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சிறக்கும்என தெரியவில்லை. அதேபோல, அன்னிய நேரடி மூலதன முதலீடு குறைந்த நிலையில், இத்துறைக்கு தேவைப்படும் மூலதனம் எங்கிருந்து வரும் என்பதும், இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சென்னையில் விவசாய நிலம் எவ்வளவு?
சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின், இரண்டாவது மாஸ்டர் பிளான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், 1973ம் ஆண்டு நிலவரப்படி, 73,689 ஹெக்டேர் நிலங்கள் விவசாய நிலங்களாக இருந்தன. 1977ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு வரை, விவசாய நிலங்களை, பிற பயன்பாட்டுகளுக்கு மாற்றுவது தொடர்பாக, 725 திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்கியது. இதனால், இப்போதைய நிலையில், 7,295 ஹெக்டேர் நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளன. நிலபயன்பாடு வழிமுறைகள் எளிமைப்படுத்தப் பட்டால், இந்த நிலங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கைக்கு மாறிவிடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

திங்கள், 4 ஜூன், 2012

ஒரு மனைக்கு ரூ.6.40 லட்சம் வசூலிக்க திட்டம்: கீழ்கட்டளை நிலப்பிரச்னைக்கு புதிய தீர்வு

கீழ்கட்டளை பகுதியில் கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்களை, ஒரு மனைக்கு, 6.40 லட்ச ரூபாய் வீதம் வசூலித்து வரன்முறைப்படுத்த, வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்கட்டளையில் வீட்டு வசதி வாரிய திட்டத்துக்காக, 1990ம் ஆண்டு, 56.57 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து, நில உரிமையாளர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால தடை பெற்றனர்.

இழப்பீடு நிர்ணயம்இருப்பினும், இந்நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து, வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக 53 லட்ச ரூபாயை பூந்தமல்லி கோர்ட்டில் அதிகாரிகள் செலுத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில், 1999ம் ஆண்டு, ஐகோர்ட்டின் வெவ்வேறு
நீதிபதிகள் தனித்தனியாக வழங்கிய தீர்ப்புகளில், வீட்டு வசதி வாரிய அறிவிப்பு
செல்லாது என அறிவித்தனர்.


இதன் பிறகும், கீழ்கட்டளை மக்களுக்கும், வீட்டு வசதி வாரியத்துக்கும் இடையிலான சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.

வாரியம் நடவடிக்கைஇது தொடர்பாக வீட்டு வசதி வாரியம், 2006ல் தாக்கல் செய்த ஒரு மேல்முறையீட்டு வழக்கில் தங்களுக்கு கிடைத்த சாதகமான தீர்ப்பை அடுத்து, மற்ற வழக்குகளுக்கும் இதை உறுதி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்காக, 1993ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு, 2011ம் ஆண்டு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

'தினமலர்' செய்தி எதிரொலி
வாரியத்தின் இந்நடவடிக்கையால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இது தொடர்பான விரிவான செய்தியை, ஆகஸ்ட் 3ம் தேதி, "தினமலர்' வெளியிட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளை வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், தன்சிங் எம்.எல்.ஏ., ஆகியோர், வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுடன் சென்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வு செய்தனர்.


புதிய முடிவுஇந்த ஆய்வில் தெரிய வந்த விவரங்கள் அடிப்படையில் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் புதிய முடிவை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வீட்டு வசதி வாரிய கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம்:
கீழ்கட்டளையில் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்ட, 56.57 ஏக்கர் நிலம் தொடர்பான விவகாரத்தில், இனம் 3ல் வரும் நிலங்களுக்கு செலவு செய்யப்பட்ட தீர்வு தொகைக்கு கூட்டு வட்டியின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட, 3.20 லட்சத்தை இரண்டு மடங்காக அதாவது மனை ஒன்றுக்கு, 6.40 லட்ச ரூபாயை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலித்து ஆக்கிரமிப்புகளை வரைமுறை செய்ய, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி ஒப்புதல் பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பான கோப்புகள், வீட்டு வசதி மற்றும் நகர் ஊரமைப்புத் துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தி.நகர் கடைகளுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைக்குமா?

விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால், சீல் வைக்கப்பட்ட தி. நகர் கடைகளை திறந்திருப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பதா என்பது குறித்து, ஐகோர்ட் இன்று முடிவு செய்கிறது.
சென்னை தி. நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, 25 வணிக வளாகங்களுக்கு சி.எம்.டி.ஏ., மாநகராட்சி அதிகாரிகள் கடந்த அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து வியாபாரிகள் தொடுத்த வழக்கில், சீல் வைக்கப்பட்ட கடைகளை ஆறு வாரத்துக்கு திறக்க அனுமதித்து, கடந்த ஜனவரி 9ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதில் இறுதி முடிவை, சென்னை ஐகோர்ட் எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த, சென்னை ஐகோர்ட், சீல் வைக்கப்பட்ட கடைகள் திறந்திருப்பதற்கான கால அவகாசத்தை முதலில் எட்டு வாரங்களுக்கு நீட்டித்தது.
அரசு பதில் மனு
நீதிபதி மோகன் குழு பரிந்துரைகள் அமலாக்குவது குறித்து முடிவெடுக்க, மேலும் கால அவகாசம் வேண்டும் என கோரியதன் அடிப்படையில் இவ்வழக்கு, ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அது வரை, சீல் வைக்கப்பட்ட தி. நகர் கடைகள் திறந்திருப்பதற்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறைபடுத்தும் வகையில், நகரமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்து, 113 சி என்ற புதிய பிரிவை சேர்க்க இருப்பதாகவும்,
சட்டசபையின் அடுத்த கூட்டத் தொடரின் போதுதான் இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
அதற்காக இன்னும் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என குறிப் பிடப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்படுமா?
இதையடுத்து, இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசின் பதில் மனு அடிப்படையில், நீதிபதி மோகன் குழு பரிந்துரைகளை அமலாக்கும் வகையில், கூடுதல் கால அவகாசம் அளிப்பதா என்பது குறித்து கோர்ட் முடிவு செய்யும். அதுவரை, தி.நகர் கடைகள் திறத்திருக்க அனுமதிப்பதா என்பதும் அப்போதுதான் தெரியவரும்.
சி.எம்.டி.ஏ., நிலை என்ன?
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத, சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த வழக்கில் அரசு, தனது தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களின் மொத்த எண்ணிக்கை குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சி.எம்.டி.ஏ., பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், இதற்கான பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றும், 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், இப்போது வரை விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய பதில் மனுவை தாக்கல் செய்ய சி.எம்.டி.ஏ., தயாராகி வருகிறது.
இதனால், விதிமுறைகளை மீறி
கட்டப்பட்ட தி.நகர் கடைகள் நாளைமுதல் திறந்திருக்குமா என்பது, ஐகோர்ட்டின் இன்றைய முடிவை பொறுத்தே அமையும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கோயம்பேடு உணவு தானிய அங்காடி திட்ட செலவுக்கு ரூ.128 கோடி

கோயம்பேடில் உணவு தானிய அங்காடி அமைக்க அரசு அனுமதித்தும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆறு ஆண்டு தாமதித்ததால், திட்ட மதிப்பு இரு மடங்கிற்கு மேல் அதிகரித்து உள்ளது. இதனால், திட்டத்தில் உருவாக்கப்பட உள்ள கடைகளின் விலையும் உயர வா#ப்பு உள்ளது.
ஜார்ஜ் டவுன் பகுதியில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், பூ, காய், கனி, உணவு தானியம், ஜவுளி மற்றும் இரும்பு பொருட்கள் மொத்த விற்பனை அங்காடிகளை, அப்போது நகருக்கு வெளியில் இருந்த கோயம்பேடு பகுதிக்கு மாற்ற, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன், அர” முடிவு எடுத்தது. முதல் கட்டமாக, கோயம்பேடில், பூ, காய், கனி அங்காடிகள், 1996ல் இடமாற்றப் பட்டன.
கொள்கை, செயலில் "வேகம்'
இதை அடுத்து, மற்ற அங்காடிகளை மாற்றுவதில் கொள்கை அளவிலேயே மெத்தனம் ஏற்பட்டது. கோயம்பேடில், உணவு தானியம், ஜவுளி மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை அமைக்கும் திட்டம், கடந்த 2005ம் ஆண்டில் தான் இறுதி செய்யப்பட்டது.
15.60 ஏக்கரில், 61.85 கோடி ரூபா# மதிப்பில், 500 கடைகள் கொண்ட உணவு தானிய அங்காடிவளாகத்தை, சி.எம்.டி.ஏ., மூலம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப் பட்டது. அடுத்து, கடைகளை ஒதுக்க குலுக்கல் நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலையில், பணிகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.
கடந்த ஆண்டு, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், இந்த திட்டங்கள் மீண்டும் வேகமெடுத்தன. கோயம்பேடில் உணவு தானிய அங்காடி வளாகம் அமைக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப் படும் என, அண்மையில் தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது. இதையடுத்து, இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்யும் பணிகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் துவக்கினர்.

செலவு விர்ர்ர்...
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
திட்டத்துக்காக ஏற்கெனவே கையகப் படுத்தப் பட்ட நிலத்தின் ஒரு பகுதி, மெட்ரோ ரயில் திட்டத்துக்காக எடுத்துக்கொள்ளப் பட்டு விட்டதால், வேறு நிலம் கையகப் படுத்தப் பட்டு, பணிகளை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
ஏற்கெனவே இறுதி செய்யப்பட்ட திட்ட மதிப்பான, 61.85 கோடி ரூபாயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது. இதனால், 128.41 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பு மாற்றம்
இடமாற்றம், திட்ட மதிப்பு மாற்றம் காரணமாக அரசிடம் இருந்து புதிதாக நிர்வாக ஒப்புதல் வாங்க வேண்டும். செலவு அதிகரிப்பு காரணமாக, திட்டத்தை இரண்டு கட்டங்களாக நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
இவ்வாறு அதிகாரி கூறினார்.