வெள்ளி, 27 நவம்பர், 2009

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் மத்திய அமைச்சர்

  மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பிரபுஃல் படேல் மாத ஊதியமாக ஒரு ரூபாய்  மட்டும்  பெற்று வருகிறார்.   
 
மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களுக்கு ரூ. 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அடிப்படை ஊதியமும், தினசரி படியாக நாளொன்றுக்கு ரூ. 1000, தொகுதிப் படியாக மாதம்தோறும் ரூ. 20 ஆயிரமும் இதர படிகளாக மாதத்துக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. 
 
  இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான ஊதிய விவரங்கள் குறித்து பொள்ளாச்சியில் இயங்கிவரும் "தாயகம்' தன்னார்வ அமைப்பின் நா. பாஸ்கரன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில மாதங்கள் முன்னர் கேட்டிருந்தார். 
 
  இதற்கு நாடாளுமன்ற செயலகம் உள்பட பல்வேறு துறைகள் தனித்தனியாக பதில் அளித்துள்ளன.   உள்துறை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் பொது தகவல் அதிகாரி எஸ். கெüரிசங்கர் அளித்துள்ள பதில் விவரம்:  
 
இணை அமைச்சர் பிரபுஃல் படேல் தனிபட்ட முறையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டபடி அவருக்கான மாத ஊதிய ரூ. 501-ஆக கணக்கிடப்படுகிறது.   ஆனால், இதில் ரூ. 500 மத்திய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ திட்டத்தில் அவரது பங்களிப்பாக வரவு வைக்கப்பட்டு எஞ்சிய ரூ. 1 மட்டும் அவருக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. 
 
தினப்படியில் குழப்பம்: 
 
மத்திய அமைச்சர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் தினப் படியாக ரூ. 1000 அளிக்கப்படுகிறது. இது மாத ஊதியத்துடன் சேர்த்து மொத்தமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான அமைச்சர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 31 நாள்களுக்கான படியாக ரூ. 31,000 வழங்கப்பட்டுள்ளது. 
 
வழக்கமாக ஏப்ரல் மாதத்துக்கு 30 நாள்கள் மட்டுமே என்பதால் 31 நாள்களுக்கான தினபடி வழங்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது தொடர்பாக பொள்ளாச்சி நா. பாஸ்கரன் அந்தந்த அமைச்சகத்தின் மேல் முறையீட்டு அதிகாரிகளுக்கு தனித்தனியாக மனு செய்தார்.  
 
இதற்கு பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தனித்தனியாக பதில் அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு துறையின் துணைச் செயலரும், தலைமை பொதுத் தகவல் அதிகாரியுமான எஸ்.டி. பிள்ளை கடந்த 6-ம் தேதி அளித்த பதில் விவரம்:  
 
இந்தத் துறையில் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர், இணை அமைச்சர்களுக்கு 30 நாள்கள் கொண்ட மாதத்தில் 31 நாள்களுக்கான தினபடி வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தத் தவறு வருத்தத்திற்குறியது. இருப்பினும், அமைச்சர்களிடம் இருந்து கூடுதல் தொகை திரும்ப பெற இயலாது.
 
வருங்காலங்களில் இத்தகைய தவறு நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என அவர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.  
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியதன் விளைவாக இந்தத் தவறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 நவம்பர், 2009

அட்டைப் பள்ளத்தாக்கின் அதிசயம்!



"அந்நியன்' திரைப்படத்தில் பேராசைக்காரனை அட்டையைவிட்டு  ரத்தம் உறிய வைத்துக் கொலை செய்வார் கதாநாயகன். ஆனால், ஒரு பாவமும் அறியாமல் அடர் காட்டில் அட்டைகளோடு பயணம் செய்துவிட்டுத் திரும்பினோம். எங்கே? ஏன்? எதற்கு? என்ற கேள்விக்கு அடுத்தடுத்த பாராவில் விடை.
 
 
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்காடு நகரில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா. சிங்கவால் குரங்குகளின் பிரதான வாழிடம், யானைகளின் வழித்தடத்தின் இறுதி பகுதி ஆகிய சிறப்பம்சங்கள் இதற்கு உண்டு.
 
22 வகை விலங் கினங்கள், 211 வகை பறவையினங்கள், அட்டைப் பூச்சியினங்கள், ஏராளமான தாவர வகைகள் உள்பட 1000-க்கும் மேற் பட்ட உயிரினங்களின் வாழிடமாக இந்த அமைதி பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. 
 
நீர்மின் நிலையம் அமைக்க அணை கட்டும் திட்டத்துக்காக அழிக்கப்பட இருந்த நிலையில் மக்களின் போராட்டம் மற்றும் மத்திய அரசு வற்புறுத்தல் காரணமாக அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக புதுவாழ்வு பெற்றுள்ளது. 
 
இதன் வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கேரள வனத்துறையினர் அனுமதியுடன், பயணம் செய்தபோதுதான் இந்த அட்டை உலா. மன்னார்காடு நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்காலி பகுதியில் இருந்து நமது பயணம் தொடங்குகிறது. 
 
சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை மினி வேனில் பயணித்துவிட்டு, பந்தன்தோடு ஓடையை கடக் கிறோம். அதன் பிறகு சில கிலோமீட்டர் தூரத்தில் பவானியின் கிளை ஆறு ஒன்று குறுக்கிடுகிறது. 
 
ஆற்றைக் கடக்கும் முன்னர் ஓரிருவரின் காலை மட்டுமே பதம்பார்த்த அட்டைகள் இப்போது அனைவரது கால்களிலும் சடசடவென ஏறத் தொடங்கின. மரங்களில் இருந்து உதிரும் இலைகள், அட்டை பூச்சிகளால் அங்கேயே இருக்க வைக்கப்படுகின்றன. இதனால் இலைகளும், தழைகளும் உரமாகி செடிகளும் மரங்களும் செழித்து வளர்கின்றன.
 
விவசாய நிலத்தில் மண் புழுக்கள் ஆற்றும் அரும்பணிக்கு நிகராக மழைக்காடுகளில் மரங்களும், புதர்களும் நிறைந்த பகுதிகளில் தரைபரப்பில் ஈரப்பதத்தை அப்படியே இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வதே அட்டைப் பூச்சிகளின் தலையாயப் பணி என நம்முடன் பயணித்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் சதீஷ் சந்திரன் நாயர் குறிப்பிட்டார். 
 
அமைதி பள்ளத்தாக்கின் மற்றொரு சிறப்பு, இங்கு ஆண்டுக்கு 4,500 மி.மீ. முதல் அதிகபட்சமாக 7,500 மி.மீ. வரை மழை பெய்கிறது. இந்தியாவில் வேறு எந்த வனப்பகுதிக்கும் இல்லாத சிறப்பு இது. நடைபயணத்தின் நடுநடுவே சதீஷ் சந்திரன் நாயரின் ஆராய்ச்சி கருத்து பரிமாற்றங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. அட்டைகள் அசராமல் ரத்தம் உறிஞ்சும் பணியில் கர்மசிரத்தையாக ஈடுபட்டிருந்தன. 
 
இந்த இடத்தில் அட்டைகள் குறித்து சில விஷயங்களை சொல்லியாக வேண்டும், மனிதர்களிடம் இருந்து ரத்தம் உறிஞ்சுபவை என்ற அளவில் மட்டுமே அட்டைகள் குறித்த பரிச்சயம் நமக்கு இருக்கும். 
 
ஆனால், அதைத் தாண்டி அட்டைகள் ஆற்றும் அரும்பணி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங்கிலத்தில் லீச்சஸ் என அழைக்கப்படும் இந்த அட்டை பூச்சிகள் சராசரியாக ஒரு அங்குலம் நீளத்தில் கறுப்பும் காப்பி கலரும் கலந்த வண்ணத்தில் காட்சியளிக்கும். 
 
பொதுவாக இவை மனிதர்களைக் கடிக்கும் முன் ஹருடின் என்ற சுரப்பை முதலில் செலுத்தும். அதன் பின்னர் அது ரத்தத்தை உறிஞ்சும்போது, நமக்கு எந்த வலியும் ஏற்படாது. தனது உடலில் இடம் உள்ள அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சிய பிறகு அட்டைகள் தானாக விழுந்துவிடும்.
 
ஆனால், அது உறிஞ்சிய இடத்தில் ரத்தம் வடிவது நிற்க 5, 10 நிமிடங்கள் ஆகும். இந்தக் கருத்து பரிமாற்றங்களுடன் நடந்ததில் 4 கிலோ மீட்டர் தொலைவை கடந்ததே தெரியவில்லை. 
 
வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை அடைந்த நாம் அங்கிருந்து, சைரேந்திரி வனம் அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டதன் நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதியை அடைந்தோம். 
 
அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து, அமைதி பள்ளத்தாக்கில் உள்ள குந்திபுழாவில் அணை கட்ட உத்தேசிக்கப்பட்ட இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சாரை சாரையாக அட்டைகள் அதன் மீது ஊர்ந்து கொண்டு, இலைகளைக் காய்ந்து போகவிடாமல் ஈரப்பதத்துடன் அங்கேயே இருக்கச் செய்வதால் மழைக்காடுகளின் பாதுகாப்பில் அட்டைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 
 
வனத்துக்கு உதவும் அட்டைகள் மனிதர்களுக்கும் உதவுவது ஆச்சர்யமளிக்கும். மனிதர்களுக்கும் ரத்தம் கட்டிவிட்டால் அதைச் சரி செய்வதில் அட்டைகள் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் இதனை பயன்படுத்தியிருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 
 
 
பிளாஸ்டிக் சர்ஜரி என்று கூறப்படும் குறிப்பிட்ட சில அறுவைச் சிகிச்சைகளிலும், குற்ற வழக்கு புலனாய்வில் ரத்த அடையாளங்கள் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகளுக்கும் அட்டைகளே பயன்படுகின்றன. மேலும், பல நோய்களுக்கான சிகிச்சை முறைகளில் அட்டைகளைப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
 
 
இந்தப் பகுதி இன்னமும் மழைக்காடு வகை வனமாக இருப்பதற்கு காவலாக அட்டைப் பூச்சிகள் செயல்படுகின்றன என்றால் அது மிகையல்ல.
 
 
சிலரைச் சாடும்போது அட்டை போல உறிஞ்சுகிறான் என்பார்கள்... அட்டைபோல அவன் இவ்வளவு சேவைகள் செய்திருப்பானா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். 
 
                                                                                                                   வி. கிருஷ்ணமூர்த்தி

சனி, 14 நவம்பர், 2009

சிக்கலில் "சிங்காரா' காடுகள்!


மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் முக்கியப் பகுதியான சிங்காரா வனப்பகுதி அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிப்புறப் பகுதியாகவும் இந்தப் பகுதி அமைந்துள்ளது.

  கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் வனப்பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான யானைகள் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகச் செல்லும் வழித்தடத்தில் முக்கியப் பகுதியாக சிங்காரா அமைந்துள்ளது.


  676 அரிய வகைத் தாவரங்கள், பூச்சிகள் முதல் யானைகள் வரையிலான 173 அரிய வகை உயிரினங்கள் தங்களது வாழ்வாதாரமாக சிங்காரா வனப்பகுதியை நம்பியுள்ளன.


  உயிரியல் மற்றும் சூழலியல் அடிப்படையில் மிகமுக்கியமான பகுதியாகக் கருதப்படும் சிங்காரா பகுதியில், அணுத்துகள்கள் குறித்த உயர் ஆய்வுகளை மேற்கொள்ள "நியூட்ரினோ' ஆய்வுக்கூடத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


  நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து அணுசக்தி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 20 நிறுவனங்கள் சார்பாக அணுசக்தித் துறை மூலம் இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.



  சிங்காரா வனப்பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் ரூ. 917 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள, இந்தத் திட்டத்துக்காக அடர்ந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு 35 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலைகள் அமைக்கப்படும். இதன் வழியாக சிங்காராவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடப் பணிகளுக்காகப் பல ஆயிரம் டன் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்லப்படும்.


  மேலும், இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால் அதற்கு நாளொன்றுக்கு 3.42 லட்சம் லிட்டர் தண்ணீரும், 3 மெகாவாட் மின்சாரமும் தேவைப்படும் என திட்டத்தை உருவாக்கியவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


  இவை எல்லாம் நிகழ்ந்தால் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் பேராபத்தைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


  நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.


  நியூட்ரினோ ஆய்வுக்கூடத் திட்டத்தை எவ்விதச் சிக்கலும் இன்றி நிறைவேற்ற ஒத்துழைப்புக் கோரி தமிழக முதல்வரை அணுசக்தித் துறை தலைவர் அனில் ககோட்கர் சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்தார். ஆனால், உள்ளூர் மக்களின் எதிர்ப்பு வலுவாக உள்ள நிலையில் தமிழக அரசு இதில் எந்த முடிவையும் எடுக்க இயலாது என முதல்வர் கருணாநிதி அப்போது தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாயின.


  வனப்பகுதி நிலங்களை இந்தத் திட்டத்துக்காக அளிக்க வேண்டும் என அணுசக்தித் துறையின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி கடந்த செப்டம்பரில் தெரிவித்தார்.


  ஆனால், "நியூட்ரினோ' ஆய்வுக்கூடம் அமைக்க சிங்காராவே சிறந்த இடம் என மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசின் கருத்தை மீறி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.
  இது தமிழக அரசு மட்டுமல்லாது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  இதேபோல, கால் நூற்றாண்டுக்கு முன்னால், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் குந்திப்புழா பகுதியில் நீர்மின் திட்டத்துக்காக அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் அணை கட்டுவது உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியது. பறவைகள் ஆய்வாளர் சலிம் அலி, பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் உள்ளிட்ட வல்லுநர்கள் அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியை ஆய்வு செய்து, இந்தப் பகுதியில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், இதனை தேசியப் பூங்காவாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அறிக்கை அளித்தனர்.


  இதன் பின்னர் அணை கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசு கேரள மாநில அரசை வற்புறுத்தியது. இதையடுத்து, அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.


  கால் நூற்றாண்டுக்கு முன்னால், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டத்தை தடுத்த மத்திய அரசு, இன்று தமிழக அரசின் கருத்தையும், மக்களின் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பது ஏன்?


  1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அமைதிப் பள்ளத்தாக்கின் சூழலியலைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் காட்டிய அக்கறை இன்று சிங்காராவை பாதுகாப்பதில் காணாமல் போனது எப்படி?



  இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அணுசக்தித்துறை வளர்ச்சி தேவைதான் என்றாலும், அதற்காக அடிப்படை வாழ்வாதாரமான சுற்றுச்சூழலை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்பதே உண்மை.



  ஆட்சியாளர்களால் அழிக்கப்பட இருந்த அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போதாவது ஆட்சியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து திருந்துவார்களா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

திங்கள், 9 நவம்பர், 2009

"விலக்கு ஆணை' இருந்தாலும் தகவல் தர வேண்டும்: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு

   கவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் ஊழல் அதிகாரிகள் குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத் துறை தர வேண்டும் என தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

  2005-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசு நிர்வாகம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் பெறுவது எளிதானது.  

ஆனால், இந்த சட்டத்தின்படி கோரப்படும் தகவல்களை அளிப்பதில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளித்து தமிழக அரசு 2008 ஆகஸ்ட் 26-ம் தேதி உத்தரவிட்டது.   பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மூலம் இதற்கான அரசாணை (எண்: 158) பிறப்பிக்கப்பட்டது. 

  நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை பணிகளுடன் தொடர்புடைய துறைகளுக்கு மட்டுமே அளிக்க வேண்டிய விலக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

  இது தொடர்பாக பல்வேறு தன்னார்வ அமைப்புகள், ஆர்வலர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

  இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் பணிகள் குறித்து சில தகவல்களை கேட்டு போரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாதவ், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்தார். 

  தங்கள் துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பதில் அளிக்க இயலாது என்று கூறி மனுவை லஞ்ச ஒழிப்புத் துறை நிராகரித்தது.  

இது தொடர்பாக மாதவ், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்த 2-வது மேல்முறையீட்டு மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது. 

  தகவல் ஆணையம் உத்தரவு: 


மனுவை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணன், தகவல் ஆணையர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் "தகவல் பெறும் உரிமைச் சட்டம் 8 (1) (எச்) பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட தகவல்களைத் தவிர்த்து, மற்ற தகவல்களை தர மறுக்கக் கூடாது' என்றனர். 

  எனவே, லஞ்ச ஒழிப்புத் துறையின் பொது தகவல் அதிகாரி மனுதாரர் கோரிய தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

செப்டம்பர் 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பதில் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது செல்லாததாகிவிட்டது என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

  மேலும் ஒரு வழக்கு:

இதேபோல, லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்பான மனுவை தகவல் ஆணையர் ஆர்.பெருமாள்சாமி அண்மையில் விசாரித்தார். 

  இதில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், தகவல் அளிக்க மறுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையின் பொது தகவல் அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.   இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து தகவல் ஆணையர் பெருமாள்சாமி உத்தரவிட்டார்.

புதன், 4 நவம்பர், 2009

ஒதுக்கீடு ஆணை வழங்காமல் கிரையத் தொகை வசூல்!

  சென்னை வியாசர்பாடியில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய திட்டத்தில் மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை வழங்காமல், அந்த மனைக்கான கிரையத் தொகை வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.  

மனை ஒதுக்கீடு ஆணை இல்லாதவரிடம் இருந்து கிரையத்தொகை வசூலிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக மனைகளை உருவாக்கியும், குடியிருப்புகளை கட்டியும் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்து வருகிறது.  

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு வியாசர்பாடி சிவகாமி அம்மையார் காலனி திட்டப்பகுதியில் மனை (எண்:453ஏ) 1990-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. ஆனால், இதற்கான ஒதுக்கீட்டு ஆணை இதுவரை வழங்கப்படவில்லை. 

  எனினும், இந்த மனைக்கான கிரையத்தொகை உள்ளிட்ட பல்வேறு தொகைகளை குடிசைப்பகுதி மாற்று வாரியம் வசூலித்துள்ளது.   பல முறை விண்ணப்பித்தும் இதுநாள் வரை தங்களுக்கு மனை ஒதுக்கீட்டுக்கான ஆணை வழங்கப்படவில்லை என ஏழுமலை தரப்பில் கூறப்படுகிறது. 

  இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய எஸ்டேட் அலுவலர் தெரிவித்த விவரங்கள்:   ஏழுமலையிடம் முன்வைப்புத் தொகையாக ரூ. 89 பெற்றுக் கொண்டு மனை (எண்: 453ஏ) ஒதுக்கப்பட்டது. இந்த மனைக்கு கிரயத்தொகை ரூ. 700 என நிர்ணயிக்கப்பட்டது. 


  இந்த மனைக்கு கிரையத் தொகை, அபிவிருத்தி கட்டணம், அபராத வட்டி உள்ளிட்ட வகைகளில் மொத்தம் ரூ. 2,664 வசூலிக்கப்பட்டது.   மனை ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏழுமலையிடம் இருந்து 25-08-1990-ல் ரூ. 75-ம் (ரசீது எண்: 161709), 1991 செப்டம்பர் 4-ம் தேதி (ரசீது எண்கள்: 165803, 165804, 145808) ரூ. 2,566-ம் வசூலிக்கப்பட்டது.  

எனினும், அதிகாரப் பூர்வ ஆவணமான ஒதுக்கீட்டு ஆணை ஏழுமலைக்கு வழங்கப்படவில்லை என குடிசைப் பகுதி மாற்று வாரிய எஸ்டேட் அலுவலர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

  மனை ஒதுக்கீடு பெற்றதற்கான அனைத்து தொகைகளையும் செலுத்தி இருந்தாலும், ஒதுக்கீட்டு ஆணை இல்லாததால் மனையை பெற்றவர் அதற்கான விற்பனை பத்திரத்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

  மனை பெற்றவர் பல முறை கோரியும் குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வருவதாக ஏழுமலை தரப்பில் புகார் கூறப்படுகிறது. 

குடிசைப் பகுதி மாற்று வாரியத்தில் மனை ஒதுக்கீடு பெற்றவர்களும், அந்த மனைகளை வாங்கியவர்களும் வாரிய அதிகாரிகளிடம் இருந்து விற்பனை பத்திரங்களை எளிதில் பெற முடியாத நிலை உள்ளதாக ஏற்கெனவே பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில் மனை ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை வழங்காமல் கிரயத் தொகை வசூலிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கோப்புகள் மாயமான விவகாரம்: சி.எம்.டி.ஏ.வுக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ்

நில வகைபாடு மாற்றம் குறித்த கோப்புகள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.) தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாகவும், தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கம் குறித்தும் விளக்கம் அளிக்குமாறு சி.எம். டி.ஏ. உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூரில் குறிப்பிட்ட சில மனைப்பிரிவுகள் அமைந்துள்ள நிலங்களின் வகைப்பாடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றம் செய்யப்பட்டது.

இது தொடர்பான 6 கோப்புகளின் பிரதிகளையும், கோப்புகளை நேரில் பார்வையிட அனுமதி கோரியும் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஏ. சேது, 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி சி.எம்.டி.ஏ.வின் பொது தகவல் அதிகாரியிடம் மனு செய்தார்.

ஆனால், இதில் 2 கோப்புகள் மட்டுமே தங்களிடம் உள்ளதாகக் கூறி சி.எம்.டி.ஏ.வின் பொது தகவல் அதிகாரி 14-02-2008-ல் பதில் அளித்தார்.

இது குறித்து சேது, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் 5-3-2008-ல் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை மாநில தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன், தகவல் ஆணையர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் அண்மையில் விசாரித்தனர்.

தகவல் ஆணையம் உத்தரவு: விசாரணைக்கு பின்னர் இது தொடர்பாக அக்டோபர் 16-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு விவரம்:

""மனுதாரர் கோரியுள்ள 6 கோப்புகளில் 4 கோப்புகள் காணாமல் போனது குறித்து சி.எம்.டி.ஏ.வின் பொது தகவல் அதிகாரி தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதில் ஒரு கோப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ. தரப்பில் கூறப்பட்டாலும் இது குறித்து ஆணையத்துக்கோ, மனுதாரருக்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

எனவே, குறிப்பிட்ட சில கோப்புகள் காணாமல் போனது குறித்து உயரதிகாரி ஒருவரை நியமித்து விசாரணை மேற்கொண்டு, கோப்புகள் காணாமல் போனதற்கு பொறுப்பானவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் 6 வாரங்களுக்குள் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இதற்கு சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலரும், வீட்டுவசதி மற்றும் நகரமைப்புத் துறை செயலரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணாமல் போன கோப்புகளைக் கண்டுபிடித்து அதில் உள்ள தகவல்களை மனுதாரருக்கு அளிப்பதுடன், அது குறித்து ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

சி.எம்.டி.ஏ.வுக்கு நோட்டீஸ்: இதே விஷயம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு வழக்கில் (எண்: 20656/07) 2007-ம் ஆண்டு ஆணையம் பிறப்பித்த நோட்டீஸýக்கும் பதில் அளிக்க வேண்டும்.

மேலும், தங்கள் அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கம் குறித்த முழுமையான விளக்கத்தை சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் ஆணையத்தில் தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.