திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கிழக்குக் கடற்கரைச் சாலையில் அரசு மருத்துவமனை எப்போது?

  சென்னையில் இருந்து புதுச்சேரியின் புறநகர் பகுதிகள் வரையிலான

கிழக்குக் கடற்கரை சாலையில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த வழித்தடத்தில் விபத்து சிகிச்சைக்கு என முழுமையான அரசு மருத்துவமனை எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை திருவான்மியூரில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டி சர்வதேச தரத்தில் விரைவு சாலை அமைக்கும் பணிகள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (டி.என்.ஆர்.டி.சி.) மூலம் 1998-ல் தொடங்கின. முதல் கட்டமாக சென்னை முதல் புதுச்சேரியின் புறநகர் பகுதிகள் வரையிலான 113 கிலோ மீட்டர் தொலைவுக்கு சர்வதேச தரத்தில் இருவழி சாலை அமைக்கும் பணிகள் 2001-ம் ஆண்டு முடிக்கப்பட்டன. சுங்க கட்டணம் வசூலிக்க அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் 2002 முதல் செயல்படத் தொடங்கின.

இந்தச் சாலையில் விபத்துகள் ஏற்பட்டால் மருத்துவ உதவி கோர நவீன தகவல் தொடர்பு சாதன வசதிகளும், விபத்துகளைத் தடுக்க மிக அதிக எண்ணிக்கையில் ஒளி பிரதிபலிப்பான்களும் அமைக்கப்பட்டன.

அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆம்புலன்ஸ்களும், தனியான போக்குவரத்து கண்காணிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

விபத்துகள் அதிகரிப்பு: போக்குவரத்து தொடங்கப்பட்டு 10-வது ஆண்டைத் தொடும் நிலையில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. வாகனப் போக்குவரத்து எதிர்பார்த்ததைவிட வெகுவாக அதிகரித்ததே இங்கு விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இரு வழிச்சாலையாக தொடங்கப்பட்ட இந்த சாலை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படாததே விபத்துக்கு முக்கியக் காரணமாக வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீஸôர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர்.

இந்தச் சாலை அமைந்துள்ள பகுதியில் சென்னை முதல் புதுச்சேரி வரை விபத்து கால அவசர சிகிச்சை வசதியுடன் ஒரு அரசு மருத்துவமனை கூட இதுவரை தொடங்கப்படவில்லை.

அரசு மருத்துவமனை வரவில்லையே தவிர பிரபலமான தனியார் மருத்துவமனைகள் புதிது புதிதாகத் தொடங்கப்படுகின்றன. விபத்துக்குள்ளாகும் அனைவரும் தனியார் மருத்துவமனைகளையே நாடுவது சாத்தியமல்ல.

மருத்துவமனை அமைக்கும் திட்டம்: விபத்து நேர்ந்தால் மட்டுமல்லாது இப் பகுதி மக்களின் மருத்துவத் தேவைகளுக்காகவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையையே சார்ந்து இருக்கின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு 2001-ம் ஆண்டு ஈஞ்சம்பாக்கத்தில் சென்னை புறநகர் அரசினர் மருத்துவமனை சிறிய அளவில் தொடங்கப்பட்டது. பகுதி நேர மருத்துவ சேவை அளிக்கும் நிலையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறது.

படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனையாக இம் மருத்துவமனையை தரம் உயர்த்த 2002-ல் தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த டி.ஆர்.பாலு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 50 லட்சத்தை 2 பிரிவுகளாக ஒதுக்கீடு செய்தார்.

அப்போதைய அதிமுக அரசு அளித்த ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக ரூ. 25 லட்சத்தில் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் புறநகர் மருத்துவமனைக்கான புதிய வளாகம் அடுத்த சில ஆண்டுகளிலேயே கட்டப்பட்டது. உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், விபத்துகால அவசர சிகிச்சை ஆகியவற்றுக்கான கூடுதல் அறைகள் தொடர்ந்து கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஈஞ்சம்பாக்கம் உள்ளாட்சி நிர்வாகத்தில் பொறுப்புக்கு வந்தவர்கள் அரசுக்கு நினைவூட்டி திட்டத்தை துரிதப்படுத்தி இருக்க வேண்டும்.

பாதியில் நின்றது ஏன்? உள்ளாட்சி நிலையில் இருந்து வலியுறுத்தல்கள் தொடராத நிலையில் இங்கு முழுமையான அரசு மருத்துவமனை அமைக்கும் திட்டம் முன்னேற்றம் ஏதும் இன்றி பாதியில் நின்றுவிட்டது என்கிறார் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொன்னுவேல் கூறினார்.

இனியாவது இந்த மருத்துவமனையில் விபத்துகால சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுடன் மருத்துவமனையை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சென்னை பெருநகர் விரிவாக்கத்துக்கு பிறகே புதிய மாநகராட்சிகள் அறிவிப்பு

சென்னை பெருநகர் பகுதியின் எல்லை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த பின்னரே தாம்பரம், ஆவடி பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு புதிய மாநகராட்சிகள் அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.




சென்னை புறநகரில் மக்கள் நெருக்கம் அதிகரிப்பு, தொழிற்சாலைகள் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.



இந்த வளர்ச்சியின் காரணமாக புறநகரில் ஒரே மாதிரியான சாலைகள், கழிவுநீர் வடிகால் வசதிகள், திடக் கழிவு மேலாண்மை திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆனால், புறநகரில் சில பகுதிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளாகவும், சில பகுதிகள் ஊரக உள்ளாட்சிகளாகவும் இருப்பதால் உள்கட்டமைப்பு திட்டங்களை ஒரே மாதிரியாக செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன.



புதிய மாநகராட்சிகள்: இதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்கு வெளியே, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) எல்லைக்குள் வரும் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து 2 புதிய மாநகராட்சிகளை உருவாக்க அரசு முடிவெடுத்தது.



இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சி.எம்.டி.ஏ. துணை தலைவர் தலைமையில் உயர்நிலைக் குழு 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை, 2008 ஏப்ரல் மாதம் அரசிடம் அளிக்கப்பட்டது.



இந்த அறிக்கையின் அடிப்படையில் பொது மக்களின் கருத்தை அறிய தாம்பரம், அம்பத்தூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் 2008-ல் சி.எம்.டி.ஏ.வால் நடத்தப்பட்டன. இக் கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் இரண்டு விதமான செயற்குறிப்புகள் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.



2 பரிந்துரைகள்: சென்னை பெருநகர் எல்லைக்குள் சென்னை மாநகராட்சியின் எல்லையை 800 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்து சென்னை மாநகராட்சியை சென்னை பெருநகர மாநகராட்சி என அறிவித்தல் என்பது ஒரு செயற்குறிப்பு.



ஆலந்தூர், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் நகராட்சிகள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளை சேர்த்து சென்னை மாநகராட்சியின் பரப்பளவை 426 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்வது. இதே சமயத்தில் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு 2 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.



இதில் 2-வது செயற்குறிப்பை ஏற்ற தமிழக அரசு, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியின் எல்லைகளை 426 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்வது தொடர்பான அரசாணையை கடந்த டிசம்பர் 26-ம் தேதி பிறப்பித்தது.



மேலும், தாம்பரம், ஆவடி பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு புதிய மாநகராட்சிகளை அறிவிப்பதை தாற்காலிகமாக அரசு நிறுத்தி வைத்தது.



பெருகி வரும் தேவை: இதே சமயத்தில், சென்னை பெருநகர் எல்லைக்கு வெளியே உள்ள ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, கேளம்பாக்கம், திருவள்ளூர் பகுதிகளில் புதிய குடியிருப்புகள், தொழிற்சாலைகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.



இதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பகுதிகளுக்கு நகர்ப்புற அந்தஸ்து அளிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.



மேலும், தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய பெருநகர் வளர்ச்சிக் குழுமங்களின் எல்லைகளைக் காட்டிலும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை மிகவும் குறைவாக உள்ளது.



அரசு முடிவு: இதனால், அதிகரித்துவரும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மற்ற பெருநகரங்களுடனான ஒப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில், இப்போது 1,189 சதுர கி.மீ.-ஆக உள்ள சென்னை பெருநகர் பகுதியை தேவையான அளவுக்கு விரிவாக்கம் செய்வது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



எனவே, ஸ்ரீபெரும்புதூர், கேளம்பாக்கம், சிங்கபெருமாள் கோயில், திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகள் வரை சென்னை பெருநகரின் எல்லையை விரிவாக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விரிவாக்கம் செய்யும் போது எந்தெந்த பகுதிகளை சேர்ப்பது என்பது குறித்த வரைவு அறிக்கையை அளிக்குமாறு சி.எம்.டி.ஏ.வுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.



பணிகள் தீவிரம்: இதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து எந்தெந்த பகுதிகளை சென்னை பெருநகர் எல்லைக்குள் சேர்ப்பது என்பது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்கும் பணியை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.



அடுத்த சில மாதங்களில் இது தொடர்பான விரிவான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை பெருநகரின் எல்லையை விரிவாக்கம் செய்யும் பட்சத்தில் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ள புதிய மாநகராட்சிகளின் உத்தேச எல்லைகளும் மாற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே, சென்னை பெருநகர் எல்லை விரிவாக்கத்துக்கு பிறகே புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் குறித்த அரசின் அறிவிப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

சென்னைமேல்முறையீட்டு மனுவை வாங்காதது ஏன்? மாநிலத் தகவல் ஆணையர் கேள்வி

சென்னை, ஆக. 4: சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து தகவல் கேட்டு தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் அனுப்பப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வாங்க மறுத்த அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து ஒரு மாதத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாநிலத் தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன் உத்தரவிட்டார்.






சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட 5 பிரிவுகளின் பல்வேறு செயல்பாடுகள் குறித்த தகவல்களை அளிக்கக் கோரி மாநகராட்சியின் பொது தகவல் அதிகாரியிடம், படாளம் பகுதியை சேர்ந்த பி. கல்யாணசுந்தரம் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி மனு செய்தார்.






இந்த மனுவில் கோரப்பட்டதில் சில தகவல்களை மட்டும் பொது தகவல்களை பொது தகவல் அதிகாரி கடந்த பிப்ரவரி 19-ம் தேதி அளித்தார். ஆனால், இந்தத் தகவல்கள் முழுமையாக இல்லை என்றுக்கூறி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 19(1) பிரிவின்கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 4-ம் தேதி கல்யாணசுந்தரம் அனுப்பினார். ஆனால், இந்த மனுவை வாங்க முடியாது என்றுகூறி மாநகராட்சியின் மேல்முறையீட்டு அதிகாரி திருப்பி அனுப்பிவிட்டார்.






இதையடுத்து கல்யாணசுந்தரம், மாநிலத் தகவல் ஆணையத்தில் இதுகுறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 19(3)-ன் கீழ் இரண்டாவது மேல்முறையீடு செய்தார். இந்த இரண்டாவது மேல்முறையீட்டு மனு ஜூலை 29-ம் தேதி, தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.






அப்போது மனுதாரர் ஆஜரானார். ஆனால், மாநகராட்சி சார்பில் பொது தகவல் அதிகாரியும், மேல்முறையீட்டு அதிகாரியும் ஆஜராகவில்லை. பொது தகவல் அதிகாரி ஆஜராகாத நிலையில் மனுதாரரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட தகவல் முழுமையாக இல்லை என்று மனுதாரர் கூறியது பதிவு செய்யப்பட்டது.






தகவல் ஆணையர் உத்தரவு: விசாரணையின் முடிவில் தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன், கடந்த 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவு விவரம்: இந்த ஆணை பெறப்பட்ட இரு வாரங்களுக்குள் விடுபட்ட தகவல்களை முழுமையாக அளித்து மனுதாரரின் ஒப்புகை பெற்று அதன் விவரத்தை ஆணையத்துக்கு பொது தகவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.






தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனுப்பப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை வாங்க மறுத்த மேல்முறையீட்டு அதிகாரி மீது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் விதி எண் 20(1)-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை மாநகராட்சி ஆணையர் தனது குறிப்புரையுடன் ஒரு மாதத்துக்குள் தகவல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.






இவ்வாறு உரிய காலத்துக்குள் விளக்கம் அளிக்கத் தவறினால், இந்த விவகாரத்தில் தகவல் ஆணையம் உரிய மேல் நடவடிக்கை எடுக்கும் என அறிவுறுத்தப்படுகிறது. கடந்த 29-ம் தேதி நடைபெற்ற விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பியும் விசாரணைக்கு வராத பொது தகவல் அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்தும் தனது குறிப்புரையுடன் மாநகராட்சி ஆணையர், தகவல் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அலட்சியத்தால்