ஞாயிறு, 1 ஜூலை, 2012

வீட்டுவசதிவாரிய வீடு, மனைகளின் விலை அதிகரிப்பு : வழிகாட்டி மதிப்பு உயர்வே காரணம்

வழிகாட்டி மதிப்பு உயர்வு அடிப்படையில், வீட்டுவசதி வாரியத்தின் விற்பனையாகாத மற்றும் புதிய வீடுகள், மனைகளின் விலைகளை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வீட்டுவசதி வாரியத்தில் வீடு, மனை வாங்குவோருக்கான செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நிலங்களுக்கான அரசின் திருத்தியமைக்கப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்புகள், கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
முன் எப்போதும் இல்லாத வகையில், பெரும்பாலான இடங்களில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை வழிகாட்டி மதிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், வீடு, மனைகளின் சந்தை மதிப்பும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மதிப்பு அதிகம் : பல்வேறு இடங்களில், இப்போதைய சந்தை மதிப்பைவிட அதிகபட்சமாக இருக்கும் வகையில், வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்பட்டுள்ளன. வழிகாட்டி மதிப்பு உயர்வை தொடர்ந்து, தனியார் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களது புதிய திட்டங்களில் வீடு, மனைகளில் விலையை நிர்ணயிக்கும்போது, வழிகாட்டி மதிப்பு உயர்வை கருத்தில் கொண்டு, அதிகபட்ச அளவில் நிர்ணயிக்கத் துவங்கியுள்ளன.
இதேபோல், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், புதிதாக விற்பனை செய்ய உள்ள வீடு, மனைகளின் விலையை உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.

தீர்மானங்கள் : அண்மையில் நடந்த வீட்டுவசதி வாரிய கூட்டத்தில், இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
வாரியத்தின் அனைத்து கோட்டங்கள், பிரிவுகளில் விற்பனையாகாத குடியிருப்பு மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு, வணிக மனைகளுக்கு, 2012-13ம் நிதி ஆண்டிற்கான விலை நிர்ணயம் தொடர்பாக, அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.
விற்பனையாகாத வீடுகள் மற்றும் மனைகளின் தற்போதைய சந்தை மதிப்பு, வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், புதிய விற்பனை விலையை நிர்ணயம் செய்யலாம்.
வாரிய அதிகாரிகளின் அறிக்கை பெறப்படாத திட்டங்களுக்கு இப்போதைய சந்தை விலை, வழிகாட்டி மதிப்பு, வாரியம் ஏற்கனவே நிர்ணயித்த நடைமுறை விலை ஆகியவற்றை ஆய்வு செய்து, இதில் எது அதிகமோ, அதை தற்போதைய விற்பனைக்கான விலையாக நிர்ணயிப்பது என்ற விலை நிர்ணயக்குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தால்... : சந்தை விலை, வழிகாட்டி மதிப்பைவிட வாரியத்தின் நடைமுறை விலை அதிகமாக உள்ள இடங்களில், நடைமுறை விலையையே வாரியத்தின் விற்பனைக்கான ஆரம்ப விலையாக நிர்ணயித்துக் கொள்ளலாம்.
நடைமுறை விலை, சந்தை விலையைவிட வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், இப்போதைய வழிகாட்டி மதிப்பை வாரியத்தின் விற்பனைக்கான ஆரம்ப விலையாக நிர்ணயிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 சதவீதம் வரை அதிகரிக்கும் : இத்தீர்மானத்தின்படி, வீட்டுவசதி வாரியத்தால் ஏற்கனவே உருவாக்கப்பட்டு, விற்பனையாகாமல் உள்ள வீடு, மனைகளின் விலைகள் முந்தைய விலையைவிட, 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்போது புதிதாக உருவாக்கப்பட்டு, குலுக்கல் அறிவிக்க வேண்டிய நிலையில் உள்ள திட்டங்களின் வீடு, மனைகளின் விலையையும், புதிய வழிகாட்டி மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு அடிப்படையில் மறு ஆய்வு செய்து, புதிதாக நிர்ணயிக்க வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வீட்டுவசதி வாரியத்தின் இந்நடவடிக்கையால், குலுக்கல் முறையில் வீடு வாங்க விரும்புவோர், கடந்த ஆண்டு நிலவரத்தை காட்டிலும் கூடுதலாக, 20 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.