புதன், 28 ஏப்ரல், 2010

காவலர்கள் உயர் கல்விக்கு ஆட்சேபணையில்லா சான்றிதழ் அளிப்பதில் தாமதம் ஏன்?

  சென்னையில் உயர் கல்வி பயில விரும்பும் காவலர்களுக்கு அதற்கான அனுமதி மற்றும் ஆட்சேபணையில்லா சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகக் காவல் துறையில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஆகிய பிரிவுகளுக்கு பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சியை கல்வித் தகுதியாகக் கொண்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்கள் காவலர்களாக பணியாற்றிக் கொண்டு அஞ்சல் வழியில் பட்டப்படிப்பை முடித்தால் அவர்கள் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்று உயர் பதவிகளுக்கு விரைந்து செல்ல முடியும்.

பணியிலிருக்கும் காவலர்கள் தங்கள் துறை மேலதிகாரிகளின் சான்றுடன் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு குறிப்பிட்ட சில சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. 

காவல் துறையில் சாதனை படைப்பதை தங்கள் வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ள ஏராளமான இளைஞர்கள் முதலில் காவலர்களாக இத்துறையில் கால் பதித்துவிட்டு அதன் பின்னர் பட்டப்படிப்பு முடித்து உயர் பதவிகளுக்கு வருவது வழக்கமான ஒரு நடைமுறையாகும்.

இப்போதைய நிலையில் இவ்வாறு காவல் பணியில் சேரும் ஆயிரம் பேரில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மேற்படிப்பில் சேர விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது தமிழகக் காவல் துறையில் சுமார் 6 ஆயிரம் பேர்  ஆயுதப்படை, சிறப்புப் போலீஸ் படையில் உள்ளனர். 

இதில் சென்னையில் மாநகரப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவலர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியாக பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் முதலில் மாநகரப் போலீஸில் உள்ள நிர்வாகப் பிரிவில் இருந்து ஆட்சேபணையில்லா சான்றிதழைப் பெற வேண்டும். இந்தச் சான்றிதழும், துறை சார்ந்த பணியை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது.


  இவ்வாறு அனுமதி மற்றும் ஆட்சேபணையில்லா சான்றிதழ் பெற சில மாதங்களுக்கு முன்னர் சுமார் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் மாநகரப் போலீஸ் நிர்வாகப் பிரிவில் விண்ணப்பித்தனர். இந்த மனுக்கள் மீது நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் இதுவரை எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்து வருவதாக காவலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


இதனால் தங்களது உயர் கல்வி வாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு தங்களது பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என அந்தக் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 22 ஏப்ரல், 2010

முடங்கியுள்ள வீட்டுவசதி வாரிய இணையதளம்

 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முடங்கியுள்ளது.







தமிழகத்தில் அனைத்து விதமான வருவாய்ப் பிரிவினரின் குடியிருப்புத் தேவைகளை நியாயமான விலையில் பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தொடங்கப்பட்டது.






இந்த வாரியம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், நிலங்களை கையகப்படுத்தி மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி குலுக்கல் மூலம் உரிய நபர்களுக்கு ஒதுக்கி வருகிறது.






இத்தகைய பணிகளில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து பல்வேறு தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.






இதற்காக தகவல் தேவைப்படும் அனைவரும் வீட்டுவசதி வாரிய அலுவலகங்களை நேரடியாக அணுகுவது நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும், இவ்வாறு அணுகும் பொதுமக்களுக்கு உரிய தகவல்களை உடனடியாக அளிப்பதில் அதிகாரிகளுக்கும் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக கூறப்படுகிறது.






இணையதளம் தொடக்கம்: இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுவசதி வாரியத்துக்கு என பிரத்யேகமாக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டது.






தொடக்கத்தில் வீட்டுவசதி வாரியத்தின் அடிப்படைத் தகவல்களை மட்டும் உள்ளடக்கியதாக இந்த இணையதளம் இருந்தது.






பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை அடுத்து, இந்த இணையதளம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டது. இதில், வீட்டுவசதி வாரியத்தின் அனைத்து திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட- ஒதுக்கீடு செய்யப்படாத மனைப் பிரிவுகள், குடியிருப்புகள், வீடுகள் குறித்த முழுமையான விவரங்கள் இடம் பெற்றிருந்தன.






மேலும், மனைப் பிரிவுகள், குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வாரியத்துக்கு செலுத்திய- செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்த விவரங்களையும் அவரவர் இருந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள உதவும் வகையில் இந்த இணையதளம் அமைந்திருந்தது.






வீட்டுவசதி வாரியத்தின் புதிய திட்டங்கள், குலுக்கல் விவரங்கள் உள்ளிட்ட விவரங்களுடன், வீட்டுவசதி வாரியத்துக்கு கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் தொடர்பான விவரங்களையும் இணையதளம் மூலம் அறிய முடிந்தது. www.tnhb.gov.in என்ற முகவரியில் இயங்கி வந்த இணையதளம் கடந்த 6 மாதங்களாக முடங்கியுள்ளது.






இதனால், வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு விவரங்களை பெறுவதற்கு மக்கள் அந்தந்த பிரிவு அலுவலகங்களையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏராளமானோர் தகவல்களுக்காக அலுவலர்களை தொடர்பு கொள்வதால் அவர்களிடமும் சலிப்பு ஏற்படுகிறது.






இது தேவையற்ற அலைச்சலையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்துவதாக உள்ளது என ஒதுக்கீட்டுதாரர்களும், ஒதுக்கீடு பெற முனைவோரும் புகார் தெரிவித்தனர்.






தீர்வு எப்போது? இணையதளத்தை மேலும் புதுப்பொலிவாக்க வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கடந்த ஆண்டு திட்டமிட்டனர்.






இதற்கான பணி அரசின் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவர்கள் பணி முடிந்தவுடன் விரைவில் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன், 21 ஏப்ரல், 2010

தினமணி செய்தி எதிரொலி: கோயம்பேடு கோயில் நில விவகாரம்: ஓசோன் குழுமம் ஆவணங்களை சமர்ப்பிக்க மேயர் ஆணை

 சென்னை கோயம்பேடில் மெட்ரோசோன் திட்டப் பகுதியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் ஒரு பகுதியில் தாற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டது தொடர்பான நீதிமன்ற ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் அலுவலகத்தை அகற்றுமாறு மேயர் மா. சுப்பிரமணியன் ஆணையிட்டார்.

திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 1.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றத்திலும் அளிக்கப்பட்ட உறுதி மீறப்படுவதாக கூறப்படும் புகார்கள் தொடர்பான செய்தி "தினமணி'யில் கடந்த 19-ம் தேதி வெளியானது.

இதன் எதிரொலியாக பிரச்னைக்குரிய நிலம் தனியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சம்பந்தப்பட்ட திட்டப் பகுதியை மேயர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்,
கமிஷனர் பொறுப்பு வகிக்கும் ஆஷிஸ் சாட்டர்ஜி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஓசோன் குழுமத்தின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக தூண்கள் அமைப்பதற்காக இங்கு எந்திரங்கள் மூலம் துளையிடுவதால் தங்கள் கட்டடங்களில் அதிர்வுகள் ஏற்படுவதாக இதற்கு பின்பக்கத்தில் வசிக்கும் மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.

எனவே, இவ்வாறு அதிர்வுகள் ஏற்படாத வகையில் வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த பரிசீலிக்குமாறு ஓசோன் குழும பொறியாளர்களை மேயர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.

100 அடி சாலையை (ஜவஹர்லால் நேரு சாலை) பாடிக்குப்பம் பகுதியுடன் இணைக்கும் வகையில் விடப்பட்டுள்ள 12 மீட்டர் அகல சாலைக்கான நிலத்தை மேயர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் இந்த திட்டப்பகுதியில் காலியாக விட வேண்டிய 4 ஏக்கர் நிலம் தனியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை மேயர் ஆய்வு செய்தார்.

கோயில் நிலம்: 

ஓசோன் குழுமத்தின் திட்டப்பகுதியின் நடுவில் அமைந்துள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சர்வே எண்: 230/2}ல் உள்ள 1.36 ஏக்கர் நிலத்தை மேயர் ஆய்வு செய்தார். இந்த நிலத்தை 12 மீட்டர் சாலையுடன் இணைக்கும் வகையில் 7.2 மீட்டர் அகல சாலைக்கு நிலம் விடப்படாமல் இருந்தது குறித்து ஓசோன் குழும பிரதிநிதிகளிடம் மேயர் விளக்கம் கேட்டார்.

இந்த நிலத்துடன் இணைப்பு சாலைக்கு விட வேண்டிய நிலத்தையும் சேர்த்து உடனடியாக முள்கம்பி வேலி அமைப்பதாக ஓசோன் குழும பிரதிநிதிகள் உறுதி அளித்தனர்.

தாற்காலிக அலுவலகம்: இதன் பின் சர்வே எண் 227/3}ல் அமைந்துள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 41 சென்ட் நிலத்தையும் மேயர் ஆய்வு செய்தார்.

அந்த நிலத்தில் ஓசோன் குழுமத்தின் "மெட்ரோசோன்' பிரிவு தாற்காலிக அலுவலகத்தின் ஒரு பகுதி அமைந்துள்ளது குறித்து அதிகாரிகளிடமும், அந்த நிறுவன பிரதிநிதிகளிடமும் மேயர் விசாரித்தார்.

""2007}ம் ஆண்டு இந்த அலுவலகம் கட்டப்பட்டதால், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் 2008}ல் உச்ச நீதிமன்றம் "எப்படி இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும்' என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுவது ஆகாது'' என ஓசோன் குழும பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.

ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கும் போது இந்த நிலம் எப்படி இருந்தது என்ற விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும். அப்படி தெரிவிக்கப்பட்ட விவரங்களில் தாற்காலிக அலுவலகம் இருப்பது உறுதி செய்யப்பட்டதா என்பது குறித்த ஆவணங்களை உடனடியாக சமர்பிக்க வேண்டும்.

அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள தாற்காலிக அலுவலகத்தை அகற்றிவிட்டு நிலத்தைச் சுற்றி முள்கம்பி வேலி போட வேண்டும் என மேயர் மா. சுப்பிரமணியன்
உத்தரவிட்டார்.

மீறப்படும் அரசின் உறுதிமொழி

  சென்னை கோயம்பேடு சந்திப்பில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலத்தை பாதுகாப்பதில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் சி.எம்.டி.ஏ. விதித்த நிபந்தனைகள் தனியார் கட்டுமான நிறுவனத்தால் மீறப்படுவதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் அரசு சார்பில் அளிக்கப்பட்ட உறுதி மொழி மீறப்படுவதாக கூறப்படுகிறது.
 
கோயம்பேடு சந்திப்பில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 3.03 ஏக்கரை உள்ளடக்கிய 42 ஏக்கர் நிலம் ஓசோன் குழுமத்துக்கு ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரீஸ் நிறுவனத்தால் விற்கப்பட்டது. 
 
இந்த நிலத்தில் பிரமாண்ட குடியிருப்புத் திட்டத்தை மேற்கொள்ள ஓசோன் குழுமம் முடிவு செய்தது. இதற்கான திட்ட அனுமதி கோரும் மனுவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2003-ம் ஆண்டு சி.எம்.டி.ஏ. மற்றும் சென்னை மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
 
அப்போது இந்த பிரச்னையில் அனுமதி அளிக்க மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸýம், திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலையிட்டதன் பேரில் ஓசோன் குழுமத்தின் திட்ட அனுமதி விண்ணப்பத்துக்கு ஒப்புதல் தருவது நிறுத்தி வைக்கப்பட்டது. 
 
திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
 
ஆனால், சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர்த்து மற்ற நிலங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் 2009-ல் அதே விண்ணப்பத்துக்கு சி.எம்.டி.ஏ. திட்ட அனுமதி வழங்கியது.
 
சி.எம்.டி.ஏ.வின் நிலைப்பாடு கோயில் நிலத்தை மீட்கும் இந்து சமய அறநிலையத்துறையின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விரிவான செய்தி தினமணியில் கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி வெளியானது.
 
இதன் எதிரொலியாக, ஓசோன் குழுமத்துக்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மன்றத்துக்கு தெரிவிக்காமல் முடிவெடுóத்ததற்காக 5-வது மண்டல செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
 
சட்டப்பேரவையில்  
 
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஜூலை 16-ம் தேதி கொண்டுவரப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதத்துக்கு செய்தித் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) தலைவருமான பரிதி இளம்வழுதி பதில் அளித்தார். 
 
திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் 3.03 ஏக்கர் நிலத்தில் 1.26 ஏக்கர் நிலம் ஏற்கெனவே மத்திய அரசின் பொதுப்பணித்துறையால் வாங்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கை 2008 நவம்பர் 7-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்படி நிலம் எப்படி இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 
 
இதன் அடிப்படையில் 1.77 ஏக்கர் நிலத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஓசோன் குழுமத்திற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பரிதி இளம்வழுதி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
 
மாநகராட்சியில்
 
 ஜூலை 22-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இது தொடர்பான விவாதத்துக்கு மேயர் மா. சுப்பிரமணியன் ""திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது என உரிமைக் கோரப்படும் 3.03 ஏக்கர் நிலத்தில் ஓசோன் குழுமத்தின் திட்டப் பகுதியில் அமைந்துள்ள 1.77 ஏக்கர் நிலத்திற்கு வழியாக 7.2 மீட்டர் அகலபாதை குறிப்பிட்டு அந்த நிலத்திலும் எந்தவிதமான கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனைக்குட்பட்டு அதற்கான உறுதி மொழிபத்திரம் பெறப்பட்டபிறகே கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
 
ஓசோன் விளக்கம் 
 
இந்த விவகாரத்தில் பிரச்னைக்குரிய நிலத்தில், எவ்வித கட்டுமானப் பணியும் நடைபெறாது. அந்த நிலம் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் படி தனியாக வைக்கப்படும். மேலும், அதற்கு செல்லும் வகையில் சாலைக்கான நிலமும் விடப்பட்டுள்ளது என ஓசோன் குழுமம் சார்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
போலீஸில் புகார் 
 
ஓசோன் குழுமத்தின் திட்டத்துக்காக அங்கு தூண்கள் அமைப்பதற்காக எந்திரங்கள் மூலம் துளையிடும் பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் காரணமாக திட்டப் பகுதிக்கு பின்பக்கத்தில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிர்வுகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
 
இங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மத்தியில், இந்த அதிர்வுகள் காரணமாக தங்கள் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் சார்பில் திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. 
 
ஆனால், இந்த புகார் மீது இதுவரை போலீஸôர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஓசோன் குழும திட்டப் பகுதிக்கு பின்புறம் உள்ள பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
மீறப்படும் உறுதி மொழி 
 
அடுத்த சில மாதங்களில், நிறுத்திவைக்கப்பட்ட கட்டட அனுமதியை மீண்டும் பெற்று கட்டுமானப் பணிகளை திட்ட அனுமதியில் எவ்வித திருத்தமும் செய்யாமல் ஓசோன் குழுமம் தொடங்கியது. 
 
இதில் பிரச்னைக்குரிய 1.77 ஏக்கர் நிலம் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தனித்து வைக்கப்படாமல் திட்டப் பகுதியுடன் சேர்த்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
பேரவையில் அமைச்சர் பரிதி இளம்வழுதி அளித்த உறுதிக்கு மாறாக, பிரச்னைக்குரிய நிலத்தில் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருள்களை வைக்கும் கொட்டகைகள், ஊழியர்கள் தங்கும் கொட்டகைகள் ஆகியவற்றை ஓசோன் குழுமம் அமைத்துள்ளது.
 
மேலும், அந்த நிலத்துக்கு செல்வதற்காக  7.2 மீட்டர் அகலபாதைக்கான நிலம் இதுவரை தனியாக ஒதுக்கப்படவோ, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவோ இல்லை எனவும் தெரியவந்துள்ளது. பிரச்னைக்குரிய நிலத்தை தனியாக வைத்து பராமரிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் பொறுப்பை மீண்டும் தட்டிக்கழித்துள்ளனர். 
 
மேலும், அந்த நிலத்துக்குள் சென்று ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைத்துறையினர் உள்ளிட்ட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது ஒரு தரப்பினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் இருப்பதும், பிரச்னைக்குரிய நிலத்தை ஓசோன் குழுமம் தனது தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதும் முரண்பாடாக அமைந்துள்ளது. 
 
பிரச்னைக்குரிய நிலத்தை அது தொடர்பான வழக்கின் எதிர்தரப்பினரின் கட்டுப்பாட்டில் விட்டுவைப்பது எந்த விதத்தில் நியாயமானதாகும்? மேலும், இதில் மனுதாரர் தரப்பான அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்த நிலத்தை பாதுகாத்து வைக்க வேண்டிய இதர துறைகள் எதிர்தரப்புக்கு சாதகமாக செயல்படுவது ஏன்? 
 
கோயில் நிலத்தை அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் அளிக்கப்பட்ட உறுதி என்ன ஆனது என்பதே இந்து சமய அறநிலையத் துறையினரிடம் இப்போது எழுந்துள்ள கேள்வி.