திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கிழக்குக் கடற்கரைச் சாலையில் அரசு மருத்துவமனை எப்போது?

  சென்னையில் இருந்து புதுச்சேரியின் புறநகர் பகுதிகள் வரையிலான

கிழக்குக் கடற்கரை சாலையில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த வழித்தடத்தில் விபத்து சிகிச்சைக்கு என முழுமையான அரசு மருத்துவமனை எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை திருவான்மியூரில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டி சர்வதேச தரத்தில் விரைவு சாலை அமைக்கும் பணிகள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (டி.என்.ஆர்.டி.சி.) மூலம் 1998-ல் தொடங்கின. முதல் கட்டமாக சென்னை முதல் புதுச்சேரியின் புறநகர் பகுதிகள் வரையிலான 113 கிலோ மீட்டர் தொலைவுக்கு சர்வதேச தரத்தில் இருவழி சாலை அமைக்கும் பணிகள் 2001-ம் ஆண்டு முடிக்கப்பட்டன. சுங்க கட்டணம் வசூலிக்க அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் 2002 முதல் செயல்படத் தொடங்கின.

இந்தச் சாலையில் விபத்துகள் ஏற்பட்டால் மருத்துவ உதவி கோர நவீன தகவல் தொடர்பு சாதன வசதிகளும், விபத்துகளைத் தடுக்க மிக அதிக எண்ணிக்கையில் ஒளி பிரதிபலிப்பான்களும் அமைக்கப்பட்டன.

அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆம்புலன்ஸ்களும், தனியான போக்குவரத்து கண்காணிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

விபத்துகள் அதிகரிப்பு: போக்குவரத்து தொடங்கப்பட்டு 10-வது ஆண்டைத் தொடும் நிலையில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. வாகனப் போக்குவரத்து எதிர்பார்த்ததைவிட வெகுவாக அதிகரித்ததே இங்கு விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இரு வழிச்சாலையாக தொடங்கப்பட்ட இந்த சாலை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படாததே விபத்துக்கு முக்கியக் காரணமாக வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீஸôர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர்.

இந்தச் சாலை அமைந்துள்ள பகுதியில் சென்னை முதல் புதுச்சேரி வரை விபத்து கால அவசர சிகிச்சை வசதியுடன் ஒரு அரசு மருத்துவமனை கூட இதுவரை தொடங்கப்படவில்லை.

அரசு மருத்துவமனை வரவில்லையே தவிர பிரபலமான தனியார் மருத்துவமனைகள் புதிது புதிதாகத் தொடங்கப்படுகின்றன. விபத்துக்குள்ளாகும் அனைவரும் தனியார் மருத்துவமனைகளையே நாடுவது சாத்தியமல்ல.

மருத்துவமனை அமைக்கும் திட்டம்: விபத்து நேர்ந்தால் மட்டுமல்லாது இப் பகுதி மக்களின் மருத்துவத் தேவைகளுக்காகவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையையே சார்ந்து இருக்கின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு 2001-ம் ஆண்டு ஈஞ்சம்பாக்கத்தில் சென்னை புறநகர் அரசினர் மருத்துவமனை சிறிய அளவில் தொடங்கப்பட்டது. பகுதி நேர மருத்துவ சேவை அளிக்கும் நிலையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறது.

படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனையாக இம் மருத்துவமனையை தரம் உயர்த்த 2002-ல் தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த டி.ஆர்.பாலு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 50 லட்சத்தை 2 பிரிவுகளாக ஒதுக்கீடு செய்தார்.

அப்போதைய அதிமுக அரசு அளித்த ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக ரூ. 25 லட்சத்தில் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் புறநகர் மருத்துவமனைக்கான புதிய வளாகம் அடுத்த சில ஆண்டுகளிலேயே கட்டப்பட்டது. உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், விபத்துகால அவசர சிகிச்சை ஆகியவற்றுக்கான கூடுதல் அறைகள் தொடர்ந்து கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஈஞ்சம்பாக்கம் உள்ளாட்சி நிர்வாகத்தில் பொறுப்புக்கு வந்தவர்கள் அரசுக்கு நினைவூட்டி திட்டத்தை துரிதப்படுத்தி இருக்க வேண்டும்.

பாதியில் நின்றது ஏன்? உள்ளாட்சி நிலையில் இருந்து வலியுறுத்தல்கள் தொடராத நிலையில் இங்கு முழுமையான அரசு மருத்துவமனை அமைக்கும் திட்டம் முன்னேற்றம் ஏதும் இன்றி பாதியில் நின்றுவிட்டது என்கிறார் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொன்னுவேல் கூறினார்.

இனியாவது இந்த மருத்துவமனையில் விபத்துகால சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுடன் மருத்துவமனையை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக