சனி, 19 மே, 2012

ஆவணங்களை இருட்டடிப்பு செய்ய சி.எம்.டி.ஏ., முயற்சி!

தகவல் அறியும் உரிமை சட்டப்படி, அடிப்படை தகவல்கள் அடங்கிய கையேட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளை, பொது மக்கள் பயன்படுத்த முடியாதபடி, சி.எம்.டி.ஏ., தடை செய்துள்ளது. இதனால், வெளிப்படையான நிர்வாகம் என்பது, இத்துறையில் கேள்விக்குறியாகி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டப்படி, ஒவ்வொரு அரசுத் துறையிலும், அத்துறையின் அடிப்படை பணிகள், அதற்கான நிர்வாக நடைமுறைகள், பொது மக்கள் அணுக வேண்டிய அதிகாரிகள் குறித்த விவரங்கள், பொது தகவல் அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 4(1)ஏ பிரிவின்படி, இத்தகைய விவர கையேட்டை வெளியிடுவது, கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த கையேட்டின் அனைத்து பிரிவுகளும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆவணமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது.
 சி.எம்.டி.ஏ.,வில்... :
 இத்தகைய கையேடுகளை, ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும் என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகதத்தில் உள்ள பெரும்பாலான அரசுத் துறைகள், இத்தகைய கையேடுகளை முறையாக வெளியிடுவதில்லை என, பரவலாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதில், சி.எம்.டி.ஏ., நிர்வாகம், தகவல் அறியும் உரிமை சட்ட கையேட்டை, அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒன்று முதல், 18 பிரிவுகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய ஆவணம், பொது மக்களின்பயன்பாட்டுக்கான ஆவணமாகும்.
ஆனால், இதில், 10, 11 ஆகிய பிரிவுகளை மட்டும், பொது மக்கள் பார்க்க முடியாத வகையில், சி.எம்.டி.ஏ., நிர்வாகம் தடை செய்து வைத்துள்ளது.
ஆர்வலர்கள் அதிர்ச்சி :
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, மாநில தகவல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சி.எம்.டி.ஏ.,வின் இச்செயல்பாடு, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளிப்படை தன்மையை முடக்கும் வகையில், இச்செயல் அமைந்துள்ளது. இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மீது, தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எதில் ஆர்வம்? :
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தற்போது, கலெக்டர் அலுவலக சம்பந்தப்பட்ட புகார்களை அறிய, மக்கள் அதிகளவில்ஆர்வம் காட்டுகின்றனர். மற்ற இலாகாக்கள், அதன் நடைமுறைகள், அதை நிர்வகிக்கும் வழிமுறைகள் குறித்து மக்களுக்கு அதிக அனுபவம் இல்லாததால், அதில் ஆர்வம் காட்டுவதில்லை.ஆனால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைப்பில் உள்ள அதிகார மையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதைப்பற்றிய விவரங்கள், அவர்கள் பணிப்பொறுப்புகள், அவர்கள் செயல்படும் நிர்வாகத் தலைமை குறித்த விவரங்களை மறைக்கும் விதத்தில் செயல்படுவது, எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதே, இப்போதைய கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக