வெள்ளி, 30 ஜூலை, 2010

தனியார் குடியிருப்புகளாக மாறும் அரசு ஒதுக்கீட்டு மனைகள்

  அரசு ஒதுக்கீட்டின்கீழ் பெற்ற மனைகளில் தனியார் குடியிருப்புகள் கட்டுவது பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இது விதிகளுக்கு மாறானது இல்லை என தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.



தனியார் குடியிருப்புகளாகும் அரசு ஒதுக்கீட்டு மனைகள் என்ற தலைப்பில் தினமணியில் திங்கள்கிழமை வெளியான செய்தி தொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அளித்துள்ள விளக்கம்:


வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து ஒதுக்கீடு பெற்ற மனையையோ அல்லது வீட்டையோ, ஒதுக்கீடு பெற்றதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது என்றும், அப்படி விற்பதானால் வீட்டுவசதி வாரியத்திடம்தான் விற்க வேண்டும் என்றும், வீட்டுவசதி வாரிய விதிமுறை முன்பு நடைமுறையில் இருந்தது.÷இந்த விதிமுறை முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், 2003-ம் ஆண்டு அடியோடு நீக்கப்பட்டுவிட்டது.


முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு பெற்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எச்.பி.என். ஷெட்டியின் மகன் தீபக் என பலரும் அந்தந்த மனைகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டியிருப்பதாகத் தெரிகிறது.


இதேபோன்று சைதை துரைசாமி தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுவசதி வாரிய மனையை மேம்படுத்தி வர்த்தக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்.


இவர்களை போலவே, அரசு விருப்ப ஒதுக்கீட்டு முறையில் மனைகள் ஒதுக்கீடு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் அவ்வாறு ஒதுக்கீடு பெற்ற மனைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ, வர்த்தக வளாகங்களாகவோ மேம்படுத்தி பயன் அடைந்து வருகின்றனர். இதில் வீட்டுவசதி வாரியத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை.


சென்னை அண்ணா நகரை சேர்ந்த பர்வின் ஜாபர், நந்தம்பாக்கத்தை சேர்ந்த துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகள் அப்போதைய சந்தை விலைக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.


ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்த மனைகளுக்குரிய தொகையை பல்வேறு தவணைகளில் செலுத்தி சொந்தமாக்கிக் கொண்டு விற்பனைப் பத்திரங்களையும் பெற்றுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து அந்தந்த மனைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக அவர்கள் மேம்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த மாதிரி செய்வது பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருப்பதால், இது எந்த வகையிலும் வீட்டுவசதி வாரியத்தின் விதிகளுக்கு முரண்பாடானது இல்லை என வீட்டுவசதி வாரியம் அந்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக