திங்கள், 20 டிசம்பர், 2010

5 எஸ்பிக்கள், 5 டிஐஜி-க்களுக்கு விரைவில் பதவி உயர்வு

 தமிழக காவல் துறையில் 5 எஸ்.பிக்கள், 5 டி.ஐ.ஜிக்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
 ஐ.ஜி நிலையில் பணியாற்றி வந்த சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர். ஜாங்கிட், சிறைத்துறை ஐஜி ஜே.கே. திரிபாதி, கும்பகோணத்தில் உள்ள மாநில போக்குவரத்து கழக கண்காணிப்பு பணிக்கான ஐ.ஜியான கே. முத்துக்கருப்பன், கரூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கண்காணிப்புக்கான ஐ.ஜியான ஐ. ராஜா, காவல்துறை தலைமையக ஐஜி சி.கே. காந்திராஜன் ஆகியோருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக காவல் துறையில் 5 ஐஜி பதவியிடங்கள் காலியானது.
 
ஐஜி பதவி பெற காத்திருக்கும் டிஐஜிக்கள்: 
 
இவ்வாறு பதவியிடங்கள் காலியாகும்போது, பணி மூப்பு அடிப்படையில் டிஐஜிக்களாக உள்ளவர்களுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம் பதவி உயர்வு வழங்கப்பட்டபோது, 1992-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டது.
 
இதன்படி தற்போது, 1993-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளில் தற்போது டிஐஜிக்களாக உள்ளவர்களுக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதில், சி.பி.ஐ.யில் சென்னை மண்டல டிஐஜியாக உள்ள சு. அருணாச்சலம், மாநகர போலீஸில் மத்திய சென்னை துணை கமிஷனராக உள்ள பி. தாமரைகண்ணன் உள்ளிட்ட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தகுதி பெறுகின்றனர். இவர்களில் அனைவருக்கும் ஐஜி பதவி உயர்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
 
டிஐஜி பதவி பெற காத்திருக்கும் எஸ்பிக்கள்: இவர்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு பெறும் நிலையில், அடுத்து எஸ்பி நிலையில் உள்ளவர்களுக்கு டிஐஜி பதவி வழங்கப்பட வேண்டும். பொதுவாக ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் பணியில் சேரும் அதிகாரிகள் 13 ஆண்டுகள் பணியை பூர்த்தி செய்த பின்னர் டிஐஜிக்களாக பதவி உயர்வு பெற வேண்டும். இதன்படி, ஏற்கெனவே, 13 ஆண்டுகால பணியை பூர்த்தி செய்ததன் அடிப்படையில், 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளான ஏ.ஜி. பொன்மாணிக்கவேல், கே.பி. சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் டிஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டது.
 
இதையடுத்து, 1997-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்து 13 ஆண்டு பணியை பூர்த்தி செய்யும் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜி பதவி உயர்வு பெற தகுதி பெற்றுள்ளனர். இதில் மாநகர போலீஸில் மயிலாப்பூர் துணை கமிஷனராக உள்ள கே. பெரியய்யா, ரயில்வே போலீஸ் எஸ்பியாக உள்ள ஏஜி மெüரியா, மாநகர போலீஸில் நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனராக உள்ள கே.என். சத்தியமூர்த்தி, மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக உள்ள சி. ஸ்ரீதர், சென்னையில் சிபிஐயின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி.யாக உள்ள எஸ். முருகன், புறநகர் போலீஸில் பரங்கிமலை துணை கமிஷனராக உள்ள வி. வரதராஜு, அடையார் துணை கமிஷனராக உள்ள எம்.சி. சாரங்கன் உள்ளிட்ட 14 அதிகாரிகள் தகுதி பெற்றுள்ளனர். 
 
அரசு நடவடிக்கை தொடக்கம்:
 
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு தொடர்பாக தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறு தகுதி பெறும் அனைவருக்கும்  பதவி உயர்வு வழங்க வாய்ப்புகள் உள்ளன. 
 
இருந்தாலும், தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் சிலரை தவிர்த்து மற்றவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கலாம். இருப்பினும், இவர்களில் 5 எஸ்பிக்களும், 5 டிஐஜிக்களும் பதவி உயர்வு பெறுவது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பான நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும், அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெற்று அடுத்த சில மாதங்களில் இந்த பதவி உயர்வு வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக