புதன், 2 பிப்ரவரி, 2011

5 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாத 67 உள்ளாட்சிகள்

  தமிழகத்தில் 8 பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் உள்பட 67 உள்ளாட்சி பதவிகளுக்கு யாரும் போட்டியிடாததால் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை.ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த பகுதிகளில் மற்ற பிரிவினரின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இருந்ததால், அவர்களின் ஆதிக்கம் காரணமாக ஆதிதிராவிடர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டது. அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் தர்மசங்கடம் ஏற்படும் அளவுக்கு இந்த பிரச்னை உருவெடுத்தது. 2006-ம் ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றபோது, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு ஆதிதிராவிடர்கள் தங்களுக்கான பதவியிடங்களுக்கு போட்டியிட்டனர். தேர்தலில் வெற்றியும் பெற்றனர்.இவ்வாறு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நவம்பர் மாதம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சமத்துவப் பெருவிழா என்ற பெயரில் அரசு சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது.இந்த விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டிகள் இனி தமிழகத்தில் உருவாகாது என உறுதிப்பட தெரிவித்தார்.மேலும், இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு, சமத்துவப் பெரியார் என்ற பட்டமும் அளிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்தார்.இதன் பின்னர் இப்போது மீண்டும் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 67 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
 
8 பஞ்சாயத்து தலைவர் பதவிகள்: 
 
இந்த நிலையில், அப்போது, 4 பஞ்சாயத்துகளில் மட்டும் இருந்த நிலை தற்போது 8 பஞ்சாயத்துகளில் நிலவுவது தெரியவந்துள்ளது. அரியலூர் மாவட்டம் டி.பாலூர் ஒன்றியத்தில் நடுவாளூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் கொளப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே புலிப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியத்தில் புதூர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் பேரயாம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ராமாபுரம், வேலூர் மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் செய்யாத்துவண்ணம், விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் கடுகுபட்டு ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் 2006-ம் ஆண்டு முதல் நடைபெறவில்லை.இதில் 4 இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும், 4 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை.
 
52 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகள்: 
 
இதேபோல 52 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் உள்ளன.மாவட்ட வாரியாக தேர்தல் நடைபெறாத பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் விவரம்:அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருச்சி, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பஞ்சாயத்துகளில் உள்ள 52 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை.இதிலும் பெரும்பாலான இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவையாகவே உள்ளன. உள்ளூர் பிரச்னை காரணமாக பொது பிரிவினருக்கான சில வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
 
மேல்விஷாரம்: 
 
வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் மூன்றாம் நிலை நகராட்சியில் 3 வார்டுகளில் யாரும் போட்டியிடாததால், 2006-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறவில்லை. தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் வரதராஜன்பட்டி, கோவை சிறுமுகை, வீரபாண்டி, கன்னியாகுமரி பள்ளபள்ளம் ஆகிய பேரூராட்சிகளில் தலா 1 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடைபெறவில்லை.
 
காரணம் என்ன? 
 
மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையிலேயே உள்ளாட்சி அமைப்புகள் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், பொது பிரிவினர் என ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களுக்கும், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு காரணமாக இத்தகைய சிக்கல் எழுவதாக கூறப்படுகிறது.உதாரணமாக, ஆதிதிராவிடர்கள் எண்ணிக்கையைவிட மற்ற பிரிவினரின் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதி தவறான கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்படுவது போன்ற நிர்வாக முரண்பாடுகளே இந்தப் பிரச்னைக்கு காரணமாக கூறப்படுகிறது.இவ்வாறு தொடர்ந்து தேர்தல்கள் நடைபெறாமல் உள்ளதால், இந்த பகுதிகளில் மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளாட்சி நிர்வாகத்தில் உறுதிச் செய்யப்படாமல் உள்ளது. இதன்காரணமாக இப்பகுதிகளில் வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.எனவே, உண்மை நிலையை ஆராய்ந்து இந்த பகுதிகளில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக