புதன், 19 அக்டோபர், 2011

வணிக மனையில் பங்களா கட்டும் தி.மு.க., நிர்வாகி : சி.எம்.டி.ஏ., மாநகராட்சி மவுனம் கலையுமா?

சென்னை பெசன்ட் நகர், கோஸ்டல் தெருவில், வீட்டுவசதி வாரிய வணிக மனையில், எவ்வித அனுமதியுமின்றி தி.மு.க., நிர்வாகி ஒருவர், ஆடம்பர பங்களா கட்டி வருகிறார். இவ்விஷயத்தில், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருந்து வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், குடியிருப்புகளுக்காக, வீட்டு மனைகளையும், வணிக பயன்பாட்டுக்காக, வணிக மனைகளையும் உருவாக்கி, ஒதுக்கீடு மூலம் விற்பனை செய்து வருகிறது. இதில், குடியிருப்பு மனைகளை வணிக ரீதியாகவும், வணிக மனைகளை, வீடு கட்டுவதற்கும் பயன்படுத்துவது, வாரியத்தின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது. சிலர், வேண்டுமென்றே இவ்விதிகளை மீறி செயல்படுவதையும், முறைகேடுகளில் ஈடுபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்திலும், அதற்கு முன், 1996 - 2001லும், வீட்டு வசதி வாரியத்தில், பல்வேறு முறைகேடுகளில் தி.மு.க.,வினர் ஈடுபட்டது தொடர்பான விவரங்கள், ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இதில், சென்னை பெசன்ட் நகர், கலாஷேத்திரா காலனி, கோஸ்டல் தெருவில், வணிக பயன்பாட்டுக்கான மனையை, தி.மு.க., அமைப்புச் செயலர், பெ.வீ.கல்யாணசுந்தரம், வீடு கட்டுவதற்காக பயன்படுத்துவதாக புகார் வந்தது.

ஆவணங்கள் விவரம்: இதுகுறித்து, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விசாரித்ததில், வீட்டுவசதி வாரிய, பெசன்ட் நகர் கோட்ட பொது தகவல் அதிகாரி அளித்த ஆவணங்களில் உள்ள விவரங்கள்:
சென்னை பெசன்ட் நகர் விரிவாக்கப் பகுதியில், வணிக மனை எண்: 53, பெ.வீ. கல்யாணசுந்தரம் என்பவருக்கு, சமூக சேவகர் என்ற அடிப்படையில், தவணை முறை திட்டத்தின் கீழ், அரசு விருப்புரிமையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அரசாணையை (எண்: 288), வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, 2000ம் ஆண்டு, ஜூலை 13ல் வெளியிட்டது. இதன்படி, எண் 53ல் உள்ள ஒரு கிரவுண்ட், 2,241 சதுரடி பரப்பளவுள்ள வணிக மனை, 27 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் என்ற விலையில், கல்யாணசுந்தரத்துக்கு அளிக்கப்பட்டது. (இவ்விலை எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்பது புதிர்) இதுதொடர்பான ஒதுக்கீட்டு ஆணை, அதே ஆண்டு, அக்டோபர் 30ம் தேதி, வீட்டுவசதி வாரியத்தால் வெளியிடப்பட்டது. இதில், 6 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை முதலிலும், மீதித் தொகையை தவணை முறையிலும் செலுத்தும்படி, கல்யாணசுந்தரம் அறிவுறுத்தப்பட்டார்.
இந்த மனை ஒதுக்கீடு பெறுவதற்கான விண்ணப்பத்தில், தன் ஆண்டு வருமானம், 96 ஆயிரத்து 560 ரூபாய் என கணக்கு காட்டியுள்ள கல்யாணசுந்தரம், மனைக்கான தவணை தொகையாக, மாதம் 38 ஆயிரத்து 810 ரூபாய் வீதம், பத்தாண்டுகளில் செலுத்த ஒப்புக் கொண்டார். ஆனால், 2008, ஆகஸ்ட் மாதத்திலேயே, மொத்தத் தொகையையும் அவர் செலுத்திவிட்டார்.

கட்டுமானப் பணி துவக்கம்: இந்நிலையில், அந்த நிலத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன், குடியிருப்பு வகையில், ஆடம்பர பங்களா கட்டும் பணியை கல்யாணசுந்தரம் துவக்கியிருக்கிறார். வணிக பயன்பாட்டுக்கான நிலத்தில், விதிகளுக்கு மாறாக வீடு கட்டப்பட்டு வருவது, அப்பகுதி மக்கள் மத்தியிலும், வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுவசதி வாரியத்தின் நிலை என்ன? : பெயர் குறிப்பிட விரும்பாத, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர், இதுகுறித்து கூறியதாவது: வணிக பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட மனைகளை, வணிக ரீதியான கட்டடங்கள் கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக தேவை அங்கு இல்லை எனக் கூறி, அதை குடியிருப்புக்காக பயன்படுத்துவதானால், அதற்காக, சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்து, நிலம் உபயோக மாற்றம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு வகை மாற்றம் செய்ய அவர் விண்ணப்பித்தால், அதற்கு, வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் தடையின்மை சான்று கேட்டு பெறப்படும். அதன் பிறகே, அங்கு குடியிருப்பு கட்டுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு, திட்ட அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த குறிப்பிட்ட மனையை, உபயோக மாற்றம் செய்வது தொடர்பாக, தடையின்மை சான்றிதழ் எதுவும் இதுவரை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

சி.எம்.டி.ஏ., நிலை: "வீட்டுவசதி வாரியத்தின், பெசன்ட் நகர் விரிவாக்கத் திட்டத்தில், 53ம் எண் கொண்ட வணிக மனையை, உபயோக மாற்றம் செய்வது தொடர்பாகவோ, அதில், வீடு கட்டும் எந்த திட்டத்துக்கும், இதுவரை உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை. அனுமதி எதுவும் பெறாமல், அங்கு கட்டுமானப் பணி நடப்பது குறித்து, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெயர் குறிப்பிட விரும்பாத, சி.எம்.டி.ஏ.,வின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மவுனம் கலையுமா? : சாதாரண பொது மக்கள், தங்கள் வீடுகளில் கூடுதலாக ஒரு சிறிய அறையோ அல்லது வேறு சிறிய மாற்றமோ செய்தால், எப்படியோ அதுகுறித்து தகவல் அறிந்து, அந்த பகுதியின் கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர், உடனடியாக அந்த வீட்டின் முன் ஆஜராகிவிடுவர். அந்த வீட்டின் உரிமையாளரின், "கவனிப்பு' அடிப்படையில், இவர்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.
ஆனால், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி உயரதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ள பகுதியில், எந்த விதிகளையும் பின்பற்றாமல், ஒரு கட்டடம் கட்டப்படுகிறது. இதைத் தடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள், மவுனமாக இருப்பது ஏனோ?

சமூக சேவகர்? : எதன் அடிப்படையில், சமூக சேவகர் என்ற பிரிவில், கல்யாணசுந்தரத்துக்கு மனை ஒதுக்கப்பட்டது என்பது குறித்து, வீட்டுவசதி வாரியம் அளித்துள்ள ஆவணங்களின் விவரம்: சென்னை கே.கே.நகர் 9வது டொர் சிவிக் எக்ஸ்னோரா, "சமூக சேவகர்' என, அவருக்கு சான்று அளித்துள்ளது. அதில், "எக்ஸ்னோராவின் உறுப்பினராக, 1991ம் ஆண்டு முதல் இருந்துவரும் கல்யாணசுந்தரம், பல்வேறு சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். மரம் நடுதல், போலியோ விழிப்புணர்வு, சிறார் கல்வி, உயர் கல்வி வழிகாட்டியாகவும், இப்பகுதி மக்களுக்கு சட்ட உதவியும் அளித்து வருகிறார்' என, சான்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "கடந்த பத்தாண்டுகளாக, கல்யாணசுந்தரத்தை தெரியும். தனிப்பட்ட முறையில் அவர், நல்ல நடத்தை கொண்டவர்' என, தி.மு.க.,வைச் சேர்ந்த, அப்போதைய வட சென்னை எம்.பி.குப்புசாமி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு, அந்த ஆவணங்களில் உள்ளன.

1 கருத்து:

  1. இந்திய கடல்சார் பல்கலைகழகமும் (Indian Maritime University) மத்திய பொதுப்பணி துறையும் (CPWD) சேர்ந்து செம்மஞ்சேரியில் 300 ஏக்கரில், சட்டவிரோதமாக அனுமதியில்லா கட்டிடங்கள் கட்டுகின்றன. இப்பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி, சி.எம்.டி.எ. (CMDA) திட்ட மற்றும் வரைப்பட அனுமதி, என எந்த அனுமதிகளும் பெறாமல் இப்பணிகள் நடக்கின்றன. புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்தின் ஆணையாளர் (Commissioner, St. Thomas Mount Panchayat Union), அவர்கள் கொடுத்த சி.எம்.டி.எ. (CMDA) வளர்ச்சி விதிமுறைகளின்படியான வேலை நிறுத்த கூறும் அறிவிப்பை (Stop Work Notice) மீறி, அதனை பொருட்படுத்தாமல் இப்பணிகள் செய்யபடுகின்றன. அரசும் அதை சார்ந்த அமைப்புகளே இவ்வாறு சட்டத்தை மீறுகின்றன.

    பதிலளிநீக்கு