வெள்ளி, 30 டிசம்பர், 2011

திருமழிசை துணை நகரம்: நிலம் தந்தால் வீட்டுமனை, அரசு வேலை

சென்னையை அடுத்த திருமழிசையில் துணை நகரம் திட்டத்துக்கு நில உரிமையாளர்களிடம் எதிர்ப்பை குறைக்கும் வகையில்; நிலம் தருபவர்களுக்கு வீட்டுமனை, அரசு வேலை அளிக்க, வீட்டு வசதி வாரியம் நான்கு அம்ச திட்டத்தை உருவாக்கி, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளது.

திருமழிசை அருகே வீட்டு வசதி வாரியம் மூலம் 311.05 ஏக்கரில், 2,160 கோடி ரூபாயில் துணை நகரம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, அங்குள்ள செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், வெள்ளவேடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். தற்போது, உத்தேசிக்கப்பட்டுள்ள 311 ஏக்கர் நிலத்தில், 30 சதவீத நிலங்கள் மட்டுமே வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மீதி நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நில உரிமையாளர்கள், இந்த தொகையை வாங்காமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், திட்டத்தை நிறைவேற்ற, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனத்துடன் இணைந்து வீட்டு வசதி வாரியம் கோரியுள்ளது.

டெண்டரிலும் தாமதம்: கடந்த நவம்பர் 6ம் தேதி வெளியிடப்பட்ட இந்த டெண்டர், டிசம்பர் 15ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்டபடி 15ம் தேதி டெண்டர் திறக்கப்படவில்லை. இதையடுத்து, டெண்டர் திறப்பு ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நிலப் பிரச்னை காரணமாக குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்கள் இதற்கான டெண்டரில் பங்கேற்க நிறுவனங்கள் தயக்கம் தெரிவித்திருப்பதே தேதி மாற்றத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

புதிய திட்டம்: எனவே, நிலப் பிரச்னையைத் தீர்க்க புதிய திட்டத்தை, வீட்டு வசதித் துறை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். இதன்படி, புதிதாக உருவாக்கப்படும் துணை நகரத்தில் நிலம் தருபவர்களுக்கு அவரவரிடம் பெறப்படும் நிலத்தின் அளவுக்கு ஏற்ப 2,400 சதுர அடி, 1,200 சதுர அடி, 800 சதுர அடி ஆகிய அளவுகளில் வீட்டுமனைகள் வழங்கப்படும். மேலும் நிலம் வழங்குவோர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவரவர் கல்வித்தகுதி அடிப்படையில் வீட்டு வசதி வாரியத்தில் பணி நியமனம் வழங்கப்படும். ""அரசின் ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து இத்திட்டம் குறித்து செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், வெள்ளவேடு கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,'' என பெயர் குறிப்பிட விரும்பாத வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

யாருக்கு எவ்வளவு மனை? திருமழிசை துணை நகரம் திட்டத்துக்காக வீட்டு வசதித்துறை உருவாக்கியுள்ள நான்கு அம்ச திட்டத்தின் விவரம்
*மூன்று முதல் ஐந்து ஏக்கர் வரை நிலம் தருபவர்களுக்கு 2,400 சதுர அடி மனை.
* ஒன்று முதல் 2.99 ஏக்கர் வரை நிலம் தருபவர்களுக்கு 1,200 சதுர அடி மனை.
* 10,890 சதுர அடி (25 சென்ட்) முதல் 43,124 சதுர அடி (99சென்ட்) வரை நிலம் தருபவர்களுக்கு 800 சதுர அடி மனை.
* இந்த நிலங்களுக்கு அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக