புதன், 25 ஜனவரி, 2012

நடத்தை விதிமீறல்: ஸ்ரீபதி மீதான புகார் குறித்து ஆய்வு துவக்கம்: நெற்குன்றம் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றதால் சிக்கல்

நடத்தை விதிகளுக்கு மாறாக வீடு ஒதுக்கீடு பெற்றது தொடர்பாக, தமிழக தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதி மீது அளிக்கப்பட்ட புகார்கள் குறித்த முதல்கட்ட ஆய்வை, தமிழக கவர்னர் அலுவலக அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.

வீடு ஒதுக்கீடு:அரசு ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்ட நெற்குன்றம் வீட்டுவசதி திட்டத்தில், ஐ.ஏ.எஸ்., போன்ற பதவியில் உள்ளவர்களுக்கு வீடு ஒதுக்க, 2011 ஏப்ரல் மாதம் குலுக்கல் நடந்தது.இதுகுறித்து, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அளித்துள்ள பதிலில், "ஸ்ரீபதிக்கு, "எச்' பிளாக்கில் 16 (ஏ) அடுக்கில், முதலாவது வீடு ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்காக, டோக்கன் எண் மூன்று ஒதுக்கப் பட்டுள்ளது,' என, குறிப்பிடப் பட்டுள்ளது.

கவர்னரிடம் புகார்:இதுதொடர்பாக, செல்வராஜ், சங்கர் ஆகியோர், தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு, கடந்த வாரம், தனித்தனியாக புகார் மனுக்களை அனுப்பினர்:
தலைமைச் செயலர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீபதி, தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தன் தகுதி குறித்த தவறான தகவல்களை அளித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான பிரிவில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளார்.
இது, தகவல் பெறும் உரிமை சட்டத்தின், 17வது பிரிவில் குறிப்பிடப் பட்டுள்ள, மாநில தலைமை தகவல் ஆணையருக்கான நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, தலைமை தகவல் ஆணையர் பதவியில் இருந்து ஸ்ரீபதியை நீக்கம் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகார்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பதவியில் நீடிக்க எதிர்ப்பு:இதுகுறித்து, பொள்ளாச்சியை சேர்ந்த, தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர், பாஸ்கரன் மற்றும் மதுரையை சேர்ந்த ஆர்வலர், சம்பத் ஆகியோர் கூறியதாவது:அரசு அலுவலகங்களில் தகவல் கிடைக்காத பொதுமக்கள், அரசு நிர்வாகத்துக்கு எதிராக அளிக்கும் மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் நிலையில் உள்ள அதிகாரியான ஸ்ரீபதி, அரசிடம் இருந்து வீடு ஒதுக்கீடு பெறுவது, முற்றிலும் நியாயமற்றது. தகவல் பெறும் உரிமை சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள நடத்தை விதிகளுக்கு எதிரானது. அவர் மீது, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

"இது பழய செய்தி':இதுகுறித்து, தமிழக தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதியிடம் கருத்து கேட்டபோது, "நெற்குன்றம் வீட்டுவசதி வாரிய திட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றது பழைய செய்தி. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 17வது பிரிவுக்கு எப்படி எதிரானதாகும்? இப்படிப்பட்ட புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு என்ன செய்வது?' என்றார்.ஆய்வு துவக்கம்:ஸ்ரீபதி மீதான புகார்கள் குறித்து, கவர்னர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:இந்த புகார்களில் குறிப்பிடப் பட்டுள்ள விவரங்களின் உண்மைத் தன்மை குறித்து அறிவதற்கான முதல்கட்ட ஆய்வு துவங்கப் பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற புகார்கள் வரும்போது, அதன் உண்மை தன்மை, முதலில் ஆய்வு செய்யப்படும். அதன்பின், இதுதொடர்பாக, சட்ட வல்லுனர்களின் கருத்து கேட்கப்படும். அதன் அடிப்படையிலேயே, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடத்தை விதி என்ன?தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இயல் நான்கு, பிரிவு 17ல், மாநில தலைமை தகவல் ஆணையருக்கான நடத்தை விதிகள் விரிவாக நீக்கம் செய்ய, பல்வேறு காரணங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

இதன் உட்பிரிவு நான்கில் குறிப்பிட்டுள்ள விதிமுறை விவரம்:* மாநில தகவல் ஆணையர், இந்திய அரசில் அல்லது அதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், உடன்படிக்கையில், எந்த வழியிலேனும் தொடர்புள்ளவராக அல்லது கூட்டுருவாக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் உறுப்பினராகவும், உறுப்பினர் அல்லாமலும், அதிலிருந்து எழும் பயன், ஆதாயம் எதிலும் பங்கு பெற்றவராக இருப்பின், இச்சட்டத்தின் உட்பிரிவு ஒன்றின்படி, தவறான நடத்தைக் குற்றம் புரிந்தவராக அவர் கருதப்படுவார்.
* தவறான நடத்தை உறுதி செய்யப்படும் நிலையில், தலைமை தகவல் ஆணையரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக, கவர்னர், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை கேட்டு, நடவடிக்கை எடுக்கலாம்.
* சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை பெறுவதற்கான இடைப்பட்ட காலத்தில், தலைமை தகவல் ஆணையரை, தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்; ஆணையத்திற்கு அவர் வருவதை, தடை செய்யலாம்.
* இதே பிரிவில், உட்பிரிவு மூன்று (உ)ன் படி, மாநிலத் தலைமை தகவல் ஆணையர், தன் பணிகளில் குந்தகம் விளைவிக்கும் வகையில், நிதி அல்லது பிற நலனை அடைந்திருப்பின், அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக