திங்கள், 4 ஜூன், 2012

தி.நகர் கடைகளுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைக்குமா?

விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால், சீல் வைக்கப்பட்ட தி. நகர் கடைகளை திறந்திருப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பதா என்பது குறித்து, ஐகோர்ட் இன்று முடிவு செய்கிறது.
சென்னை தி. நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, 25 வணிக வளாகங்களுக்கு சி.எம்.டி.ஏ., மாநகராட்சி அதிகாரிகள் கடந்த அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து வியாபாரிகள் தொடுத்த வழக்கில், சீல் வைக்கப்பட்ட கடைகளை ஆறு வாரத்துக்கு திறக்க அனுமதித்து, கடந்த ஜனவரி 9ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதில் இறுதி முடிவை, சென்னை ஐகோர்ட் எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த, சென்னை ஐகோர்ட், சீல் வைக்கப்பட்ட கடைகள் திறந்திருப்பதற்கான கால அவகாசத்தை முதலில் எட்டு வாரங்களுக்கு நீட்டித்தது.
அரசு பதில் மனு
நீதிபதி மோகன் குழு பரிந்துரைகள் அமலாக்குவது குறித்து முடிவெடுக்க, மேலும் கால அவகாசம் வேண்டும் என கோரியதன் அடிப்படையில் இவ்வழக்கு, ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அது வரை, சீல் வைக்கப்பட்ட தி. நகர் கடைகள் திறந்திருப்பதற்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறைபடுத்தும் வகையில், நகரமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்து, 113 சி என்ற புதிய பிரிவை சேர்க்க இருப்பதாகவும்,
சட்டசபையின் அடுத்த கூட்டத் தொடரின் போதுதான் இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
அதற்காக இன்னும் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என குறிப் பிடப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்படுமா?
இதையடுத்து, இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசின் பதில் மனு அடிப்படையில், நீதிபதி மோகன் குழு பரிந்துரைகளை அமலாக்கும் வகையில், கூடுதல் கால அவகாசம் அளிப்பதா என்பது குறித்து கோர்ட் முடிவு செய்யும். அதுவரை, தி.நகர் கடைகள் திறத்திருக்க அனுமதிப்பதா என்பதும் அப்போதுதான் தெரியவரும்.
சி.எம்.டி.ஏ., நிலை என்ன?
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத, சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த வழக்கில் அரசு, தனது தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களின் மொத்த எண்ணிக்கை குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சி.எம்.டி.ஏ., பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், இதற்கான பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றும், 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், இப்போது வரை விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய பதில் மனுவை தாக்கல் செய்ய சி.எம்.டி.ஏ., தயாராகி வருகிறது.
இதனால், விதிமுறைகளை மீறி
கட்டப்பட்ட தி.நகர் கடைகள் நாளைமுதல் திறந்திருக்குமா என்பது, ஐகோர்ட்டின் இன்றைய முடிவை பொறுத்தே அமையும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக