செவ்வாய், 21 செப்டம்பர், 2010

ஏடிஜிபி பதவி உயர்வு தாற்காலிகமாக ஒத்திவைப்பு?

தமிழக காவல் துறையில் ஐஜி நிலையில் உள்ள 2 மூத்த அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பதவி உயர்வு வழங்குவது தொடர்பான நடைமுறைகள் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காவல் துறையில் ஏஎஸ்பிக்களாக பணியைத் தொடங்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் படிப்படியாக எஸ்.பி., டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என பதவி உயர்வு பெறுகின்றனர். 

தமிழக காவல் துறையில் 1976-ம் ஆண்டு பிரிவில் ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியில் சேர்ந்தவர்களில் லத்திகா சரண், பாலச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கடந்த ஆண்டு டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றனர். 

இதில் வயது மூப்பு காரணமாக பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதை அடுத்து, 1976-ம் ஆண்டு பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாகச் சேர்ந்து பொருளாதார குற்றப் பிரிவில் ஏடிஜிபியாக இருந்த திலகவதி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இவர் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திலகவதி பதவி உயர்வு பெற்றதை அடுத்து ஒரு ஏடிஜிபி பதவியிடம் காலியானது. இந்த நிலையில் 1978-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஏடிஜிபி அமித் வர்மா மாரடைப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

2 பேருக்கு ஏடிஜிபி வாய்ப்பு:

இதையடுத்து காலியாக உள்ள ஏடிஜிபி பதவியிடங்களின் எண்ணிக்கை 2 -ஆக அதிகரித்தது. காவல் துறை நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் தற்போது ஐஜிக்களாக உள்ளவர்களில் பதவி மற்றும் வயது மூப்பு அடிப்படையில் 2 அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பதவி வழங்க வேண்டும்.


டிஜிபி பதவியில் இருந்த ஒருவர் ஓய்வு பெற்றவுடன் ஏடிஜிபி நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் நிலையில் இருந்த திலகவதிக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இதேபோல, 2 ஏடிஜிபி பதவியிடங்கள் காலியானதை அடுத்து ஐஜி நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் 2 இடங்களில் உள்ளவர்களுக்கு ஏடிஜிபி பதவி வழங்க வேண்டும்.

இதன்படி, 1985-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்களான புறநகர் போலீஸ் கமிஷனராக உள்ள எஸ்.ஆர். ஜாங்கிட், சிறைத்துறை தலைவராக உள்ள ஜே.கே. திரிபாதி ஆகியோருக்கு ஏடிஜிபி பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால், இதற்கான வரிசைப்பட்டியல் அடங்கிய கோப்புகள் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனைக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், பதவி உயர்வு விவகாரத்தில் எவ்வித இறுதி முடிவையும் எடுக்காமல் இருந்தது.

இந்த நிலையில் பதவி மூப்பு அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ளவர்களை மட்டும் உடனடியாக ஏடிஜிபிக்களாக ஆக்குவதைவிட, மேலும் சிலரைச் சேர்த்து 4 அல்லது 5 பேருக்கு ஏடிஜிபி பதவி உயர்வு வழங்குவது குறித்து அரசு தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பரிசீலிக்க குழு அமைப்பு:

இவ்வாறு கூடுதல் நபர்களுக்கு ஏடிஜிபி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றால் அதற்காக உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்த குழுவின் பரிந்துரைகள் அடிப்படையிலேயே அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்களில் துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத, பெரிய அளவில் ஊழல் புகாருக்கு ஆளாகாத அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள். 

இவ்வாறு குழு அமைக்கப்படும் நிலையில், 1985-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்கள் எஸ்.ஆர். ஜாங்கிட், ஜே.கே. திரிபாதி, டாக்டர் சி.கே. காந்திராஜன், 1986-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்களில் தற்போது உளவுத்துறை ஐஜியாக உள்ள ஜாபர்சேட், சஞ்சீவ்குமார் ஆகியோரது பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என காவல்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, நிர்வாக நடைமுறைகளின்படி இவ்வாறு குழு அமைக்கும் நடவடிக்கைகள் ஜனவரியில் தான் மேற்கொள்ளப்படும் என்பதால் தற்போது காலியாக உள்ள 2 ஏடிஜிபி பதவிகளுக்காக ஐஜிக்களுக்கு பதவி உயர்வு ஜனவரியில்தான் அறிவிக்கப்படும் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

3 ஆண்டுகளாக இடமாற்றம் செய்யப்படாதவர்கள்... 

மேலும், அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் இருக்கும் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

இதன்படி இடமாற்றம் செய்யப்பட வேண்டிய அதிகாரிகள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளும் ஜனவரியில் மேற்கொள்ளப்படும். எனவே முக்கிய அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் அளிப்பது ஒரே சமயத்தில் மேற்கொள்ளலாம் என அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக