சனி, 26 செப்டம்பர், 2009

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்துக்காக சென்னை பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

மத்திய அரசு தமிழைச் செம்மொழியாக 2004 செப்டம்பர் 17-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, தமிழில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் மூலம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008 மே 19-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.


சென்னை காமராஜர் சாலையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாலாறு இல்லத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. மைசூரில் உள்ள இந்திய
செம்மொழிகள் நடுவண் நிறுவனத்தின் ஒரு திட்டமாக இருந்த செம்மொழித் தமிழாய்வுத் திட்டம் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக 21-1-2009-ல் பதிவு செய்யப்பட்டது.



முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் தமிழறிஞர்கள் அடங்கிய ஐம்பெருங்குழு, கவிஞர்கள் அடங்கிய எண்பேராயம் ஆகிய குழுக்களின் வழிகாட்டுதல்கள்படி இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.



தமிழில் செவ்வியல் காலம் எனப்படும் கி.பி. 6-ம் நூற்றாண்டு வரையிலான அனைத்து ஓலைச்சுவடிகளையும் இந்த நிறுவனம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், பல்வேறு ஆய்வுகளையும் தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மூலம் மேற்கொண்டுள்ளது.



தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் ஆகியவை தொடர்பாக 41 பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புகளை வெளியிடும் பணிகளை இந்த ஆய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது.



புதிய வளாகம்: பாலாறு இல்ல வளாகத்தில் உள்ள இந்த அலுவலகம் நிர்வாகப் பணிகளுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. நிறுவனத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற ஆய்வு மற்றும் நூலகப் பிரிவுகள் அமைக்க இந்த வளாகம் போதுமானதாக இல்லை.



எனவே இந்த நிறுவனத்துக்கு வேறு ஒரு வளாகம் அமைக்க நிலம் தேவை என்ற கருத்து அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.



இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்க மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.



இந்த நிலத்தில் புதிய ஆய்வு மற்றும் நூலக வளாக கட்டுமானப் பணிகளுக்கு ரூ.9 கோடியும், பிற செலவுகளுக்காக ரூ.3 கோடியும் என மொத்தம் ரூ. 12 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என இதன் பொறுப்பு அலுவலர் க. இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக