புதன், 2 செப்டம்பர், 2009

அதிக கேள்விகள் கேட்கக் கூடாது: தகவல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு?

கவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மேல்முறையீட்டு மனுக்களை, அதிக எண்ணிக்கையில் கேள்விகள் இருப்பதாகக் கூறி மாநில தகவல் ஆணையம் தள்ளுபடி செய்து வருகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படாத விதத்தில் தகவல் ஆணையம் தங்கள் மனுக்களை தள்ளுபடி செய்வது அதிர்ச்சி அளிப்பதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை அந்தந்த அரசு அலுவலகங்களில் உள்ள பொது தகவல் அதிகாரிகளை தொடர்புக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.


ஆனால், கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையில் கேள்விகள் இருப்பதாகக் கூறி ஏராளமான மனுக்களை மாநில தகவல் ஆணையம் நிராகரித்து வருவதாக தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

குறிப்பாக, தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அளித்துள்ள சொத்து விவரங்கள் குறித்து தகவல் அளிக்குமாறு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் தலைமைச் செயலரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவுக்கு தலைமைச் செயலரின் அலுவலகத்தில் இருந்து பதில் கிடைக்காத நிலையில் மாநில தகவல் ஆணையத்தில் 2-வது மேல்முறையீட்டு மனுவை கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

மனுவில் அதிக எண்ணிக்கையில் கேள்விகள் இருப்பதாகவும் தேவையான தகவலை மட்டும் கேளுங்கள் என்றுக் கூறி மாநில தகவல் ஆணையம் இந்த மனுவை நிராகரித்துள்ளது.

இந்த மனு மட்டுமல்ல, இதேபோல ஏராளமான மனுக்கள் கடந்த சில மாதங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளுக்கு உரிய பதிலை பொது தகவல் அதிகாரிகள் அளிக்க வேண்டும்.

ஒரு வேளை மனுதாரர் கேட்கும் வடிவத்தில் அவருக்கு பதில் அளிப்பதில் நடைமுறை பிரச்னைகள் இருந்தால் அந்த குறிப்பிட்ட கேள்வியை மட்டும் நிராகரிக்க தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 7(9) பிரிவில் வழிவகை உள்ளது.

ஆனால், பொது தகவல் அதிகாரியும், மேல்முறையீட்டை விசாரிக்கும் அதிகாரியும் நிராகரிக்காத நிலையில் 2-வது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் மாநில தகவல் ஆணையர்கள் நிராகரிப்பது எந்த விதத்தில் நியாயம் என மனுதாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எந்த பிரிவிலும் இல்லாத வகையில் தங்கள் மனுக்களை தகவல் ஆணையம் நிராகரித்து வருவது சட்டத்துக்கு எதிரானது என்றும் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக