சனி, 12 செப்டம்பர், 2009

ஒற்றை இலக்கத்தில் நன்னடத்தை கைதிகள் எண்ணிக்கை

சிறையில், தொடர்ந்து 7 ஆண்டுகளைக் கழித்த ஆயுள் தண்டனை கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான தகுதியானவர்களின் எண்ணிக்கை தற்போது ஒற்றை இலக்கமாகக் குறைந்துள்ளது.


இதே அடிப்படையில் கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு 1,405 பேர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சிறையில் 10 ஆண்டுகளை கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் அவர்களது நன்னடத்தை காரணமாக, அண்ணா பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய தினங்களின்போது விடுதலை செய்யப்படுவது வழக்கம்.


அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி, இதில் 10 ஆண்டுகள் என்று இருந்ததை 7 ஆண்டுகளாகக் குறைத்து தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு 1,405 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருந்த லீலாவதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கருமலையான், முத்துராமலிங்கம், முருகன், நல்லமுத்து, சொங்கன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.


இவர்களில் ஒரு சிலர் திமுக உள்ளூர் நிர்வாகிகள் என்பதாலேயே ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்வதற்கான கால அளவு 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது.


இவ்வாறு தண்டனைக் காலத்தை குறைத்து ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


இந்த நிலையில், வரும் 15-ம் தேதி அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு எத்தனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.


முன்விடுதலை செய்வதற்கான கால அவகாசம் 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதால் கடந்த ஆண்டு விடுதலை ஆக அதிக எண்ணிக்கையிலான கைதிகள் தகுதி பெற்றனர்.


ஆனால், இப்போதைய நிலையில் இவ்வாறு விடுதலை செய்வதற்கான தகுதியுடைய கைதிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது என சிறைத்துறை தலைமை இயக்குநர் ஏடிஜிபி ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.


எனினும், தகுதியுடைய கைதிகளின் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.


கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி, கைதிகள் முன் விடுதலைக் காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக குறைத்தது போன்று இப்போது, ஆயுள் தண்டனைக் கைதிகள் மட்டுமல்லாது மற்ற வழக்குகளில் கைதாகி 7 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுவரை, குறிப்பிட்ட சில இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சிறைப்பட்டோர் உரிமைக்கான தன்னார்வ அமைப்பு மட்டுமே கைதிகள் விடுதலை குறித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்போது தமிழக பாஜக தரப்பில் இருந்தும் இது தொடர்பான கோரிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக எவ்வித முடிவையும் எடுக்க மாநில அரசுகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தி நன்னடத்தை உள்ள கைதிகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.


இத்தகைய நிலையில் கைதிகள் முன் விடுதலை குறித்து அரசு எவ்வித முடிவை எடுக்கும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக