வியாழன், 17 செப்டம்பர், 2009

தமிழகத்தில் புதிய "பாப்பாபட்டிகள்'!

மிழகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் யாரும் போட்டியிடாததால் 10 பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளுக்கு 2006-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறவில்லை.


59 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், மூன்றாம் நிலை நகராட்சியில் 3 வார்டு உறுப்பினர்கள், 5 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களிலும் தேர்தல் நடைபெறவில்லை.

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தன.


ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிவிக்கப்பட்டும், பிற சாதியினரின் ஆதிக்கம் காரணமாக எழுந்த பிரச்னைகளால் ஆதிதிராவிடர் பிரிவு மக்கள் போட்டியிடாமல் இருந்ததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.


2006-ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதற்கு சுமூகத்தீர்வு காணப்பட்டது. தேர்தல் நடைபெற்று ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அரசின் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.


மீண்டும் மீண்டும்...:

ஆனால், பாப்பாபட்டி உள்ளிட்ட 4 பஞ்சாயத்துக்களில் தீர்ந்த பிரச்னை மற்ற இடங்களில் தொடர்வது இப்போது தெரிய வந்துள்ளது.


அரியலூர் மாவட்டம் டி.பாலூர் ஒன்றியத்தில் நடுவாளூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் கொளப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே புலிப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியத்தில் புதூர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் பேரயாம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ராமாபுரம், வேலூர் மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் செய்யாத்துவண்ணம், விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் அத்தியுர்திருக்கை, வல்லம் ஒன்றியத்தில் கடுகுபட்டு ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் 2006-ம் ஆண்டு முதல் நடைபெறவில்லை.


இதில் நடுவாளூர், கொளப்பாக்கம், புதூர், கடுகுப்பட்டு ஆகியவை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டவை. புலிப்பாக்கம், பேரயாம்பட்டு, ராமாபுரம், செய்யாத்துவண்ணம், அத்தியுர்திருக்கை ஆகியவை பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டவை.

பொதுப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் கொப்பனாப்பட்டி பஞ்சாயத்தில் 2008- செப்டம்பர் முதல் தேர்தல் நடைபெறவில்லை.


59 பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிடங்கள்:

இதேபோல 59 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் உள்ளன.


மாவட்ட வாரியாக தேர்தல் நடைபெறாத பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் விவரம்:


அரியலூர்: 3 (எஸ்.சி. 1, பொது-2), கடலூர்: 5 (எஸ்.சி.), காஞ்சிபுரம்: 7 (எஸ்.டி. 1, பொது 4, பெண்கள் 2), கிருஷ்ணகிரி: 1, மதுரை: 2, புதுக்கோட்டை: 9 (பொது 5, பெண்கள் 3, எஸ்.சி. 1), ராமநாதபுரம்: 1, திருவண்ணாமலை: 11 (பொது 4, எஸ்.சி. 4, எஸ்.டி. 2, பெண்கள் 1), திருச்சி: 1 (எஸ்.டி.), திருவள்ளூர்: 1 (எஸ்.டி.), தூத்துக்குடி: 1 (எஸ்.சி.), வேலூர்: 8 (எஸ்.டி), விழுப்புரம்: 9 (பொது 3, பெண்கள் 1, எஸ்.சி. 3, எஸ்.டி. 2).


நகர்ப்புற உள்ளாட்சிகளில்...: வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் மூன்றாம் நிலை நகராட்சியில் 3 வார்டுகளில் யாரும் போட்டியிடாததால், 2006-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறவில்லை. தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப் பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருவதாக மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


அரியலூர் மாவட்டம் வரதராஜன்பட்டி, கோவை மாவட்டம் சிறுமுகை, வீரபாண்டி, கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளம், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் யாரும் போட்டியிடாததால் 2006-ம் ஆண்டு அக்டோபர் முதல் தேர்தல் நடைபெறவில்லை.


மாநிலத் தேர்தல் ஆணையர் பதில்:

இது குறித்து கேட்டபோது தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் கூறியது:


சாதிப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு நடைபெறும் பகுதிகளில் அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்ளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக