சனி, 12 செப்டம்பர், 2009

காப்பீடு திட்டத்தால் வருவாய்த்துறை பணிகள் முடக்கம்?

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் காரணமாக சென்னையில் சில வட்டாட்சியர் அலுவலகங்களில் வழக்கமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கப்பட்டது.


இந்தத் திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 26 தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன் பெறலாம்.


மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள அனைத்து குடும்பங்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள்.
இதில் உறுப்பினர்களாக சேர்வதன் மூலம் ஒரு குடும்பம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் வரை இலவசமாக உயிர் காக்கும் உயர் சிகிச்சையை பெறலாம்.



அடையாள அட்டைகள்...

இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களைக் கண்டறிந்து சிறப்பு அடையாள அட்டை வழங்க 750 குழுக்களை காப்பீட்டு நிறுவனம் அமைத்துள்ளதாகவும், இந்தக் குழுக்கள் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்குச் சென்று உறுப்பினர்களைக் கண்டறிந்து, சிறப்பு அடையாள அட்டையை வழங்கும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.


வருவாய்த்துறை ஊழியர்கள்:

ஆனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள குடும்பத்தினரைக் கண்டுபிடித்து காப்பீடு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் பொறுப்பு வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


சென்னை மாவட்டத்தில் முதல்கட்டமாக மயிலாப்பூர்- திருவல்லிக்கேணி தாலுகாவில் காப்பீடு திட்ட பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு புகைப்படம் மற்றும் கைரேகை அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் கடந்த 22-ம் தேதி தொடங்கப்பட்டன.


வழக்கமான பணிகள் பாதிப்பு:

வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் காப்பீடு திட்டம் தொடர்பான பணிகள் காரணமாக கணக்கெடுப்பு செய்ய வெளியில் சென்று விடுகின்றனர்.


இதன் காரணமாக பட்டா பெறுவது, பட்டா பதிவில் பெயர் மாற்றம் செய்வது, சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


சென்னையில் உள்ள 5 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இதே நிலை தொடர்வதாக அங்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பொது மக்கள் பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.


காப்பீடு திட்ட பணிகள் காரணமாக ஊழியர்கள் வெளியில் சென்றுள்ளனர். வழக்கமான பணிகள் நிமித்தம் வருவோர் அடுத்த வாரம் வரலாம் என மாம்பலம்- கிண்டி தாலுகா அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்படுவதாக அங்கு சென்று வந்தவர்கள் தெரிவித்தனர்.


தேர்தல், வெள்ள நிவாரணம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடர்ந்து இப்போது காப்பீடு திட்டப் பணிகளும் வருவாய்த் துறையினரின் வழக்கமான பணிகளை முடக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக