ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

ஜரிகை எரிப்புப் புகையால் தி. நகரில் சுற்றுச்சூழல் பாதிப்பு: மாசுகட்டுப்பாடு வாரியம் பாராமுகம் ஏன்?

சென்னை தியாகராய நகரில் ஜரிகைகளை எரிக்கும் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் புகையால் துரைசாமி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.


தியாகராய நகரில் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பெரும்பாலானவற்றில் பழைய பட்டுச் சேலைகளை வாங்கிக் கொண்டு புதிய சேலைகளை தள்ளுபடி விலையில் அளிக்கும் திட்டம் உள்ளது.


இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் பழைய பட்டுச் சேலைகளில் இருக்கும் ஜரிகைகளை வாங்கி அவற்றை எரித்து, இதில் இருந்து செம்பு, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை பிரித்தெடுக்கும் பணியை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.


இத்தகைய பணிகளை செய்வது தொழில் ரீதியான செயல்பாடு. இவை தொழிற்சாலைகள் உள்ள பகுதியில் மட்டும் நடைபெறவேண்டும். அதுவும் மாசுக்கட்டுப்பாடு வாரித்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் இருக்க வேண்டும்.


ஆனால், தியாகராய நகரில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் வணிகப் பகுதிகளுக்கு அருகில் சிலர் உரிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஜரிகை எரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


இதனால், துர்நாற்றத்துடன் வெளியாகும் புகையால் அருகில் உள்ள வணிகப் பகுதிகளில் வந்து செல்வோரும், அங்கு பணி புரிவோரும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக துரைசாமி சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் ஜரிகை எரிப்புப் பணியால் வெளியாகும் புகையால் இந்த சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் பகல் நேரங்களில் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


இவ்வாறு வெளியாகும் புகையால் இப் பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு வந்து செல்வோரும், பணி புரிவோருக்கு உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாய சூழல் நிலவுவதாக இங்குள்ள கூட்டுறவு வங்கி ஒன்றின் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

மாநகராட்சி நிர்வாகமும், மாசுகட்டுபாடு வாரிய அதிகாரிகளும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதிக்கு வந்து செல்லும் மக்களின் கோரிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக