வியாழன், 13 ஆகஸ்ட், 2009

நாட்டிலேயே முதல் முறையாக மாநில தகவல் ஆணையத்தில் சமூக ஆர்வலர்கள் ஆய்வு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் விளைவாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் சமூக ஆர்வலர்கள் 3 பேர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.
மாநில தகவல் ஆணையத்தை பொது மக்கள் சார்பில் சமூக ஆர்வலர்கள் சிலர் ஆய்வு செய்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.



அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை 2005-ம் ஆண்டு மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பல்வேறு நடைமுறைகள் குறித்த விவரங்களை எழுத்துமூலமாக கேட்டறிய மக்களுக்கு உரிமை கிடைத்துள்ளது.


இந்த சட்டத்தின்படி தகவலை கேட்டு பெறுவது மட்டுமல்லாது அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், முக்கிய கோப்புகள், ஆவணங்களை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் இருந்து விளக்கம் பெறுவதுடன் அல்லாமல் தங்களுக்குத் தேவைப்படும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை பெறுவதற்கும் மக்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த 3 ஆண்டுகளில் ஒரு சில அரசு அலுவலகங்களில் மட்டுமே அதுவும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோப்புகளை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.


சமூக ஆர்வலர்கள்:

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மனித உரிமைகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் நா. மதியழகன், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி. ரமேஷ் ஆகியோர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அமலாக்கும் அதிகார அமைப்பான தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய அலுவலகத்தை ஆய்வு செய்ய மனு செய்திருந்தனர்.

முதலில் தயங்கி தாமதம் செய்த தகவல் ஆணையம் இவர்களின் பகீரத முயற்சிக்குப் பின் அண்மையில் இதற்கான அனுமதியை அளித்தது. இதன்படி, ஆகஸ்ட் 10, 11 ஆகிய நாள்களில் இவர்கள் இருவரும் தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கத்தின் உறுப்பினர் கல்யாணசுந்தரத்துடன் சேர்ந்து மாநில தகவல் ஆணையத்தை ஆய்வு செய்தனர்.


""ஆய்வுக்கு அனுமதி அளித்ததுடன், ஆய்வு செய்தமைக்கான சான்றிதழையும் மாநில தகவல் ஆணைய அதிகாரிகள் தங்களுக்கு வழங்கினர்'' என்றார் வழக்கறிஞர் ரமேஷ்.


""இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் நீங்கலாக மற்ற அனைத்து அரசு அலுவலகங்களையும் பொது மக்கள் நேரடியாக ஆய்வு செய்து அங்கு நடைபெறும் நிர்வாக நடைமுறை விவரங்களை தெரிந்து கொள்ள வழிகாட்டும் விதமாக இந்த ஆய்வு அமைந்திருந்தது'' என்று அவர் மேலும் கூறினார்.

தகவல் தர மறுத்ததற்காக அபராதம் விதிக்கப்பட்ட பொது தகவல் அதிகாரிகள் பட்டியல், அவர்கள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என இந்த ஆய்வில் தெரிய வந்தது என்றார் மதியழகன்.


14 பதவிகள் காலி:

ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவரது பணி விவரங்கள், அதிகாரங்கள், செயல்பாடுகள், ஊதியங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
மாநில தகவல் ஆணையர் பதவி உள்பட மொத்தம் 14 பதவியிடங்கள் ஆணையத்தில் காலியாக இருப்பது தங்களது ஆய்வில் தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.



""தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கத்தை மேலும் விரைவுப்படுத்துவதில் இந்த ஆய்வு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது'' என்றார் ஆய்வின் போது உடன் இருந்த கல்யாணசுந்தரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக