சனி, 8 ஆகஸ்ட், 2009

சென்னை மாவட்ட ஆட்சியர் மீது ஆதிதிராவிடர் தேசிய ஆணையம் புகார்

சென்னை புரசைவாக்கம் - பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய பதில் அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் மீது ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தேசிய ஆணையத்தின் தமிழக இயக்குநர் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


சென்னை பெரம்பூர் பேரக்ஸ் பகுதியை சேர்ந்தவர் பி. கல்யாணசுந்தரம் (67). லஞ்சம் கொடாதோர் இயக்க உறுப்பினரான இவர் தனது பேரன் கே.எல். கெüதம் விக்னேஷுக்கு சாதிச் சான்றிதழ் கோரி புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 6-3-2008-ல் விண்ணப்பித்தார்.


தனது மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து கல்யாணசுந்தரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார். ஆனால், இதற்கும் வட்டாட்சியர் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லையாம்.


இந்தப் பிரச்னை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை ஆணையர், செயலர், முதல்வர் என அனைத்து தரப்பிலும் கல்யாணசுந்தரம் முறையிட்டார்.


இந்த முறையீடுகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த மைதிலி ராஜேந்திரன், புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியருக்கு பல முறை கடிதம் அனுப்பினார்.


இதன் பின்பும் சம்பந்தப்பட்ட மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து மனுதாரரையும், வட்டாட்சியரையும் மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் விசாரணைக்கு கடந்த ஜூன் 2-ம் தேதி அழைத்திருந்தார்.


இந்த விசாரணையில் ஆஜரான மனுதாரர், ""புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிப்போர் அங்குள்ள அதிகாரிகளால் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்; லஞ்சம் கொடுக்க மறுப்பவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்'' என்றும் தனது தரப்பு கருத்தை தெரிவித்தார்.


ஆனால், இந்த விசாரணையில் தாலுகா அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியரோ, அவரது தரப்பினரோ ஆஜராகவில்லை.
இந்த நிலையில், மனுதாரர் கல்யாணசுந்தரம் இது குறித்து ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில் (என்.சி.எஸ்.சி.) முறையிட்டார்.



இதன் அடிப்படையில் கல்யாணசுந்தரத்தின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கு என்.சி.எஸ்.சி.யின் தமிழக பிரிவு இயக்குநர் இ. தசரதன் கடிதம் எழுதினார்.


ஜூன் மாதம் 4-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியராக வி. ஷோபனா பொறுப்பேற்றது முதல் இந்த விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


இது தொடர்பாக, ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் தமிழக பிரிவு இயக்குநர் இ. தசரதன், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதிக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி கடிதம் (எண்: 2/15/2008 ரெப்.) அனுப்பினார்.


""கே.எல். கெüதம் விக்னேஷுக்கு சாதி சான்றிதழ் கோரும் மனு தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எவ்விதப் பதிலோ அல்லது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்த அறிக்கையோ வரவில்லை.


கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்த வேண்டும். அப்படி நடக்காவிட்டால், இந்த பிரச்னையில் ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் உரிமையியல் நீதித்துறை அதிகாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என இ. தசரதன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் பதில்:


இந்த பிரச்னை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வி. ஷோபனா கூறியது:
""இப் பிரச்னை தனது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. எனினும், இதில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக