ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

ரூ. 1.6 கோடியில் பொலிவு பெறுகிறது கீழ்க்கட்டளை ஏரி

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள கீழ்க்கட்டளை ஏரி ரூ. 1.6 கோடியில் புதுப் பொலிவு பெற உள்ளது. பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மடிப்பாக்கம் சந்திப்புக்கு முன்னர் அமைந்துள்ளது கீழ்க்கட்டளை ஏரி.

பல்லாவரம் ஏரியில் இருந்து வரும் உபரி நீரை உள்வாங்கி சேமித்து அதன் பிறகு உபரியாகும் நீர் பள்ளிக்கரனைக்கு செல்லும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது.

இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.

ரூ. 1.6 கோடி...:

இந்த நிலையில், தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் (என்.எல்.சி.பி.) கீழ் தமிழகத்தில் கீழ்க்கட்டளை ஏரி உள்பட 3 ஏரிகளை சீரமைத்து நவீனப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை இதற்கான திட்டத்தை ரூ. 1.6 கோடி மதிப்பீட்டில் தயாரித்துள்ளது. இதன்படி திட்டத்தின் மொத்த மதிப்பில் 70 சதவீதத் தொகை மத்திய அரசிடம் இருந்தும், 20 சதவீதம் மாநில அரசிடம் இருந்தும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் இருந்தும் பெறப்படும்.

முள்கம்பி வேலி...:

இந்த திட்டத்தின்படி 56 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்படும். வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் ஏரியின் எல்லைகள் கண்டறியப்பட்டு முள்கம்பி வேலி போடப்படும்.

இதனால் ஏரிக்குள் வெளி நபர்கள் உள்ளே நுழைந்து மாசுப்படுத்துவது, ஆக்கிரமிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்படும். மேலும், ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியின் நடுவில் சிறிய அளவிலான தீவு செயற்கையாக உருவாக்கப்பட்டு சுற்றுலா வளர்ச்சிக்கான படகு போக்குவரத்து தொடங்கப்படும்.

கழிவுநீரை சுத்தப்படுத்த...:

எரிமலைகளில் இருந்து வெளியாகும் ஒருவகை தாதுவை மண்ணுடன் கலந்து ஏரிக்குள் நீர் வரும் பகுதியில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஏரிக்குள் வரும் போதே கழிவுநீரை சுத்தப்படுத்த முடியும்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இதற்கான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை முகமைக்கு பொதுப்பணித்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

கண்காணிப்பு அமைப்பு பரிசீலனை:

மத்திய அரசின் தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கண்காணிப்பு அமைப்பான இந்த முகமை மூலம் கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.

இந்த திட்டத்துக்கு தனது பங்காக 10 சதவீதத் தொகையை வழங்குவது தொடர்பான தீர்மானத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்லாவரம் நகராட்சியின் மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசின் பங்கு உறுதி செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல புறநகரில் உள்ள மற்ற ஏரிகளையும் சீரமைத்து நவீனப்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக