வியாழன், 20 ஆகஸ்ட், 2009

"அப்பழுக்கற்ற' அரசு ஊழியர் யார்? குழப்பத்தில் வீட்டுவசதி வாரியம்

அரசின் விருப்ப உரிமை அடிப்படையில், "அப்பழுக்கற்ற' அரசு ஊழியர் என்ற பிரிவில் வீடு, மனைகளை ஒதுக்கீடு செய்வதில் வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உருவாக்கும் புதிய குடியிருப்புகள் மற்றும் மனைப் பிரிவுகளில் 10 சதவீதம் அரசின் விருப்ப உரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.


இதில் சிறப்பு வாய்ந்தவர்கள் என்ற பிரிவில் சாதனை படைத்தவர்கள், சிறப்பு வாய்ந்தவர்கள், பொது நிர்வாகத்தில் அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் என 2003-ல் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட இந்த பட்டியல் நடைமுறைக்கு வந்த பின்னர் பெரும்பாலும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களே அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்று கூறி அதிக ஒதுக்கீடுகளை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.


திருமணமாகாத, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க கூறப்பட்ட காரணம் கேள்விக்குறியாகியுள்ளது.


அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்ற பிரிவின் கீழ் வீடு, மனை பெற்றவர்களில் பலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதும் சிலர் தண்டிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


உதாரணமாக, அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று தமிழக அரசு முகப்பேர் ஏரித் திட்டத்தில் மனை ஒதுக்கீடு செய்த (அரசாணை எண்: 216. 13-3-2008) சுமதி ரவிச்சந்திரன் லஞ்சம் வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் வழங்குவதில் முறைகேடுகள் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகளால் சில மாதங்கள் முன்னர் கைது செய்யப்பட்டார்.


யார் சான்றளித்தது?

சுமதி ரவிச்சந்திரன் எப்போது, யாரால் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என சான்றளிக்கப்பட்டார் என்று விசாரித்தபோது, தங்கள் துறையில் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என யாரையும் சான்றளிக்கவில்லை என்று மத்திய அரசின் வெளியுறவுத் துறையும், பாஸ்போர்ட் வழங்கல் பிரிவு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் மேற்கூறிய பதில்களை (கடித எண்: எம்ஏஎஸ்.ஆர்டிஐ.206.09. 13-07-09) அளித்துள்ளனர்.


இத்தகைய சூழலில் எதன் அடிப்படையில் சுமதி ரவிச்சந்திரன் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று கண்டறியப்பட்டு அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டில் மனை ஒதுக்கீடு பெற்றார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.


இவர் மட்டுமல்ல அரசு அதிகாரத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நெருக்கமான அதிகாரிகள் பலரும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்களாக வீடு, மனை ஒதுக்கீடு பெற்று வருகின்றனர்.


தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று வீட்டுவசதி வாரியத்தின் முகப்பேர் கோட்ட அலுவலகத்தில், "பேக்ட்' அமைப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அண்மையில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்றுக் கூறி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான கோப்புகளில் உரிய ஆவணங்கள் இல்லாதது இந்த ஆய்வின்போது தெரியவந்துள்ளது.



மத்திய அரசிலும், தமிழக அரசிலும் எந்தத் துறையிலும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என அறிவிக்கப்படுவது, சான்றளிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் இல்லாத நிலையில் எதன் அடிப்படையில் இந்த ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.


குழப்பத்தில் அதிகாரிகள்:

""அரசிடம் இருந்து வரும் உத்தரவுகளின் அடிப்படையிலேயே மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மேலிடத்தில் இருந்து வருபவர்களிடம் உரிய ஆவணங்கள் கேட்டு கெடுபிடி செய்ய முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்'' என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் யார்? என்பது குறித்த உரிய வரைமுறைகள் இல்லாததால் மனை ஒதுக்கீட்டு பிரிவு அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக