சனி, 8 ஆகஸ்ட், 2009

அதிகரிக்கும் சுற்றுச்சுவர் விதி மீறல்கள்!

சென்னையில் குடியிருப்பு வளாகங்களில் சுற்றுச் சுவர் உயரம் தொடர்பான விதி மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விதி மீறல்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் மற்றவர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.


எதிர்வீட்டு சுற்றுச்சுவரின் உயரம் உங்கள் வீட்டு வெப்ப நிலையைப் பாதிக்கும் என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது பெரிய விஷயமாக தெரியாது.

ஆனால், கே.கே. நகர் பொப்பிலி ராஜா 91, 92 ஆகிய தெருக்களைச் சேர்ந்த மக்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது.


இங்குள்ள ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச் சுவரில் சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பி வலை வேலி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது கம்பி வேலி அகற்றப்பட்டு இரும்புத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

5 அடி உயரச் சுவர் மீது, 2 அடி உயரத்துக்கு இரும்புத் தட்டி பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு இத்தகைய இரும்புத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.


உச்சி வெயில் நேரத்தில் வெப்பக் கதிர்கள் தட்டிகள் மீது பட்டு பிரதிபலிப்பதால் சுற்றுப்புறத்தில் வெப்ப நிலை அதிகரிக்கிறது.


பெரிய சமதள பரப்பின் குறுக்கே சராசரிக்கும் அதிக உயரத்தில் இருக்கும் இந்தத் தட்டிகள் காற்றின் போக்கைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளதும் வெப்பம் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று "எக்ஸ்னோரா' உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுவும் விதி மீறலே...:

தனி வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் 2 மீட்டர் உயரம் வரை மட்டுமே சுற்றுச் சுவர் அமைக்கப்பட வேண்டும் என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வெளியிட்ட வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் (டி.சி.ஆர்.) குறிப்பிடப்பட்டுள்ளது.


பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள வளாகங்கள் தவிர வேறு வளாகங்களில் 2 மீட்டர் உயரத்துக்கு மேல் அனுமதியின்றி செயற்கையான இரும்புத் தட்டிகள் அமைப்பது விதிமீறல்தான் என்கின்றனர் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக