சனி, 22 ஆகஸ்ட், 2009

"முன்னுரிமைச் சான்றிதழ்' மோசடி! - விழிபிதுங்கும் வேலைவாய்ப்புத் துறை!

அரசுத் திட்டங்களுக்கு நிலம் அளித்ததாகக் கூறி வேலைவாய்ப்புக்கான "முன்னுரிமைச் சான்றிதழ்' வழங்கியதில் மோசடி நடந்திருப்பது குறித்த விவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட முன்னுரிமைச் சான்றிதழ்களை மீண்டும் சரிபார்க்க உத்தரவிடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கு தேவைப்படும் நிலங்கள் வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு நிலம் கையகப்படுத்தப்படும் பணிகளின் காரணமாக தங்களது வாழ்வாதாரமாக உள்ள முழு நிலத்தை இழக்கும் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான சான்றிதழ் அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் மூலம் அளிக்கப்படுகிறது.

இப்படி முன்னுரிமைச் சான்றிதழ் பெறக் குறைந்தது 2 ஏக்கரும், அதற்கு அதிகமாகவும் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறது.

இந்த சான்றிதழ்களைப் பயன்படுத்தி அந்த விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அவரவர் கல்வித் தகுதி அடிப்படையில் பதிவு செய்யும் போது பொது பட்டியலில் உள்ளவர்களைவிட இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்தகைய ஒரு சலுகை இருப்பதே தெரியாமல் ஏராளமானோர் அரசுக்கு நிலம் அளித்துவிட்டு நகர்ப்புறப் பகுதிகளுக்கு கூலித் தொழிலாளிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர்.

ஆனால், இந்த சலுகையை தவறாகப் பயன்படுத்தி பணம் பார்க்க நினைக்கும் சிலர், அரசு சார்பில் கையகப்படுத்தப்படும் நிலங்களின் விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து பத்து சென்ட், இருபது சென்ட் என்று பெயருக்கு குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்.

பின்னர் நிலங்களை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு உரிய இழப்பீட்டையும், நிலம் வழங்கியதாகக் கூறி வேலை வாய்ப்பு முன்னுரிமைக்கான சான்றிதழையும் பெற்றுக் கொள்கின்றனர்.

இதுபோல சான்றிதழ்களைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் உரிய கல்வித் தகுதியுடன் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் நபர்கள் அரசு பணி பெறுவதற்கான வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த மோசடியால் நிலம் வழங்கி அரசின் சலுகையை பெறவேண்டிய விவசாயிகளின் குடும்பத்தினரும், உரிய கல்வித் தகுதியுடன் பல ஆண்டுகளாக காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

நாமக்கல்லில்...: நாமக்கல்லில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற திடீர் சோதனையில் தரகர் முருகேசன் என்பவர் சிக்கினார்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதில் முன்னுரிமைச் சான்றிதழ் மோசடி குறித்த விவரங்கள் தெரியவந்தன.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இவ்வாறு மோசடியாக முன்னுரிமைச் சான்றிதழ் பெற்றுள்ளது உறுதியானது. மேலும் இதில் 25 பேர் பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஒரு வட்டாட்சியர், 2 வருவாய் ஆய்வாளர்கள், 12 கிராம நிர்வாக அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

வருவாய்த் துறை, வேலை வாய்ப்புத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் இந்த மோசடி அரங்கேறி வருவது விசாரணையில் நாமக்கல் சம்பவம் மூலம் வெளியே தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும்...: நாமக்கல் மட்டுமல்லாமல் திருச்சியிலும் இது போன்று மோசடியாக முன்னுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

"அரசுத் திட்டங்களுக்கு 2 ஏக்கர் நிலம் வரை அளிப்பவர்களுக்கே இந்த முன்னுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், 10 சென்ட் மற்றும் அதற்கும் குறைவாக நிலம் அளித்தவர்களுக்கும் மோசடியாக முன்னுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன' என ஊழல் ஒழிப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் "திருச்சி' வேங்கை தெரிவித்தார்.

ஏதோ ஒரு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வாக இதனை கருதாமல் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த மோசடி குறித்து வேலை வாய்ப்புத் துறை அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களில் வழங்கப்பட்ட அனைத்து முன்னுரிமைச் சான்றிதழ்களையும் மீண்டும் ஒரு முறை சரிபார்க்க உத்தரவிடுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக