சனி, 22 ஆகஸ்ட், 2009

ஆனூர் கந்தசாமி கோயில் குடமுழுக்கு நடப்பதில் சிக்கல்?

திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள ஆனூர் முருகன் கோயில் பராமரிப்புப் பணியில் உபயதாரர்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறையினருக்கும் இடையிலான பிரச்னை காரணமாக குடமுழுக்கு விழா திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


செங்கல்பட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பொன்விளைந்த களத்தூர் அருகில் உள்ளது ஆனூர் கிராமம். இங்கு செüந்தரவல்லி உடனுறை அஷ்டபுரீஸ்வரர் கோயில், வேதநாராயணப் பெருமாள் கோயில், கந்தசாமி கோயில் ஆகியவை உள்ளன.


பல்லவர் காலம், முதலாம் பராந்தகன், முதலாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் கால கல்வெட்டுகள் இந்த கோயில்களில் உள்ளன.


தொல்லியல் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த, இந்த கிராமத்தில் உள்ள பழமையான கந்தசாமி கோயில் கடந்த பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் இருந்தது.


இந்த கிராமத்தில் பிறந்து பணி நிமித்தம் வேறு ஊர்களில் குடியேறியவர்கள் பலர் மேற்கொண்ட முயற்சியால் ஆனூர், "ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை' 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிராம மக்களின் கோரிக்கை அடிப்படையில் இங்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கந்தசாமி கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்தனர்.


இதன்படி பல்வேறு கொடையாளர்களின் உதவியுடன் ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளையினர் கோயிலின் கருவறை, மகா மண்டபம், மூன்று நிலை ராஜகோபுரம், விநாயகர் சன்னதி, தரைகளில் கற்கள் பதித்தல், சுற்றுவர் சீரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதில் பெரும்பாலாண பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதால் செப்டம்பர் 4-ம் தேதி குடமுழுக்கு விழா நடத்த கிராம மக்களும், அறக்கட்டளையினரும் முடிவு செய்தனர். விழாவுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட நடைமுறைகளுக்காக இது குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலரிடம் ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளையினர் அணுகினர்.


இந்த நிலையில், கோயில் திருப்பணி குறித்த விளம்பரம் மற்றும் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் நன்கொடை பெறுவது குறித்து இடம் பெற்றிருந்த தகவல்கள் தொடர்பாக கோயில் செயல் அலுவலருக்கும், அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


செயல் அலுவலர் பதில்:

""நன்கொடை பெறுவது குறித்து நாளிதழ் விளம்பரத்திலும், விழா அழைப்பிதழிலும் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள் குறித்து அறக்கட்டளை நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது நிர்வாக நடைமுறையே தவிர குடமுழுக்கு விழாவை தடுக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை'' என இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் வெள்ளைச்சாமி தெரிவித்தார்.


அனுமதி கிடைக்கவில்லை:

எனினும், இதுவரை குடமுழுக்கு விழாவுக்கான அனுமதியை இந்து சமய அறநிலையத் துறை அளிக்காததால், விழா நடைபெறுமா என கிராம மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.


இரு தரப்பினருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு கெüரவப் பிரச்னையாக மாறி நூறாண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ள கந்தசாமி கோயில் குடமுழுக்கு விழாவை தடுத்துவிடாமல் அரசு உரிய நடவடிக்கை என்கின்றனர் ஆனூர் கிராம மக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக